school student cooldrinks police investigation

Advertisment

சேலத்தில், பள்ளி மாணவர்களைக்குறி வைத்து போதை மாத்திரை கலந்த குளிர்பானத்தைக் குடிக்க வைத்து, அவர்களை மிரட்டி பணம் பறிக்கும் கும்பலை தனிப்படை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

சேலத்தை அடுத்த சித்தனூரைச் சேர்ந்தவர் ராஜலட்சுமி (வயது 32). இவருக்கு 15 வயதில் ஒரு மகன் இருக்கிறார். அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. படித்து வருகிறான்.

Advertisment

கடந்த டிசம்பர் 1- ஆம் தேதி மாலையில் பள்ளி முடிந்து வீட்டுக்கு அரை மயக்க நிலையில் தள்ளாடியபடியே சென்றிருக்கிறான். அவனிடம் பெற்றோர் விசாரித்தனர். பள்ளி வளாகத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது அங்கு வந்த 5 பேர் கும்பல், தன்னிடம் குளிர்பானத்தை கொடுத்து குடிக்கச் சொன்னதாகவும், அந்த குளிர்பானத்தில் போதை மாத்திரை கலந்து இருப்பது தெரியாமல் குடித்து விட்டேன் என்றும் கூறியிருக்கிறான்.

அதிர்ச்சி அடைந்த மாணவனின் தாயார் ராஜலட்சுமி, இதுகுறித்து இரும்பாலை காவல்நிலையத்தில் புகார் அளித்தார். காவல்துறை விசாரணையில், பர்ன் அன் கோ தொழிற்சாலை அருகே வசிக்கும் சில வாலிபர்கள் வசதியான வீட்டு பள்ளி மாணவர்களைக் குறி வைத்து போதை மாத்திரை கலந்த குளிர்பானத்தைக் குடிக்க வைக்கின்றனர். அவர்கள் போதையில் ஆடுவதை செல்போனில் வீடியோவாக எடுத்து வைத்துக்கொண்டு மாணவர்களை மிரட்டி பணம் பறிக்கும் செயல்களில் ஈடுபட்டு வருவது தெரிய வந்துள்ளது.

போதை குளிர்பானம் சப்ளை செய்யும் கும்பலைக் கூண்டோடு பிடிக்க மாநகர காவல்துறையினர் திட்டமிட்டுள்ளது. இதற்கென தனிப்படை அமைத்து, அந்த கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர்.