sko

Advertisment

மதுரை அச்சம்பட்டியில் காதலிக்க மறுத்ததால் பெட்ரோல் ஊற்றி தீவைத்து எரிக்கப்பட்ட பள்ளி மாணவி சித்ரா தேவி சிகிச்சை பலனின்றி இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தார்.

மதுரை திருமங்கலத்தை அடுத்த நடுவக்கோட்டையைச் சேர்ந்த மணிப்பாண்டி, பேச்சியம்மாள் என்ற தம்பதியின் மகள் சித்திராதேவி. 14 வயது நிரம்பிய இவர் திரளியை அடுத்த அச்சம்பட்டியில் உள்ள அரசுப் பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த மாணவியை அதே பகுதியைச் சேர்ந்த சந்தானம் என்பவரின் மகன் பாலமுருகன் (23), ஒருதலையாக காதலித்துள்ளார். இவர் மாணவியிடம் காதலிக்கும்படியும், திருமணம் செய்துகொள்வோம் என்றும் பள்ளிக்கு சென்று வரும்போது அடிக்கடி வற்புறுத்தியுள்ளார்.

Advertisment

இதனை பெற்றோரிடம் சித்திராதேவி தெரிவித்ததை அடுத்து, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மாணவியின் தந்தை மணிபாண்டி திருமங்கலம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, பாலமுருகன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். இதனால் பாலமுருகன் ஆத்திரத்தில் இருந்துள்ளார்.

இந்நிலையில் காதலர் தினத்தன்று தனது காதலை ஏற்றுக்கொள்ள முடியுமா என்று இறுதியாக கேட்டுள்ளார். அப்போதும் மாணவி மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அவர், கடந்த 16ம் தேதி பள்ளி முடிந்து பேருந்துக்காக காத்திருந்த போது, இருசக்கர வாகனத்தில் வந்து மாணவியின் உடலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துவிட்டு ஓடிவிட்டார்.

இதைக்கண்டு அக்கபக்கத்தில் இருந்தவர்கள் தீயை அனைத்துள்ளனர். பின்னர் மாணவியை திருமங்கலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சித்ராதேவி சிகிச்சை பலனின்றி இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தார்.