Skip to main content

பள்ளி ஆண்டு விழாவில் கிராம பெண்களை சாமியாட வைத்த அரசுப் பள்ளி மாணவிகளின் நடனம்!

Published on 25/02/2020 | Edited on 25/02/2020

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் உருவம்பட்டி கிராமத்தில் 17 வருடங்களுக்கு முன்பு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் கடந்த சில ஆண்டுகளாக பள்ளியின் சிறப்புகளைப் பார்த்து பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்த்து வருகின்றனர். பள்ளி மீது பெற்றோர்களின் நம்பிக்கையை அதிகரிக்கும் விதமாக பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி மாணவர்களின் தனித் திறன்களை வெளிக் கொண்டு வருகிறார்கள் தலைமை ஆசிரியை சாந்தி தலைமையிலான சக ஆசிரியர்கள். பெற்றோர்களுக்கும் சிறப்பு செய்யப்படுவதுடன் ஒவ்வொரு மாதமும் பெற்றோர் ஆசிரியர் கழகக் கூட்டங்களை நடத்தி வருகின்றனர்.

school annual day students dance peoples in pudukkottai district

இந்த நிலையில் தான் பள்ளி தொடங்கிய காலத்தில் இருந்து இதுவரை ஆண்டுவிழா நடத்தப்படவில்லை. பக்கத்து கிராம பள்ளிகளில் எல்லாம் ஆண்டுவிழா நடக்கும் போது எங்கள் குழந்தைகள் ஏங்கி தவிக்கின்றனர். அதனால் இந்த வருடம் ஆண்டுவிழா நடத்த வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை வைத்தனர். ஆசிரியர்களும் ஆண்டு விழாவுக்கான ஏற்பாடுகளை செய்ததுடன் தற்போது படிக்கும் மாணவர்களை மட்டுமின்றி முன்னாள் மாணவர்களுக்கு கலை நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிட்டு பயிற்சி கொடுத்தனர்.

school annual day students dance peoples in pudukkottai district

திங்கள் கிழமை முதல் ஆண்டுவிழா என்பதால் கிராமமே மின் விளக்குகளால தோரணம் கட்டி ஜொலித்தது. மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் தொடங்கியது பக்கத்து கிராம இளைஞர்களும் கலந்து கொண்டனர். சில பாடல்களும் அதற்கான ஆட்டமும் மக்களை கவர்ந்த நிலையில் அம்மன் பாடலுக்கு மேடையில் மாணவ, மாணவிகள் நடனமாடிக் கொண்டிருக்க மேடைக்கு முன்னால் கீழே சில மாணவிகள் தீ சட்டியுடன் வர முன்னாள் மாணவி ஒருவர் மாலை அணிந்து கொண்டு அம்மன் வேடமணிந்து சூலாயுதத்துடன் ஆடிக் கொண்டு வர இதைப் பார்த்து பக்தி பரவசத்துடன் அங்கு திரண்டிருந்த பெண்கள் ஒவ்வொருவராக எழுந்து சாமி ஆடத் தொடங்கிவிட்டனர். அந்தப் பாடல் முடியும் போது கூட்டத்தில் 10- க்கும் மேற்பட்டவர்கள் சாமியாடிக் கொண்டிருந்தனர். அதே போல  மாணவர்களின் கருப்பசாமி பாடலுக்காக நடனத்தின் போது கூட்டத்தில் இருந்த ஆண்கள் பலர் சாமியாடத் தொடங்கிவிட்டனர்.
 

மாணவ, மாணவிகளின் முதல் ஆண்டுவிழா நடனம் மொத்த கிராம மக்களையும் ஆட்டிவைத்துவிட்டதை பார்த்து அங்கே வந்திருந்த அதிகாரிகளும், குவிந்திருந்த கிராம மக்களும் விழா ஏற்பாடுகள் செய்திருந்த ஆசிரியர்களையும், விழாக்குழுவினரையும், மாணவர்களையும் பாராட்டினார்கள். ஆண்டுவிழா காண வந்த அனைவருக்கும் மரக்கன்றுகள் பரிசும் வழங்கப்பட்டது.


 

சார்ந்த செய்திகள்

Next Story

திருநங்கையால் வளர்க்கப்பட்ட முளைப்பாரிகள்! அம்மன் கோயிலுக்கு தூக்கிச் சென்று வழிபட்ட பெண்கள்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
women who took sprouts raised by transgender woman to Amman Koil and worshipped them

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகில் உள்ளது கல்லாலங்குடி கிராமம். இங்குள்ள பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோயில் திருவிழா சித்திரை மாதத்தில் காப்புக்கட்டுதலுடன் தொடங்கி ஒரு வாரத்திற்கு மேல் நடக்கும். இதில் கல்லாலங்குடி, ஆலங்காடு, பள்ளத்திவிடுதி, சூரன்விடுதி, சிக்கப்பட்டி, சம்புரான்பட்டி, கல்லம்பட்டி, ஊத்தப்பட்டி கிராமங்களைச் சேர்ந்தவர்கள் திருவிழாக்களை கொண்டாடுவார்கள். மேலும் சுற்றியுள்ள பல கிராமமக்களும் திருவிழாவில் கலந்து கொள்வார்கள்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் பகுதி பெண்கள் இணைந்து சித்ரா பவுர்ணமி குழ அமைத்து முளைப்பாரி எடுக்கத் தொடங்கினர். விநாயகர் கோயிலில் இருந்து குறைவானவர்களே முளைப்பாரி தூக்கி வந்து வழிபட்டனர். இந்த நிலையில் தான் கம்மங்காடு உதயா உள்ளிட்ட சில திருநங்கைகள் வந்து கல்லாலங்குடி முத்துமாரியம்மனுக்கு கிராம மக்கள் எல்லோரும் முளைப்பாரி தூக்க வேண்டும் என்று கூறியதுடன் சித்ரா பவுர்ணமி குழு பெண்களுடன் இணைந்து கடந்த ஆண்டு ஒரே மாதிரியான பாத்திரங்களில் விதைகளை தூவி 9 நாட்கள் விரதமிருந்து நூற்றுக்கணக்கான முளைப்பாரிகளை வளர்த்து பெண்களிடம் கொடுத்து ஊர்வலமாக தூக்கிச் சென்று அம்மனை வழிபட்டனர்.

அதே போல இந்த ஆண்டு கடந்த 10 நாட்களுக்கு முன்பு வந்த திருநங்கை உதயா பவுர்ணமி விழாக்குழு மூலம் முளைப்பாரி தூக்குவோரின் பெயர்களை முன்பதிவு செய்து, கோயிலுக்கு அருகில் உள்ள ஒரு சமுதாயக்கூடத்தில் வைத்து சுமார் 400 முளைப்பாரிகளை ஒரே மாதிரியான அலுமினிய பாத்திரத்தில் ஒரே மாதிரியான விதைகளை தூவி, விரதமிருந்து விதை தூவிய பாத்திரத்திற்கு காலை, மாலை என இரு நேரமும் தண்ணீர் தெளித்து, பவுர்ணமி குழுவினர் உதவியுடன் வளர்த்து வந்தார். அனைத்து பாத்திரங்களிலும் ஒரே மாதிரியாக பயிர்கள் வளர்ந்திருந்தது.

செவ்வாய் கிழமை முளைப்பாரித் திருவிழாவிற்கு முன்பதிவு செய்த பெண்கள் ஒரே மாதிரியான சேலையில் வந்தனர். இந்த அழகைக்கான ஆயிரக்கணக்கானோர் வந்திருந்தனர். வளர்ந்திருந்த முளைப்பாரிகளை அலங்கரித்து வைத்து ஒரு குடத்தில் அம்மன் சிலை வைத்து பூ அலங்காரம் செய்து வைத்திருந்த நிலையில் கோயில் பூசாரியிடம் அலங்காரத்தில் இருந்த அம்பாள் குடத்தையும் முளைப்பாரிகளை பெண்கள் தலையிலும் தூக்கி வைத்த உதயா அருளாட்டத்துடன் பூசணிக்காய் உடைக்க முத்துமாரியம்மன் கோயிலில் இருந்து தாரை தப்பட்டை முழக்கத்துடன் புறப்பட்ட ஊர்வலம் சுமார் 5 கி மீ தூரத்திற்கு பல பகுதிகளுக்கும் சென்று மீண்டும் முத்துமாரியம்மன் கோயில் வளாகம் வந்தடைந்தது.

women who took sprouts raised by transgender woman to Amman Koil and worshipped them

அனைத்து முளைப்பாரிகளும் கோயில் வளாகத்தில் இறக்கி வைக்கப்பட்டுள்ள நிலையில் இன்று புதன் கிழமை மாலை 4 மணிக்கு மீண்டும் அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் செய்து முளைப்பாரியை ஊர்வலமாக தூக்கிச் சென்று அருகில் உள்ள குளத்தில் விடுகின்றனர். ஒவ்வொரு கிராமத்திலும் முளைப்பாரி திருவிழா என்றால் அவரவர் வீடுகளில் நமண்சட்டிகளில் அல்லது வெவ்வேறு பாத்திரங்களில் மண் நிரப்பி நவதானிய விதை தூவி பயிர் வளர்த்து திருவிழா நாளில் தூக்கி வந்து ஊரின் ஓரிடத்தி்ல் ஒன்று கூடி மண்ணடித்திடலைச் சுற்றி வந்து குளங்களில் விட்டுச் செல்வது வழக்கமாக இருக்கும்.

ஆனால் கல்லாலங்குடி முத்துமாரியம்மனுக்கு திருநங்கை விரதமிருந்து ஒரே இடத்தில் நூற்றுக்கணக்கான முளைப்பாரிகளை வளர்த்து கிராம மக்களை அழைத்து தூக்கச் செய்து அம்மனை வழிபடச் செய்கிறார் என்பது பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. முளைப்பாரியை சிறப்பாக செய்திருந்த திருநங்கை உதயாவிற்கு விழாக்குழு சார்பில் மரியாதை செய்தனர்.

Next Story

வாழைமரம் தோரணங்களோடு தயாரான மாதிரி வாக்குப் பதிவு மையம்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Voting registration center ready with banana trees

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி(நாளை) தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் பரபரப்புரை பரபரப்புகள் அடங்கியுள்ள நிலையில் ஆங்காங்கே வாக்குச் சாவடிகள் தயாராகிவிட்டது. மாதிரி வாக்குச் சாவடி என்று ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் சில வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.

Voting registration center ready with banana trees

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள வாக்குச் சாவடியில் ஒரு வாக்குச் சாவடியைத் தேர்வு செய்து மாதிரி வாக்குச் சாவடியாக அமைக்கப்பட்டுள்ளது. வாக்குப் சாவடிக்கு முன்பு வாழை மரம், தோரணங்கள் கட்டி வாசலில் வண்ணக் கோலமிட்டு பூ, பழம் தாம்பூலம் தட்டுடன் இனிப்பு வழங்கி வாக்குப் பதிவுக்கு வரும் வாக்காளர்களை வரவேற்று வாக்குப் பதிவுக்கு அனுப்பும் வண்ணம், வாக்குப் பதிவு மையத்திற்குள் விழா கூடம் போல அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

ஏற்பாடுகளை கீரமங்கலம் பேரூராட்சி செயல் அலுவலர் இளவரசி மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் செய்துள்ளனர்.