Skip to main content

சின்ன மீனைப் போட்டு பெரிய மீனைப் பிடித்த மோசடி கும்பல்! போலீஸ் தீவிர விசாரணை!

Published on 22/03/2022 | Edited on 22/03/2022

 

scam gang  loot six lakh rupee Police serious investigation!

 

சேலம் அருகே, குறைந்த வட்டிக்கு 2 கோடி ரூபாய் கடன் கொடுப்பதாக ஆசை வலை விரித்து கோவை வாலிபர்களிடம் 6 லட்சம் ரூபாயை சுருட்டிய மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

 

கோவை சரவணம்பட்டியைச் சேர்ந்தவர் பரணி (20). இவரும், உள்ளூரைச் சேர்ந்த அவருடைய நண்பர்களான அரவிந்த், முரளி, மற்றும் கார்த்திக் ஆகிய நான்கு பேரும் ஒன்றாக கார் மூலம், சேலம் மாவட்டம் அரியானூருக்கு மார்ச் 18ம் தேதி வந்துள்ளனர். அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பரணியை சேர்ப்பதற்காக 6 லட்சம் ரூபாயை எடுத்து வந்துள்ளனர். அப்போது அந்த வழியாக ஒரு காரில் வந்த சிலர், அவர்களிடம் ஏதோ ஒரு இடத்தைக்கூறி, அதன் முகவரி குறித்து விசாரித்தனர். திடீரென்று அந்த கும்பல், அரவிந்த் கையில் இருந்த 6 லட்சம் ரூபாயை பறித்துக்கொண்டு காரில் மின்னல் வேகத்தில் தப்பினர்.

 

இச்சம்பவம் குறித்து சேலம் கொண்டலாம்பட்டி காவல்நிலைய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், பணத்தைப் பறிகொடுத்த கும்பல் முன்னுக்குப் பின்னாகப் பேசினர். காவல்துறையினர் விசாரணையின் போக்கை மாற்றிய பிறகு, அவர்கள் பொய்யான தகவல்களைச் சொல்லி புகார் அளித்திருப்பதாக ஒப்புக்கொண்டனர். அதாவது, புகார்தாரர் தரப்பினர் குறைந்த வட்டிக்கு 2 கோடி ரூபாய் கடன் கிடைக்கும் என்று சிலர் சொன்னதை நம்பி பணத்துடன் சேலம் வந்திருப்பதும், வந்த இடத்தில் மர்ம கும்பலிடம் பணத்தைப் பறிகொடுத்துவிட்டு, வழிப்பறி செய்து விட்டதாக பொய் புகார் அளித்ததும் தெரிய வந்தது. 


கர்நாடகா மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த ஒரு கும்பல், நிதி நிறுவனத்தின் பெயரில், குறைந்த வட்டியில் கடன் தருவதாக பத்திரிகையில் வரி விளம்பரம் செய்துள்ளனர். அதையறிந்த அரவிந்த், முரளி, பரணி, கார்த்திக் ஆகியோர் விளம்பரத்தில் உள்ள செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு, தங்களுக்கு 2 கோடி ரூபாய் கடன் வேண்டும் என்று கூறியுள்ளனர். எதிர் முனையில் பேசிய கும்பலோ, குறைந்த வட்டியில் கடன் வேண்டுமெனில் கமிஷனாக 6 லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும் என்று பேரம் பேசியுள்ளனர். அதற்கு ஒப்புக்கொண்ட பிறகே, புகார்தாரர் தரப்பு பணத்துடன் சேலம் வந்திருக்கிறது. 


சேலத்தை அடுத்த அரியானூரில் வைத்து போலி நிதி நிறுவன கும்பல், அவர்களிடம் இருந்து 6 லட்சம் ரூபாயை பெற்றுள்ளனர். பணத்தைப் பெற்றுக்கொண்ட மர்ம நபர்கள், சிறிது நேரத்தில் உங்கள் வங்கி கணக்கிற்கு 2 கோடி ரூபாய் பணம் வந்து விடும் என்று சொல்லிவிட்டு காரில் விருட்டென்று பறந்துள்ளனர். ஆனால் சில மணி நேரங்கள் ஆன பிறகும் தங்கள் வங்கிக் கணக்கிற்கு பணம் வந்து சேராததால், தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தனர். 


அதன்பிறகே, பரணி உள்ளிட்ட நான்கு பேரும் அரியானூரில் உள்ள தனியார் கல்லூரியில் கல்விக்கட்டணம் செலுத்த வந்தபோது, மர்ம நபர்கள் பணத்தைப் பறித்துக் கொண்டதாக காவல்துறையில் சரடு விட்டுள்ளனர். பணம் பறித்த கும்பலின் செல்போன் எண், நிகழ்விடத்தில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளின் அடிப்படையில் காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். 


பத்திரிகையில் வெறும் ஆயிரம் ரூபாய் செலவில் வரி விளம்பரம் கொடுத்து, மர்ம கும்பல் நூதன முறையில் 6 லட்சம் ரூபாயை பறித்துச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாக்களிக்க சென்ற இருவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Two people who went to vote fainted and passed way

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர். தமிழ்நாட்டில் காலை 9 மணி நிலவரப்படி 24.34 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

இந்த நிலையில் வாக்களிக்க சென்ற இருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளனர். சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே செந்தாரப்பட்டி ஊராட்சி தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் வாக்களிக்கச் சென்ற சின்னபொண்ணு (77) என்ற மூதாட்டி மயங்கி விழுந்து உயிரிழந்தார். அதேபோன்று, சேலம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் சூரமங்கலம் பகுதியை சேர்ந்த பழனிசாமி(65) தனது மனைவியுடன் வாக்களிக்கச் சென்றபோது மயங்கி விழுந்து பலியானார். சேலம் மாநகரில் நடந்த இந்த துயர் சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த போர் வீரனின் நடுகல் கண்டுபிடிப்பு!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
17th century warrior headstone Kantipudi

சேலம் மாவட்டம், மாதநாயக்கன்பட்டி பெருந்தலைவர் காமராசர் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் தலைவர் தலைமை ஆசிரியர், பொறுப்பு ஆசிரியர்களாக அன்பரசி, விஜயகுமார் ஆகியோர் உள்ளனர். இப்பள்ளி மாணவர்கள் கொடுத்த தகவலின்படி ஆசிரியர்களும், மாணவர்களும் களப்பயணத்தின் போது வீரனின்  நடுகல்  ஒன்று கண்டறியப்பட்டது.

பொது ஆண்டு 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த நடுகல்லில் எழுத்துகள் எதுவும் இல்லை. கல்பூமியின் மேற்பரப்பில் 2 அடி உயரமும் 1.5  அடி அகலம் கொண்டது. இந்த நடுகல்லை சுற்றி கல்திட்டை போன்ற அமைப்பும் உள்ளது . நடுகல்லில் போர் வீரனின் சிற்பம்  உள்ளது.
வேட்டைக்கு சென்று இறந்ததற்காக எடுக்கப்பட்ட நடுகல்லாக இருக்கலாம். ஆலிடாசனம் நிலையில் வில்லில் நாணில் அம்பு எய்துவது போன்றும், இடுப்பில் குரு வாளும், காதில் பத்ர குண்டலமும்,   கழுத்தில் சரப்பளி, சவுடி, முத்தாரம் அணிகலன் அணிந்திருப்பது  போன்றும் கையில் தோள்வளை  இருப்பது போன்ற உருவமைப்பு உள்ளது.

17th century warrior headstone Kantipudi

இப்பகுதி தாருகாவனத்திற்க்கு அருகில் இருப்பதால்  இந்த வீரன் வேட்டுவ தலைவனாக இருக்கலாம். இந்த நடுகல் எல்லாம் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் வைக்கப்பட்டதாகும்.  தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் சார்பாக தொல்லியல் சார்ந்த வரலாற்று தகவல்களையும், அதனை பற்றிய விழிப்புணர்வையும் இன்றை இளைய தலைமுறை மாணவர்களுக்கு கொண்டு சேர்ப்பது தான் தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் நோக்கமாகும் என்கின்றனர் தொன்மை பாதுகாப்பு மன்ற ஆசிரியர்கள்.