ஆரணி அடுத்த மொரப்பந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் முன்னாள் ராணுவவீரர் முத்து(57). இவர் ஊரின் அருகே உள்ள ஒண்டிகுடிசை நிலத்தின் வழியாக நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது பரமேஸ்வரன் என்பவரின் நிலத்தில் இருந்த 100 அடி ஆழ கிணற்றில் ஆடு ஒன்று தவறி விழுந்தது.
இதனை பார்த்த முத்து கிணற்றில் வேகமாக இறங்கி ஆட்டை காப்பாற்றினார். பின்னர் முத்து கிணற்றிலிருந்து மேலே ஏற முடியாமல் தவித்தார். இதனை பார்த்த அப்பகுதி மக்கள் ஆரணி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன் பேரில் ஆரணி தீயணைப்பு நிலைய அலுவலர் கோபாலகிருஷ்ணன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று முத்துவை கிணற்றில் இருந்து மீட்டு எவ்வித சேதம் இன்றி காப்பாற்றினர். இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.