செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கம் அருகே இருக்கும் கிராமத்தில் வசித்துவரும் 17 வயது சிறுமி ஒருவர், தனது தங்கையுடன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வீடியோ மூலம் ஒரு கோரிக்கை வைத்துள்ளார். அந்த வீடியோவில், “வீட்டை விட்டு வெளி வரவே பயமாக இருக்கிறது. நாங்கள் வீட்டை விட்டு வெளியே வந்தாலே, ‘உங்களை ஊரைவிட்டு ஒதுக்கிவைத்திருக்கிறோம், எப்படி வரலாம்’ எனக் கேட்டு மிரட்டுகின்றனர். மேலும், ‘தூங்கும் போது வீட்டைக் கொளுத்திவிடுவோம்’ என்றும் மிரட்டுகிறார்கள். எங்களைக் காப்பாற்றுங்கள் ஐயா” என அச்சிறுமிகள் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில், இந்த விவகாரம் அறிந்த செங்கல்பட்டு காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன், தனது ட்விட்டர் பக்கத்தில், “இந்த விவகாரத்தின் தொடர்பாக சம்பந்தப்பட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. போக்ஸோ சட்டத்தின் கீழும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டுவருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக பரவிவரும் வீடியோவை யாரும் பகிர வேண்டாம். இது 18 வயது கீழ் உள்ள குழந்தைகள் சம்மந்தப்பட்டவை” எனப் பதிவிட்டுள்ளார்.