திருச்சி மாவட்டம், எடமலைப்பட்டிபுதூர் கீழே பஞ்சப்பூர் தெருவைச் சேர்ந்தவர் சிதம்பரம். இவரது 16 வயது மகள் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்துவருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் (15.11.2021) வீட்டில் இருந்த மாணவி திடீரென மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் மாணவியின் பெற்றோர் எடமலைப்பட்டிபுதூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்தப் புகாரின் அடிப்படையில், எடமலைப்பட்டிபுதூர் காவல்துறையினர் வழக்குப் பதிவுசெய்து மாணவியைத் தேடிவருகின்றனர்.
அதேபோல், மற்றொரு சம்பவத்தில் நாகை மாவட்டம், பாலக்கோட்டு பகுதியைச் சேர்ந்த மகாலிங்கம் என்பவரின் 17 வயது மகள் வீட்டில் கோபித்துக்கொண்டு ரயில் ஏறி கடந்த சில தினங்களுக்கு முன்பு திருச்சிக்கு வந்தார். அப்போது பணியில் இருந்த ரயில்வே காவல்துறையினர் அந்த சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டனர். அதனைத் தொடர்ந்து, அவரை மீட்டு அரசு அனுமதியுடன் இயங்கும் காப்பகத்தில் ஒப்படைத்தனர். இந்நிலையில், கடந்த 12ஆம் தேதி காப்பகத்திலிருந்து அந்த மாணவி மாயமானார். இதுகுறித்து காப்பக கண்காணிப்பாளர் உடனடியாக காவல்துறையில் புகார் கொடுத்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர்.