புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகில் உள்ள பாப்பன்விடுதி கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி நாடிமுத்து, மகன் நித்திஷ்குமார் அதே ஊரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வந்தார். நாடிமுத்து மகளும் அதே பள்ளியில் படிக்கிறார்.
செவ்வாய் கிழமை மதியம் கழிவறைக்கு சென்று திரும்பிய நித்திஷ்குமாருக்கு திடீரென மயக்கம் வர ஆசிரியர்கள் மாணவனின் பெற்றோருக்கு தகவல் கொடுத்துள்ளனர். ஆனால், பெற்றோர் வெளியில் இருப்பதால் உறவினரை வரச் சொல்வதாக கூறியுள்ளார் நாடிமுத்து. அடுத்த சிறிது நேரத்தில் மாணவன் உடல்நிலை மோசமடைந்த நிலையில், மீண்டும் நாடிமுத்துவை தொடர்பு கொண்டு தகவல் சொல்லிவிட்டு ஆசிரியர் ஒருவர் மாணவனை அவனது வீட்டிற்கு அழைத்துச் சென்று விட்டு வந்துள்ளார்.
வீட்டிலிருந்த பாட்டி, அந்த வழியாகச் சென்ற ஒரு வாகனத்தின் மூலம் சிறுவனை ஆலங்குடியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முதலுதவி சிகிச்சை அளித்த மருத்துவர், உடனே மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார். ஆனால் புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரிக்கு சென்ற போது சிறுவன் உயிரிழந்த பரிதாபம் தெரிய வந்துள்ளது.
தகவல் அறிந்து சிறுவனின் உறவினர்கள் பள்ளியை முற்றுகையிட்டனர். புதன் கிழமை சிறுவன் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் சிறுவன் உடலில் விஷம் பாய்ந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் சிறுவன் உறவினர்கள் சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக சாலை மறியல் செய்தனர். அங்கு வந்த அதிகாரிகளிடம் ஆசிரியர்கள் சிறுவனை வீட்டில் அழைத்து வந்துவிட்ட நேரத்தில் சிகிச்சைக்கு அழைத்துச் சென்றிருந்தால் உயிரை காப்பாற்றி இருக்கலாம். அதனால் கவணக்குறைவாக செயல்பட்ட தலைமை ஆசிரியர் மற்றும் உதவி ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கும் வரை சடலத்தை வாங்கமாட்டோம் என்று கோரிக்கையும் வைத்தனர்.
நித்திஷ்குமார் உறவினர்களின் கோரிக்கையை ஏற்று கவனக்குறைவாக செயல்பட்ட பள்ளித் தலைமை ஆசிரியை மகேஸ்வரி, மற்றும் உதவி ஆசிரியர் ஆரோக்கிய அமல்ராஜ் ஆகியோரை கல்வித்துறை அதிகாரிகள் தற்காலிக பணியிடை நீக்கம் செய்துள்ளனர். அமைச்சர் மெய்யநாதன் பேச்சுவார்த்தை நடத்தினார். தொடர்ந்து தமிழக அரசு நிவாரணம் அறிவிக்கப்பட்டது. இதனால் பரபரப்பு சற்று குறைந்தது.
இந்த நிலையில் இன்று மீண்டும் பள்ளி திறக்கப்பட இருந்த நிலையில், மாணவ, மாணவிகள் பள்ளிக்குச் சென்ற போது சாலையில் கற்களை அடுக்கி தடுப்பு ஏற்படுத்தியிருந்த நிலையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்களை மீண்டும் பணியமர்த்தும் வரை மாணவர்கள் பள்ளிக்கு செல்லக்கூடாது என்று பெற்றோர்கள் தடுத்தனர். தொடர்ந்து மாணவர்களும் ஆசிரியர்களை பணியமர்த்தும் வரை சாப்பிடமாட்டோம் என்ற பதாகையுடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு தொடர்ந்து நீடிக்கிறது.