
சென்னை மின்சார ரயில்களின் கால அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதால் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என மாநகர போக்குவரத்துக்கழகம் அறிவித்துள்ளது.
சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு இடையிலான மின்சார ரயில்கள் இன்று (08.12.2024) முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் மறு அறிவிப்பு வரும் வரை கால அட்டவணை மாற்றம் செய்து இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதன் காரணமாக பயணிகள் நலன் கருதி சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் மேற்குறிப்பிட்டுள்ள வழித்தடத்தில் வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன், கூடுதலாக 20 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. இதற்கான தகவலை போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் தெரிவித்துள்ளார்.
அதாவது இன்று முதல் வழக்கமாக இந்த வழித்தடத்தில் இயக்கப்படும் பேருந்துகளுடன், கூடுதலாக தாம்பரம் முதல் பிராட்வே வரை கூடுதலாக 10 பேருந்துகள் இயக்கப்படும். தாம்பரம் முதல் செங்கல்பட்டு வரை 5 பேருந்துகளும் இயக்கப்படும். கூடுவாஞ்சேரி முதல் தியாகராயநகர் வரை 5 பேருந்துகள் என மொத்தம் 20 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. மேலும், பயணிகளின் தேவைக்கேற்ப கூடுதலாக பேருந்துகள் இயக்கப்படும். முக்கிய பேருந்து நிலையங்களில் அலுவலர்களை நியமித்து, இப்பேருந்துகளின் இயக்கத்தினை கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.