School

Advertisment

அரசு, நிதியுதவி பெறும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ளது. பள்ளியில் சேர்ந்த நாளன்றே புதிய பாடப்புத்தகங்கள், புத்தகப்பை, சீருடைகள் வழங்கப்பட்டதால் மாணவர்கள், பெற்றோர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கரோனா நோய்த்தொற்று அபாயம் காரணமாக, தமிழகத்தில் மார்ச் 24ம் தேதி மாலை முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி அனைத்து வகை பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டுள்ளன.ஜூன் மாதத்திற்கு பிறகு சில தளர்வுகளுடன் ஊரடங்கு விதிகள் அமல்படுத்தப்பட்டாலும் கூட, கல்வி நிலையங்களை திறக்க அனுமதிக்கப்படவில்லை.

Advertisment

இந்நிலையில், அரசு மற்றும் நிதியுதவி பெறும் பள்ளிகளில் நடப்பு 2020 & 2021ம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி 1, 6, 9ம் வகுப்புகளுக்கு மாணவர் சேர்க்கை திங்கள் கிழமை (ஆக. 17) தொடங்கியது.

இதையடுத்து பெற்றோர்கள், குழந்தைகள் ஆர்வத்துடன் நேற்று பள்ளிகளுக்கு படையெடுத்தனர். முதல் வகுப்புக்கான சேர்க்கையைப் பொருத்தவரை 5 வயது முடிவுற்ற குழந்தைகளை பள்ளிக்கு நேரில் அழைத்து வரத்தேவையில்லை என தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. குழந்தைகளின் பெற்றோர்கள் உரிய ஆவணங்களை எடுத்து வந்து, தங்கள் குழந்தைக்கு சேர்க்கை அனுமதி பெறலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பள்ளியில் சேர்ந்த முதல் நாளே அவர்களுக்கான சீருடை, பாடப்புத்தகங்கள், கல்வி உபகரணங்கள், புத்தகப்பை உள்ளிட்ட விலையில்லா பொருள்களை உடனடியாக வழங்கவும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, மாணவர் சேர்க்கை நடந்த அன்றே புதிய புத்தகங்கள் உள்ளிட்ட அனைத்து விலையில்லாப் பொருள்களும் ஆசிரியர்கள் வழங்கினர். இதனால் மாணவ, மாணவிகள்மகிழ்ச்சி அடைந்தனர். +1 வகுப்புக்கான மாணவர் சேர்க்கை, வரும் 24ம் தேதி தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.