கரூர் மாவட்டம், குளித்தலை அருகே போத்துராவுத்தன் பட்டியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி(50). கூலித் தொழிலாளியான இவர், நேற்று அப்பகுதியில் உள்ள தனி நபருக்குச் சொந்தமான விவசாய கிணற்றில் குளிக்கச் சென்றுள்ளார். 40 அடி ஆழமும், 10 அடி நீருள்ள கிணற்றில் குளித்துக்கொண்டிருந்தபோது நீரில் சிக்கித் தத்தளித்துள்ளார். கிணற்றில் விழுந்த அவரை காப்பாற்றுமாறு கூச்சலிட்டதைக் கேட்ட அருகில் இருந்தவர்கள் கிணற்றிலிருந்து மீட்டு பஞ்சப்பட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக தனியார் ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.
அங்கு ஞாயிற்றுக்கிழமையான நேற்று மருத்துவர்கள் இல்லாததால் குளித்தலை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக செல்ல மணப்பாறை குளித்தலை சாலையில் வந்துள்ளனர். மைலாடி என்ற இடத்தின் அருகே ஆம்புலன்ஸ் வந்தபோது திடீரென ஆடு ஒன்று சாலையின் குறுக்கே வந்து வேனின் சக்கரத்தில் சிக்கிக் கொண்டதால் நிலை தடுமாறிய ஆம்புலன்ஸ் வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்ட சுப்பிரமணி பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் வெங்கடேஷ் சிறிய காயத்துடனும், உடன் வந்திருந்த மூன்று நபர்கள் காயமின்றியும் உயிர் தப்பினர். இதுகுறித்து தகவலறிந்த குளித்தலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக குளித்தலை அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.