Skip to main content

12ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை! 

Published on 26/07/2022 | Edited on 26/07/2022

 

School girl passed away near virudhachalam


கடலூர் மாவட்டம், விருதாச்சலம் ஆயியார் மடத்தை சேர்ந்தவர்கள் கோபி-இளவரசி தம்பதியினர். கோபி, விருதாச்சலத்தில் செல் சர்வீஸ் சென்டர் கடை நடத்தி வருகிறார். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ள நிலையில், இரண்டாவது மகள் விருதாச்சலம் வடக்கு பெரியார் நகரில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார்.

 

இந்நிலையில், நேற்று பள்ளிக்குச் சென்ற மாணவி மாதாந்திர தேர்வு எழுதி உள்ளார். தேர்வு எழுதிவிட்டு பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்த மாணவி, மிகுந்த மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று இரவு 9 மணியளவில், வீட்டில் யாரும் இல்லாத போது, வீட்டில் உள்ள அறையில் துணியால் தூக்கு மாட்டிக் கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்பிய மாணவியின் பெற்றோர்கள், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட மகளை கண்டதும் கதறி அழுதனர்.

 


இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று, மாணவியின் உடலை தூக்கு கயிற்றில் இருந்து கீழே இறக்கி உள்ளனர். பின்னர் மாணவியின் உடலை அடக்கம் செய்வதற்காக, மாணவியின் பெற்றோர்கள் மற்றும் அவரது உறவினர்கள் பந்தல் அமைத்து இறுதிச் சடங்குக்கான வேலைகளை செய்து கொண்டிருந்தனர். இதனிடையே இதுகுறித்து விருதாச்சலம் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்ததால், விரைந்து சென்ற காவல்துறையினர், இறுதி சடங்குக்காக வைக்கப்பட்டிருந்த மாணவியின் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக விருதாச்சலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். 

 


மாணவி மிகவும் திறமைசாலி எனவும், கடந்த சில நாட்களாக கடும் மன அழுத்தத்தில் இருந்ததாகவும், சரியாக படிக்க முடியவில்லை என்று கூறியதாக சொல்லப்படுகிறது. மாணவியின் தற்கொலைக்கான காரணம் என்ன என்பதையும், தற்கொலை செய்து கொண்ட மாணவி இறப்பதற்கு முன்பு கடிதம் ஏதாவது எழுதி வைத்துள்ளாரா? என காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாக்கு இயந்திரத்தில் கோளாறு; இன்னும் தொடங்கப்படாத வாக்குப்பதிவு!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Voting machines malfunction in 10 polling stations in Cuddalore
கோப்புப்படம்

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடலூரில்  உள்ள 10  வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு எந்திரங்களில் கோளாறு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  அதனால் கடந்த ஒரு மணி நேரத்திக்கும் மேலாக அப்பகுதியில் வாக்குப் பதிவு  தொடங்கப்படாமல் இருக்கிறது. தேர்தல் அதிகாரிகள் மாற்று வாக்குப் பதிவு எந்திரம் மூலம் வாக்குப் பதிவு தொடங்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தாமதமாகும் வாக்குச்சாவடியில் மக்கள் தங்களது ஜனநாயக கடமையாற்ற நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். காலை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு தொடங்கப்படாமல் இருப்பதால் மாலை ஒரு மணி நேரம் கூடுதலாக ஒதுக்கப்படுமா என்பது குறித்து தேர்தல் தலைமை அதிகாரி தெரிவிப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

காவு வாங்கிய குளம்; கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்திய சிறுவர்களின் உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 The pool of water; The lost their live of the boys left the village in mourning

கடலூரில் குளத்தில் இறங்கி குளிக்க முயன்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது நந்தீஸ்வர மங்கலம். இந்தக் கிராமத்தில் வசித்து வந்த ராமமூர்த்தி என்பவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். திலீப் ராஜ்(16), தினேஷ்(14) ஆகிய இரு மகன்களும் வெளியூரில் விடுதியில் தங்கி படித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.

சிறுவர்கள் திலீப் ராஜ் மற்றும் தினேஷ் ஆகியோர் வீட்டுக்கு அருகே உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளனர். அப்பொழுது ஆழமான பகுதிக்கு இருவரும் குளிக்கச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் நீரில் மூழ்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குளத்துக்கு குளிக்கச் சென்ற சிறுவர்கள் காணாமல் போனதால் பதறியடித்த பெற்றோர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு குளத்தில் இறங்கி தேட ஆரம்பித்தனர். பின்னர், வெகு நேரத்திற்கு பின் இருவரின் உடலையும் கைப்பற்றிய மீட்புப்படையினர் உடல்களை கரைக்கு கொண்டு வந்தனர். சிறுவர்களின் உடல்களை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். உயிரிழந்த சிறுவர்கள் இருவரின் உடலும் காட்டுமன்னார் கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விடுதியில் தங்கிப் படித்து வந்த சிறுவர்கள் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த நிலையில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.