தமிழகத்தில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்ற அறிவிப்பை கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழக தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களில் வார்டு வரையறை பணிகள் முறையாக செய்யவில்லை என்று திமுக தரப்பு உச்சநீதிமன்றம் சென்ற நிலையில், 9 மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களில் தேர்தலை நடத்தலாம் என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில், தேர்தல் தொடர்பாக மீண்டும் திமுக தரப்பு உச்சநீதிமன்றம் சென்ற நிலையில், இதுதொடர்பாக வழக்கு விசாரணை நாளை மறுநாள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ளாட்சி பதவிகள் ஏலம் விடப்படுவதாக சில தினங்களாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வந்தது. இந்நிலையில் இதுதொடர்பாக சட்ட பஞ்சாயத்து இயக்கம் தேர்தல் ஆணையத்துக்கும், லஞ்ச ஒழிப்பு துறைக்கும் தற்போது புகார் அனுப்பியுள்ளனர்.
இதுதொடர்பாக புகாரில் அவர்கள் தெரிவித்துள்ளதாவது, " கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகேயுள்ள நடுக்குப்பம் கிராமத்தில் ஊராட்சி மன்றத் தலைவர் பதவி ரூ.50 லட்சத்திற்கும், துணைத் தலைவர் பதவி ரூ.15 லட்சத்திற்கும் ஏலம்விடப்பட்டதாக தனியார் தொலைக்காட்சியில் 09-12-2019 அன்று மதியம் 3.30 மணியளவில் செய்தி ஒளிப்பரப்பானது. ஏலம் விடப்படுவது குறித்தான வீடியோ காட்சிகளும் காட்டப்பட்டது. உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறையில் உள்ள நேரத்தில் இது ஓட்டுக்கு மறைமுகமாக பணம் தரும் தேர்தல் குற்றமாகும். எனவே, இதுகுறித்து உடனடியாக விசாரித்து, சட்டப்படியான உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம். இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க கீழ்கண்ட விஷயங்களை உள்ளடக்கி அறிவிக்கைகளை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட வேண்டுகிறோம்" என்று அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.