Skip to main content

பள்ளியை திறக்க சென்ற மாணவி பிணமாக மீட்பு

Published on 03/04/2019 | Edited on 03/04/2019

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே மெய்யாத்தூர் கிராமத்தில் அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் அதே ஊரை சேர்ந்த ஏழுமலை, உமா தம்பதியரின் இளைய மகள் துர்காதேவி (13) அதே பள்ளியில் 8-ம் வகுப்பு பயின்று வருகிறார். மாணவி கல்வியில் சிறந்து விளங்கியதாலும் அவரது வீடு பள்ளிக்கு அருகில் உள்ளதாலும் பள்ளியின் தலைமை ஆசிரியர் மாணவியிடம் தினந்தோறும் காலையிலே பள்ளியை திறக்ககோரி சாவியை கொடுத்துள்ளார்.

 

school student found dead

 

அதன்படி மாணவியும் பள்ளியை தினம்தோறும் திறந்து வைத்து வந்துள்ளார். இந்த நிலையில் மாணவி துர்கா புதன்கிழமை காலை 8 மணிக்கு வீட்டில் இருந்து சாவியை எடுத்துக்கொண்டு பள்ளியை திறக்க சென்றுள்ளார். அதன் பிறகு வீட்டிற்கு வரவில்லை. மாணவியின் பெற்றோர்கள் தேர்வு நேரம் என்பதால் பள்ளியிலே உட்கார்ந்து படித்துக்கொண்டு இருக்கலாம் என்று எண்ணி வீட்டிலே இருந்துள்ளனர்.
 

இதனைத்தொடர்ந்து பள்ளிக்கு வந்த மாணவர்களில் ஒருவர் கழிவறைக்கு சென்றுள்ளார். அப்போது மாணவி தூக்கில் தொங்கிய நிலையை கண்டு அதிர்ச்சி அடைந்து அலறிஅடித்துக்கொண்டு ஓடி தலைமை ஆசிரியர் உள்ளிட்ட ஆசிரியர்களிடம் கூறியுள்ளார்.
 

அதனைதொடர்ந்து குமராட்சி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன்பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து மாணவியின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்கு விழுப்புரம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர்.

 

இதுகுறித்து இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் கடலூர் மாவட்ட செயலாளர் தேன்மொழி கூறுகையில், மாணிவியின் சாவில் மர்மம் உள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் இந்த பகுதியில் தொடர்ந்து நடைபெறுகிறது. பள்ளியின் ஆசிரியர்களிடம் சரியான முறையில் விசாரணை நடத்த வேண்டும். சம்பந்தப்பட்டவர்கள் மீது போக்ஸோ சட்டத்தின் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும். உடற்கூறு ஆய்வு அறிக்கை வந்த பிறகு எங்களின் அடுத்தகட்ட நடவடிக்கையை எடுப்போம் என்கிறார்.

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

அரசுப் பேருந்தில் நடத்துநராகப் பணியாற்றிய பள்ளி மாணவி!

Published on 07/02/2024 | Edited on 07/02/2024
schoolgirl who worked as a conductor in a government bus

கர்நாடக மாநிலம் அப்சல்பூர் கட்டஹாரா கிராமத்தைச் சேர்ந்த வித்யா 8 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில், மாணவி வித்யாவிற்கு பேருந்து நடத்துநராகப் பணியாற்ற வேண்டும் என்ற ஆசை நீண்ட நாட்களாக இருந்து வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து மாணவி வித்யா தன்னுடைய நடத்துநர் ஆசை குறித்து போக்குவரத்து பணிமனை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.

மாணவி வித்யாவின் ஆசையைக் கேட்ட அதிகாரிகள் அதனை நிச்சயம் நிறைவேற்றுவதாகக் கூறியுள்ளனர். முதலில் மாணவி வித்யாவிற்கு எவ்வாறு பயணச்சீட்டு கொடுக்க வேண்டும் என்று பயிற்சி கொடுத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து மாணவி வித்யா கட்டஹாரா வரை செல்லும் அரசுப் பேருந்தில் நடத்துநராகப் பணி செய்ய அனுமதி அளித்தனர். 

பின்னர், அதன்படி அப்சல்பூரில் இருந்து கட்டஹாரா வரை செல்லும் அரசுப் பேருந்தில் மாணவி வித்யா நடத்துநராகப் பணி செய்தார். அவருடன் நடத்துநரும் இருக்கையில், பயணிகளிடம் எங்கு செல்கிறார்கள் என்று கேட்டு, உரிய பயணச்சீட்டை வழங்கினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியான நிலையில் மாணவிக்கும், அவரின் ஆசையை நிறைவேற்றிய போக்குவரத்து அதிகாரிகளுக்கும் இணையவாசிகள் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர். 

Next Story

விடுமுறைக்கு வந்த சிறுமியை தவறான பாதைக்கு உட்படுத்திய அத்தை; போக்சோவில் நடவடிக்கை எடுத்த போலீஸ்

Published on 04/02/2024 | Edited on 04/02/2024
 The aunt who took the vacationing girl astray; Police take action in POCSO

சென்னையில் சிறுமியை மிரட்டி பாலியல் தொழிலுக்கு உட்படுத்திய சிறுமியின் அத்தை உள்ளிட்ட மூன்று பெண்களை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கோயம்பேடு பகுதியைச் சேர்ந்த சிறுமி ஒருவர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் செய்த சோதனைகளின் அடிப்படையில் அச்சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதும், சிறுமி கர்ப்பமாக இருந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து கோயம்பேடு காவல் நிலையத்திற்கு மருத்துவர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் சம்பந்தப்பட்ட சிறுமியிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் கடந்தாண்டு காலாண்டு தேர்வு விடுமுறையில் அத்தை வீட்டிற்கு வந்திருந்த சிறுமியை அத்தை மற்றும் மூன்று பெண்கள் சேர்ந்து பாலியல் தொழிலுக்கு உட்படுத்தியுள்ளனர். அதனைத் தொடர்ந்து சிறுமி கர்ப்பம் ஆனது தெரியவந்தது. இந்த கொடூர சம்பவத்தை தொடர்ந்து சிறுமியை பாலியல் தொழிலுக்கு உட்படுத்திய சிறுமியின் அத்தை மற்றும் மூன்று பெண்களை கோயம்பேடு காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.