Skip to main content

கல்வி நிறுவனங்களில் அட்மிஷன் கலாட்டா!

Published on 13/05/2019 | Edited on 13/05/2019

கல்வி நிறுவனங்களில் சேர்க்கை நேரம் என்பதால் ஒவ்வொரு மாவட்டத்தில் உள்ள பிரபல கல்வி நிறுவனங்களில் சேர்ப்பதற்குப் பல்வேறு வகையான யுத்திகளைக் கையாண்டு வருகிறார்கள் பெற்றோர்கள். அதேபோல எவ்வளவு பெரிய சிபாரிசுகளுடன் பெற்றோர்கள் வந்தாலும் அதைத் தட்டிக்கழிப்பதற்கான காரணங்களைப் புதுசுபுதுசா கண்டுபிடித்து வருகிறனர் கல்வி நிறுவனங்கள். இந்த வகையில் திருச்சியில் நடைபெற்ற சுவரஸ்யமான சம்பவம்.

 

admission

 

திருச்சியில் மிகப்பெரிய கிறிஸ்துவ கல்வி நிறுவனம் அந்தப் பள்ளியில் 550 மதிப்பெண் எடுத்து தனது மகளுக்கு விண்ணப்பிக்கிறார் அந்தப் பெற்றோர். பள்ளியில் சேர்ந்துகொள்ளும்படி குறிப்பிட்ட அறிவிப்பும் செல்போனில் வருகிறது. பள்ளிக்கு அந்த மாணவியும் அப்பாவும் செல்கிறார்கள். அட்மிஷனுக்கு மாணவி மட்டும் அனுமதிக்கப்படுகிறார். மாணவியைப் பார்த்ததும் கல்வி நிறுவன முதல்வர் மாணவியின் மதிப்பெண் சான்றிதழையும் கல்வி சான்றிதழையும் பார்த்தவுடன் கொஞ்சம் முகத்தைச் சுருக்கி கொண்டு, ‘சரிமா நீ வெளியே வெயிட் பண்ணு திரும்பக் கூப்பிடுகிறேன்’ என்று அனுப்பிவிடுகிறார். வெளியே காத்திருந்த கொஞ்ச நேரத்தில் அப்பாவின் செல்போனில் உங்களுக்கு அட்மிஷன் இல்லை என்று மெசேஜ் வருகிறது. உடனே அதிர்ச்சியும் ஆத்திரமும் அடைந்த மாணவியின் தந்தை வெளியிருந்த படியே கண்டபடி கத்த ஆரம்பிச்சிட்டார். மூன்று நாளா அலைஞ்சிகிட்டு இருக்கேன் என்று திட்டி அந்த இடத்தையே ரணகளப்படுத்தியிருக்கிறார். இதனால் அதிர்ச்சியடைந்த நிர்வாகம் வாட்ச்மேனை அழைத்து அவரை வெளியே அனுப்புங்க என்று உத்தரவு போட, உடனே வாட்சமேன் அந்த மாணவியின் தந்தையை வெளியே தள்ளிவிடுகிறார்.
 

ஆத்திரமும் அழுகையுமாக அவசர போலீசுக்கு தகவல் சொல்ல, உடனே அங்கு வந்த போலீஸ், வாட்சமேனையும் மாணவியின் தந்தையையும் அள்ளிப்போட்டு போலீஸ் ஸ்டேஷனுக்குச் சென்றது. அங்கு விசாரணையில் வாட்ச்மேன் மீது தவறு என்பதை உணர்ந்த போலீஸ் வாட்ச்மேனை நையபுடைத்தது. இதற்கு இடையில் நிர்வாகம் வாட்ச்மேனை போலீஸ் தூக்கி சென்றதில் அதிர்ச்சியடைந்து, திருச்சியில் உள்ள சீனியர் வழக்கறிஞரிடம் சரண்டர் ஆகி வழக்கறிஞர் மூலம் சமாதனம் பேசி அந்தப் பெற்றோருக்கு சீட்டுக் கொடுக்கிறோம் என்று போலீஸுக்கு தகவல் சொல்லியிருக்கிறார். இவ்வளவு ஆனதுக்குப் பிறகு அந்தச் சீட்டு வேண்டாம். என் புள்ள அங்க படிக்காது என்று சொல்லி அங்கிருந்து கிளம்பிட்டராம்.
 

இது திருச்சியில் பாரம்பரியமிக்க இந்து கல்வி நிருவனம் இங்கே சீட்டுக் கிடைப்பது பெரிய கஷ்டம். திருச்சியில் செல்வாக்கு மிகுந்த ஒருவர் தன் மகளுக்கு 6-ம் வகுப்பு சீட்டுத் திருச்சியில் கல்வி அரசு உயர் அதிகாரியிடம் சிபாரிசு கேட்டிருக்கிறார். அந்தக் கல்வி அதிகாரியின் உதவியாளர். அது ஒரு பெரிய பிரச்சனையே இல்ல விடுங்க. அதிகாரியின் உதவியாளர் சிபாரிசு கடிதம் எழுதி அதில் கையெழுத்து போட்டு இதைக் கொண்டு போய்க் கொடுங்க உங்க பொண்ணுக்கு சீட்டு உடனே கிடைச்சுடும் என்று சொல்லி அனுப்பியிருக்கிறார். அந்தச் செல்வாக்கு மிகுந்த தொழில் அதிபர் இவ்வளவு ஈசியா கிடைக்குதே என்கிற சந்தோஷத்தில் அந்தக் கல்வி நிறுவனத்திற்குச் சென்று சிபாரிசு கடித்தை காட்டியிருக்கிறார்.
 

கடிதத்தைப் பார்த்ததும் சார் கொஞ்சம் வெயிட் பண்ணுங்க சொல்லி எம்.டிகிட்ட போனில் பேசி விஷயத்தைச் சொல்லியிருக்கார். உடனே எம்.டி., பொண்ணோட அப்பா கிட்ட போனை கொடுங்க என்று சொல்லி, “சார் நீங்க கொண்டு வந்திருக்கச் சிபாரிசு கடிதத்தில் கல்வி அதிகாரியின் உதவியாளர் கையெழுத்துப் போட்டிருக்கிறார். ஆனா அந்த உயர் கல்வி அதிகாரியே கையெழுத்து போட்டு இது வரை 15 சீட்டுக்கு மேல நான் அட்மிஷன் போட்டுட்டேன். அதுக்கு அவுங்க ஏகப்பட்ட பணம் வாங்கிட்டு தான் சிபாரிசு கடிதம் கொடுத்திருக்காங்க. என்னால இதுக்கு மேல அட்மிஷன் போட முடியாது” என்று சொல்லி திருப்பி அனுப்பிவிட்டார். பெரிய ஏமாற்றத்துடன் திரும்பினார் அந்தச் செல்வாக்குள்ள செல்வந்தர்.
 

திருச்சியில் அது தான் பெரிய கல்வி நிறுவனம். நடத்த தடுமாறும் சிறிய கல்வி நிறுவனங்கள் பலவற்றை அந்த நிறுவனம் சமீப காலமாக விலைக்கு வாங்கி அந்தப் பழைய நிறுவனங்களின் பெயரிலேயே நடத்தி வருகிறது. இந்த நிறுவனங்களில் கல்வி கட்டணம் ரொம்ப ரொம்ப அதிகம். அந்த நிறுவனங்களில் தான் கல்வி அதிகாரிகளின் குழந்தைகள், காவல்துறை அதிகாரிகளின் குழந்தை என ஏராளமானோர் படிக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு எல்லாம் சிறப்புச் சலுகையில் கட்டணம். ஏன் இந்தச் சலுகை கட்டணம் என்றால் கல்வி நிறுவனங்களில் ஏதாவது சர்ச்சையோ சிக்கல், தற்கொலை, ஏதேனும் ஏற்பட்டால் எந்தச் சிக்கலும் இல்லாமல் தப்பிக்கதான் இந்த அட்மிஷன்கள் கொடுக்கிறார்களாம்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘ஜெய் ஸ்ரீராம்’ முழக்கத்தோடு பள்ளி மீது தாக்குதல்; வெளியான அதிர்ச்சி வீடியோ!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Incident on school chanting Jai Sriram  Shocking video released in telangana

தெலுங்கானா மாநிலம், மன்செரியல் மாவட்டம், கண்ணேபல்லி கிராமத்தில் அன்னை தெரசா உயர்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில், அந்தக் கிராமத்திலும், அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் இருந்தும் ஏராளமான மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இன்று(18-04-24) 50க்கும் மேற்பட்டவர்கள் காவி உடை அணிந்து, இந்தப் பள்ளிக்குள் நுழைந்து, அங்கிருந்த அன்னை தெரசா சிலை உள்ளிட்டவற்றின் மீது கல் வீசி பயங்கர தாக்குதல் நடத்தியுள்ளனர். மேலும், அவர்கள் ஜெய்ஸ்ரீ ராம் என்று முழக்கமிட்டவாறு அந்தப் பள்ளி மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதத்ளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தத் தாக்குதல் தொடர்பான வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, இந்தச் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும், இந்தச் சம்பவம் குறித்து பள்ளியின் முதல்வரான கேரளாவைச் சேர்ந்த ஜெய்மன் ஜோசப்பிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு காவி நிற உடை அணிந்து சில மாணவர்கள் பள்ளிக்கு வந்துள்ளனர். இதனைக் கண்ட அப்பள்ளி முதல்வர், அந்த மாணவர்களை அழைத்து விசாரணை நடத்தியுள்ளார்.

அதற்கு அந்த மாணவர்கள், 21 நாள்கள் அனுமன் தீட்சை சம்பிரதாயத்தைக் கடைபிடிப்பதாக கூறியுள்ளனர். அதனால், பள்ளி முதல்வர், மாணவர்கள் தங்களுடைய பெற்றோர்களைப் பள்ளிக்கு அழைத்து வருமாறு கூறியுள்ளார். இதன் காரணமாக, இன்று காவி உடை அணிந்து வந்த கும்பல் பள்ளி மீது தாக்குதல் நடத்தியுள்ளனர் என்பது தெரியவந்தது.. .

மேலும், இந்தத் தாக்குதலில் பள்ளி முதல்வர் ஜோசப்பை சுற்றி வளைத்து அடித்து, அவரது நெற்றியில் வலுக்கட்டாயமாக திலகமிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து, மாணவர்களின் பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரில், மத உணர்வுகளைத் தூண்டுதல், மதத்தின் அடிப்படையில் பகைமையை வளர்ப்பது தொடர்பான பிரிவுகளின் கீழ் பள்ளி முதல்வர் உட்பட இரண்டு ஊழியர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மயிலாடுதுறையில் 9 பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

Published on 05/04/2024 | Edited on 05/04/2024
Leopard movement Holiday for 9 schools

மயிலாடுதுறை நகரத்தின் ஒருபகுதியான கூறைநாடு செம்மங்குளம் அருகே கடந்த 2 ஆம் தேதி (02.04.2024) இரவு 11 மணியளவில் சிறுத்தை நடமாடியதைப் பார்த்ததாகச் சிலர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்திருந்தனர். இந்த தகவலின் பேரில், உடனடியாக அப்பகுதிக்கு விரைந்து வந்த காவல்துறையினரும், வனத்துறையினரும் சிறுத்தையின் கால் தடத்தை வைத்து சிறுத்தை நடமாட்டம் இருப்பதை உறுதி செய்தனர். பிறகு சி.சி.டி.வி. கேமராவில் சிறுத்தையை நாய்கள் விரட்டி சென்றதையும் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதனையடுத்து வனத்துறை சார்பில் பொதுமக்கள் பாதுகாப்பாக வீட்டில் இருக்கவேண்டும் என ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தி வருகின்றனர். மேலும், சீர்காழி வனச்சரக அலுவலர் டேனியல் ஜோசப் தலைமையில் வனத்துறையினர் சிறுத்தையை பிடிக்க தீவிரமாக வலைவீசி தேடி வருகின்றனர். சிறுத்தை பதுங்கிய பகுதியில் பன்றி ஒன்று குதறியநிலையில் இறந்து கிடந்ததைக் கண்ட வனத்துறையினர் அதிர்ச்சியடைந்து தேடுதல் வேட்டையை தீவிரமாக்கியுள்ளனர்.

அதே சமயம் சிறுத்தை நடமாடத்தை கண்காணிக்க 10 இடங்களில் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. சிறுத்தையை பிடிக்க 10 குழுக்களை அமைத்து வனத்துறையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். அதோடு வனத்துறை சார்பில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் சிறுத்தையைப் பார்த்தால் 9994884357 என்ற தொலைபேசி எண்ணிற்கு தகவல் அளிக்க வனத்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். சிறுத்தையைப் பிடிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால் மக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை என ஆட்சியர் மகாபாரதி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் ஆரோக்கியநாதபுரம் பகுதியில் சிறுத்தை நடமாட்டத்தால் 9 பள்ளிகளுக்கு இன்று (05.04.2024) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மயூரா மெட்ரிக் பள்ளி, புனித அந்தோனியார் உயர்நிலை பள்ளி, டாக்டர் அம்பேத்கர் நகராட்சி தொடக்கப்பள்ளி, கேம்பிரிட்ஸ் பள்ளி, சின்ன ஏரகலி நகராட்சி தொடக்கப்பள்ளி, அக்ளூர் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி, மறையூர் தூய அந்தோனியார் தொடக்க பள்ளி, ஊராட்சி ஒன்றிய  நடுநிலைப்பள்ளி, அழகுஜோதி நர்சரி பிரைமரி பள்ளி என 9 பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.