நிலம் வாங்கி தருவதாக மாற்றுத்திறனாளியிடம் மோசடி; த.மா.கா. நிர்வாகி மீது வழக்குப்பதிவு!

Scamming a disabled person by claiming to buy land;

ஓமலூர் அருகே, நிலம் வாங்கித் தருவதாகக் கூறி மாற்றுத்திறனாளியிடம் 3.25 லட்சம் ரூபாய் மோசடி செய்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி நிர்வாகி மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சேலம் மாவட்டம், காடையாம்பட்டி அருகே உள்ள கொங்காரப்பட்டியைச் சேர்ந்தவர் சித்தையன் (60). மாற்றுத்திறனாளி. சொந்த ஊரில் நிலம் வாங்குவது தொடர்பாக, பச்சனம்பட்டியைச் சேர்ந்த த.மா.கா., கட்சியின் சேலம் மேற்கு மாவட்ட தொழிற்சங்கத் தலைவர் சின்னையன் (50) என்பவரை அணுகியுள்ளார். இவர் ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறார்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தாட்ராவூரில் ஒரு இடத்தைக் காட்டி, அதை கிரையம் செய்து தருவதாகக் கூறி சித்தையனிடம் இருந்து 6 லட்சம் ரூபாய் பெற்றுள்ளார். பல மாதங்கள் ஆகியும் அந்த இடத்தை கிரையம் செய்து தரவில்லை. இதனால் விரக்தி அடைந்த அவர், தன்னுடைய பணத்தைத் திருப்பித் தரும்படி கூறியுள்ளார். குடைச்சல் அதிகமானதை அடுத்து முதல்கட்டமாக 2.75 லட்சம் ரூபாயை சின்னையன் திருப்பிக் கொடுத்துள்ளார். மீதப்பணம் 3.25 லட்சம் ரூபாயை திருப்பித் தராமல் ஏமாற்றி வந்துள்ளார்.

இதுகுறித்து சித்தையன் தீவட்டிப்பட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், காவல்துறையினர் சின்னையன் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து அவர் திடீரென்று தலைமறைவாகி விட்டார். அவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Salem
இதையும் படியுங்கள்
Subscribe