செல்போன் கேட்டு அடம்; பள்ளி மாணவன் 'அவசர முடிவு!'

school kid passed away cellphone issue in krishnagiri

'செல் போனால் சொல் போச்சு' எனக்கூறும் அளவுக்கு நம் வாழ்வில் செல்போன் இரண்டறக் கலந்துவிட்ட நிலையில், கிருஷ்ணகிரி அருகே ஒரு மாணவனின் உயிரைப் பறிக்கவும் காரணமாகி இருக்கிறது.

கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை அருகே உள்ள லிங்கனம்பட்டியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜன். இவருடைய மகன் ஹரீஷ் (17). அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். சிறுவன், தனது தந்தையிடம் தனக்கென தனியாக புதிய செல்போன் வாங்கித் தரும்படி கேட்டு வந்துள்ளார். அவரும் வாங்கித் தருகிறேன் என்று கூறி, காலம் கடத்தி வந்துள்ளார். ஆனாலும் மாணவன் திரும்ப திரும்ப கேட்டபோது, அவர் செல்போன் கொடுத்தால் படிப்பு கெட்டுவிடும் என்று, வாங்கித்தர முடியாது என திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

இதனால் கடும் ஏமாற்றம் அடைந்த சிறுவன் ஹரீஷ், வியாழக்கிழமை (மே 12) வீட்டின் அருகே உள்ள மாட்டுக் கொட்டகைக்குச் சென்றார். நீண்ட நேரமாகியும் மகன் வராததால் பெற்றோர் அங்கு சென்று பார்த்தனர். அங்கே ஹரீஷ் மயக்கம் அடைந்த நிலையில் கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக சிறுவனை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவர்கள் பரிசோதனையில் அவர் விஷம் குடித்து இருப்பது தெரியவந்தது. அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்ட சிறுவனுக்கு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும், சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து ராயக்கோட்டை காவல்நிலைய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Salem
இதையும் படியுங்கள்
Subscribe