Skip to main content

பள்ளிக்கட்டணத்தை உடனே செலுத்து! தனியார் பள்ளிகளின் அடாவடி!

Published on 27/05/2020 | Edited on 27/05/2020




கரோனா வைரஸ் தொற்று பொது முடக்கத்தின் போது கல்விக்கட்டணத்தை வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் கூறியதை, அப்படியே காற்றில் பறக்கவிட்டு, இன்ன தேதிக்குள் கல்விக்கட்டணத்தை செலுத்தியே ஆகவேண்டுமென பெற்றோர்களுக்கு ஓலை அனுப்பியுள்ளது சில தனியார் பள்ளி நிறுவனங்கள்.


சிவகங்கை மாவட்டத்தினை பொறுத்தவரை சிவகங்கை கல்வி மாவட்டம் எனவும், தேவக்கோட்டை கல்வி மாவட்டம் எனவும் நிர்வாக ரீதியாக இரண்டாகப் பிரிக்கப்பட்டிருந்தாலும் ஒட்டு மொத்தமாக அரசு உயர்நிலை பள்ளி, அரசு மேல்நிலைப்பள்ளி, நகராட்சி உயர்நிலை பள்ளி, புனர்வாழ்வு மேல்நிலைப்பள்ளி, சமூக நல பள்ளி, அரசு உதவிபெறும் உயர்நிலை பள்ளி, அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளி, சுய நிதி உயர்நிலை பள்ளி, சுய நிதி மேல்நிலைப்பள்ளி, ஆதிதிராவிடர் உயர்நிலை பள்ளி, ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளி, அரசு மாதிரி பள்ளிகள் உள்ளிட்ட 206 அரசு பள்ளிகளும், தனியார் பள்ளிகளான மெட்ரிக் பள்ளிகள் சுமார் 60க்கும் மேற்பட்டவைகளும், சிபிஎஸ்இ பள்ளிகள் 15க்கு மேற்பட்டும் இயங்கி வருகின்றன. கரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 25 முதல் பொது ஊரடங்கு அறிவிக்கப்பட்டு அனைத்து பள்ளிக்கல்வி நிலையங்களுக்கும் கட்டாய விடுமுறை அளிக்கப்பட்டது. நடைமுறையில் இருக்கும் இந்த ஊரடங்கு வருகின்ற 31ம் தேதி நிறைவடையும் தருவாயில், அடுத்து ஊரடங்கு தொடருமா.? பள்ளியை எப்பொழுது திறக்கலாம்..? பல கட்ட ஆலோசனைகளை நடத்தி வருகின்றது மாநில அரசு.

 

 


இது இப்படியிருக்க ஆலோசனையில் பங்கேற்ற பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனோ, "பொது முடக்கத்தின்போது தனியார் பள்ளிகள் ஆன்லைனில் வகுப்பு எடுக்கக்கூடாது.! கல்விக் கட்டணமும் வசூலிக்கக் கூடாது.! இதனை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியவர், "பள்ளி தாமதமாக திறக்கவுள்ளதால் பாடத்திட்டத்தினை குறைக்கவும் ஆலோசனை நடத்துவதாகவும்" அறிவித்திருந்தார். அதற்கடுத்த சில நொடிகளிலேயே, அமைச்சர் அறிவித்ததனை புறந்தள்ளி சிவகங்கையை சேர்ந்த தனியார் பள்ளி ஒன்றும், காரைக்குடியை சேர்ந்த தனியார் பள்ளி ஒன்றும் "அரசாங்க ஆணைப்படி தேர்ச்சிப் பெற்ற நீங்கள் அனைவரும் இன்ன தேதிக்குள் பள்ளிக்கட்டணத்தையும், புத்தகக்கட்டணத்தையும் செலுத்தியாக வேண்டுமென" அந்தப் பள்ளியில் பயிலும் மாணாக்கர்களின்  பெற்றோர்களுக்கு ஓலையை அனுப்பியது. 
 

nakkheeran app




"கடுமையான அதிர்ச்சி இது! அடுத்த வேளை உணவிற்கே போராடும் லாக்டவுன் காலத்தில் அமைச்சர் கூறிய கூற்றுக்கு என்ன மரியாதை இங்குள்ளது.? தங்களுடைய சுய நலத்தை மட்டுமே கருத்தில் கொண்டு, பணம் வசூலிப்பதையே கருத்தாக கொண்டு செயல்படும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்கிறார் சிவகங்கையை சேர்ந்த சமூக ஆர்வலரான சோனைமுத்து. 

இதுகுறித்து கருத்தறிய சிவகங்கை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் பாலு முத்துவை தொடர்பு கொண்டபோது, " இது கண்டிக்கதக்கது.! அரசின் உத்தரவினை மீறும் அந்தப் பள்ளிகள் மீது  மீது நடவடிக்கை பாயும்.!" என்றார். 

இந்நிலையில், ஓலை அனுப்பிய இரு தனியார் பள்ளிகளில், காரைக்குடியை தனியார் பள்ளி நிர்வாகம், "இது தவறுதலாக நடந்துவிட்டது. அரசு அறிவித்தபின் பள்ளிக்கட்டணத்தைக் கட்டலாம்" என ஜகா வாங்கியது., பள்ளிக்கட்டண விவகாரம் பெற்றோர்களிடையே கடும் அதிர்ச்சியையும், கடும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.    

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

காரைக்குடியில் அமித்ஷாவின் ரோடு ஷோ திடீர் ரத்து!

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
Amit Shah's road show suddenly canceled in Karaikudi

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதன்படி திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

அந்த வகையில் தேர்தல் பிரச்சாரத்திற்காக இரண்டு நாள் பயணமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை (12.04.2024) தமிழகம் வருகிறார். இந்த பயணத்தின் போது பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்கிறார். அமித்ஷாவின் பயணத்திட்டத்தின் படி நாளை சிவகங்கை மற்றும் மதுரையில் வாகனப் பேரணி மூலம் வாக்கு சேகரிக்கிறார் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து நாளை மறுநாள் (13.04.2024) கன்னியாகுமரியில் பரப்புரையில் ஈடுபடுகிறார். இதனையடுத்து அன்று மாலை நாகப்பட்டினத்தில் நடைபெறும் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். மேலும் தென்காசியில் நடைபெறும் வாகனப் பேரணியில் கலந்துகொள்கிறார். அதே சமயம் நாளை மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அமித்ஷா சாமி தரிசனம் செய்கிறார்.

இதன்படி சிவகங்கை பாஜக வேட்பாளர் தேவநாதனை ஆதரித்து காரைக்குடியில் அமித்ஷா நாளை ரோடு ஷோ நிகழ்ச்சி நடத்த உள்ளார் என பயணத்திட்டம் வகுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், மத்திய அமைச்சர் அமித்ஷாவின் ரோடு ஷோ நிகழ்ச்சி திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. முன்னதாக தேவநாதன் ரூ. 525 கோடி மோசடி செய்துள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டதும், சென்னையில் பிரதமர் மோடி நேற்று முன்தினம் நடத்திய ரோடு ஷோவுக்கு போதிய வரவேற்பு இல்லை என்ற விமர்சனமும் மக்கள் மத்தியில் எழுந்தது கவனிக்கத்தக்கது. 

Next Story

சிறுத்தை நடமாட்டம்; தனியார் பள்ளிக்கு விடுமுறை அறிவிப்பு!

Published on 03/04/2024 | Edited on 03/04/2024
Leopard movement; Holiday announcement for private school

சிறுத்தை நடமாட்டம் காரணமாக மயிலாடுதுறையில் உள்ள தனியார் பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் செம்மங்குளம் பகுதியில் நேற்று (02.04.2024) இரவு 11 மணியளவில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது. அதனைத் தொடர்ந்து சிறுத்தை நடமாட்டம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இது குறித்து மயிலாடுதுறை போலீசார் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதனைத் தொடர்ந்து வனத்துறையினர் சிறுத்தையை தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் சிறுத்தையை பிடிப்பதற்காக வனத்துறை சார்பில் கோவையில் இருந்து தனிப்படை ஒன்று விரைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் செம்மங்குளம் பகுதியில் உள்ள தனியார் பள்ளிக்கு இன்று (03.04.2024) ஒரு நாள் மட்டும் விடுமுறை அளித்து மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி உத்தரவிட்டுள்ளார்.