Skip to main content

“அமைச்சரின் கொலை மிரட்டலுக்கெல்லாம் பயப்படும் ஆளா நான்?” -வரலாறை எடுத்துவிட்ட சாத்தூர் எம்.எல்.ஏ!

Published on 19/10/2020 | Edited on 20/10/2020
sathur admk mla

 

 

கடந்த ஜூலை 29-31 நக்கீரன் இதழிலேயே,  ‘உயிர் பயத்தில் அமைச்சர் – எம்.எல்.ஏ.! அதிமுகவை உடைக்கும் சாதி பாலிடிக்ஸ்!’ என்னும் தலைப்பில், சிவகாசி தொகுதி எம்.எல்.ஏ.வும் தமிழக பால்வளத்துறை அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜிக்கும், சாத்தூர் அதிமுக எம்.எல்.ஏ. ராஜவர்மனுக்கும் இடையிலான மோதலை, கட்டுரையாக வெளியிட்டிருந்தோம். ஆளும்கட்சியின் இந்த உட்கட்சி பூசல், தற்போது முற்றி மேடையிலேயே வெடித்திருக்கிறது.  

 

காமராஜர் தங்கியது என் தாத்தா வீட்டில்தான்!

 

சாத்தூரில், சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில், ராஜவர்மன் எம்.எல்.ஏ., பகிரங்கமாகவே குற்றம் சாட்டியிருக்கிறார். “என்னை பயப்படறவன்னு நினைக்கிறாங்க. என்னை வெட்டிருவேன்; குத்திருவேன்னு சொல்லுறாங்க. கூலிப்படைய வச்சி காலி பண்ணிருவேன்னு சொல்லுறாங்க. ஆறு மாசமா எனக்கு என்னென்னமோ மிரட்டல் வருது.. நான் எதுக்கும் பயப்படல. நான் யாருக்கும் பயப்படறவன் இல்ல; பயப்பட போறவனும் இல்ல.

 

sathur admk mla


எங்கப்பா மல்லியிலே,   1984-ல் எம்.எஸ்.ஆர். சைக்கிள் மார்ட் என்று 100 சைக்கிள் வைத்து..  பத்து விரலிலும் மோதிரம் அணிந்து..  தொப்புள் வரைக்கும் செயின் போட்டுக்கிட்டிருந்தார்.  நான் ஒண்ணும் பிச்சை எடுத்துட்டு இங்கே வரல. இதைச் சொல்லணும்கிறதுக்காக சொல்லுறேன். ஏன்னா.. ஒரு தம்பி இங்கே வந்து மேடையில பேசிட்டாரு. நான் வந்து உழைச்சு முன்னுக்கு வரணும். எங்கப்பா வசதியா இருந்தாரு. எங்கம்மா வந்து, 1958-ல் முள்ளிக்குளத்துல இருந்து கல்யாணம் ஆகி வரும்போது, சிவகிரியில எங்க தாத்தா இருளாண்டித் தேவர், அவருதான் அங்கே நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர். காமராஜரு எங்க தாத்தா வீட்டுலதான் தங்குவாரு. அப்ப அவரு முதலமைச்சர். எங்க வரலாறை தெரிஞ்சிக்கிட்டு பேசணும்.

 

இனியும் அமைதியாக இருக்க முடியாது!

 

நான் இங்கே (சாத்தூர்) வந்து டிரைவரா கார் ஓட்டுனதுனால.. யாராருடைய அப்பா..  யாராருடைய தகப்பன்.. எங்கே எந்தெந்த தீப்பெட்டி ஆபீசுல வேலை பார்த்தான். எவன் எவன் இந்தக் கட்சியோட உப்பைத் தின்னான்னு எல்லாருக்கும் தெரியும். யாரோ ஒருவரை திருப்திப்படுத்துறதுக்காக, பேசுறாங்க. நான் இளைஞரணி மாவட்ட இணைச் செயலாளரா இருந்திருக்கேன். நான் எந்த பொறுப்புக்கும் ஆசைப்படாதவன்னு அவங்களுக்கே தெரியும். என்னை வெந்த புண்ணிலே வேல் பாய்ச்சியதைப் போல, ஒன்றிய கழகச் செயலாளர்கள், நகர கழகச் செயலாளர்களை வைத்துக்கொண்டு, நான் வெட்டி விடுவேன்; குத்திவிடுவேன். நான் அதை செஞ்சிருவேன். நான் கூலிப்படைய வச்சி செஞ்சிருவேன்னு ஒரு அமைச்சர் என்னை மிரட்டும்போது, நான் எத்தனை நாளைக்கு அமைதியா இருக்க முடியும்?” என்று குமுறித் தீர்த்துவிட்டார்.

 

அமைச்சர் – எம்.எல்.ஏ. மோதலின் பின்னணி இதுதான் –
 

கடந்த மார்ச் 22-ஆம் தேதி, விருதுநகர் மாவட்ட செயலாளர் பொறுப்பிலிருந்து கே.டி.ராஜேந்திரபாலாஜியை விடுவித்ததாக, அதிமுக தலைமை கழகம் அறிவித்தது. இந்த நடவடிக்கைக்கு வேறு சில காரணங்கள் இருந்தாலும், ‘ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவே! இந்த நாட்டையும் நாட்டு மக்களையும் கரோனாவிடமிருந்து காப்பாற்று!’ என்று ராஜேந்திரபாலாஜி போட்ட ட்வீட்டே காரணம் என்று அப்போது பேசப்பட்டது.

 

இந்நிலையில்,  நிர்வாக வசதிக்காக விருதுநகர் மாவட்டத்தைப் பிரித்து, புதிய மாவட்ட செயலாளர்கள் அறிவிக்கப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பில்,  ராஜவர்மன் போன்றோர் இருந்தனர். இதனைத் தொடர்ந்து, ராஜவர்மனுக்கு ஆதரவான கட்சி நிர்வாகிகள், ராஜேந்திரபாலாஜிக்கு எதிராக, கட்சியின் ஒருங்கிணைப்பாளர்களிடம் புகார் அளித்தனர். கட்சித் தலைமையோ, அந்தப் புகாரைப் பொருட்படுத்தாமல்,  ராஜேந்திரபாலாஜியை விருதுநகர் மாவட்ட கழகப் பொறுப்பாளராக நியமித்தது. இந்த நேரத்தில், ஈ.பி.எஸ். – ஓ.பி.எஸ். உரசல் வலுத்ததால்,  எடப்பாடி ஆதரவாளராக ராஜேந்திரபாலாஜியும், ஓ.பி.எஸ். ஆதரவாளராக ராஜவர்மனும் பார்க்கப்பட்டனர். ஒருவழியாக,  ஒருங்கிணைப்பாளர்கள் மோதல்கூட முடிவுக்கு வந்துவிட்டது. ஆனால்.. ராஜேந்திரபாலாஜி – ராஜவர்மன் பிணக்கு நீடித்தபடியே இருக்கிறது.

 

உண்ட வீட்டுக்கு ரெண்டகம்!

 

sathur admk mla



கடந்த 16-ஆம் தேதி, சாத்தூரில் வாக்குச்சாவடி நிலை முகவர்கள் கூட்டத்தில் பேசிய ராஜேந்திரபாலாஜியின் ஆதரவாளரான ஒன்றிய செயலாளர் சண்முகக்கனி “கே.டி.ஆர். அவர்களை வைத்து இன்றைக்கு  பதவி சுகம் அனுபவித்து வருபவர்கள் எத்தனை பேர்? அமைச்சரால் வாழ்வாதாரம் பெற்றவர்கள் எத்தனை பேர்? இன்றைக்கு அவர்களெல்லாம் எங்கே இருக்கிறார்கள்? உண்ட வீட்டுக்கு ரெண்டகம் செய்தவர்கள் காணாமல் போய்விடுவார்கள்.” என்று பேசிவிட்டு ‘மன்னர் – மந்திரி – வெள்ளரிக்காய் – பிச்சைக்காரன் – சாம்பார் சாதம் – தயிர் சாதம்’ என்று யாருக்குமே புரியாத ஒரு கதையை எடுத்துவிட்டார்.

 

25 வருடங்களுக்கு முன்,  அப்போது அதிமுக மா.செ.வாக இருந்த சுந்தரபாண்டியனிடம் டிரைவராக வேலை பார்த்தவர்தான், இன்றைய சாத்தூர் எம்.எல்.ஏ. ராஜவர்மன். அந்த சுந்தரபாண்டியனின் மகன் சண்முகக்கனி, முகவர்கள் கூட்டத்தில் ‘பிச்சைக்காரன்’ கதை சொன்னது, ஏதோ ஒருவிதத்தில், ராஜவர்மனுக்கு நெருடலை ஏற்படுத்தியிருக்கிறது. இதற்கான பதிலடியாகவே, ‘நான் ஒன்றும் பிச்சைக்காரன் இல்லை..’ என்று,  தன் குடும்ப செல்வாக்கையும், வரலாறையும், ராஜவர்மனே ஆவேசமாக வெளிப்படுத்தினார்.  

 

கடம்பூர் ராஜு வீட்டில் ராஜேந்திரபாலாஜி டென்ஷன்!

 

‘ஆறுமாத காலமாகவா எம்.எல்.ஏ.வுக்கு அமைச்சர் கொலை மிரட்டல் விடுத்தபடியே இருக்கிறார்? இத்தனை மாதங்களாக இதனை ஆறப்போட்டுவிட்டு,  இப்போது சொல்ல வேண்டிய அவசியம் என்ன?’ என்ற கேள்விக்கு, சென்னையில், கடந்த 8-ஆம் தேதி,  அமைச்சர் கடம்பூர் ராஜு வீட்டில் நடந்த காரசார பேச்சுவார்த்தையைக் குறிப்பிட்டுச் சொல்கிறது, ராஜவர்மன் தரப்பு.

 

அன்று, ராஜேந்திரபாலாஜியைத் தொடர்புகொண்டு, நேரில் பேசவேண்டும் என்று கூறியிருக்கிறார் கடம்பூர் ராஜு. நானே வருகிறேன் என்று சென்றிருக்கிறார் ராஜேந்திரபாலாஜி. அங்கு, தளவாய் சுந்தரம், அக்ரி கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் ராஜபாளையம் எம்.எல்.ஏ. கோபால்சாமி போன்றோர் இருந்துள்ளனர். 'ராஜவர்மன்…’  என்று பேச்சை ஆரம்பித்ததும் டென்ஷன் ஆன ராஜேந்திரபாலாஜி, ‘நான் உருவாக்கி ஜெயிக்க வைத்து எம்.எல்.ஏ. ஆக்கினேன். ராஜவர்மன் யாரென்று எல்லாருக்கும் தெரியும். ஓ.பி.எஸ். தர்மயுத்தம் நடத்தியபோது எத்தனை பேர் அவர் பின்னால் சென்றார்கள்? அதற்காக அவருக்கு செல்வாக்கு இல்லை என்று சொல்லிவிட முடியுமா? எனக்கு பதவி முக்கியம் இல்லை’ என்று பேசிவிட்டு, வார்த்தைகளில் அனல் கக்கியிருக்கிறார். அப்போதுதான், ‘ராஜவர்மனைக் கொலை செய்துவிடுவேன்..’ என்று ராஜேந்திரபாலாஜி பேசியதாகச் சொல்கின்றனர்.

 

ராஜவர்மன் சொல்வதெல்லாம் பொய்!

அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியை தொடர்புகொள்ள இயலாத நிலையில், அவரது தரப்பில் நம்மிடம் பேசினார்கள். “தன்னைக் கொலை செய்துவிடுவார்கள் என்று பேசி, சாத்தூர் தொகுதியில் அனுதாபம் தேடப் பார்க்கிறார் ராஜவர்மன். வரும் சட்டமன்ற தேர்தலில் வைகோ மகன் துரை போட்டியிடப் போவதாக, மதிமுக வட்டாரத்தில் பேசிவருவது, ராஜவர்மன் வயிற்றில் புளியைக் கரைத்திருப்பதாக சொல்கிறார்கள். அடுத்து, தனக்கு சீட் கிடைக்குமோ, கிடைக்காதோ என்ற பயத்தில், பொய் பொய்யாக உளறிக் கொட்டுகிறார். 25 வருடங்களுக்கு முன், ராஜவர்மனின் அப்பா மல்லியில் 100 சைக்கிள்களை வைத்து, சைக்கிள் கடை நடத்தியதாகச் சொல்கிறாரே? மதுரை போன்ற பெருநகரங்களில்கூட, சைக்கிள் கடையில், வாடகைக்கு விடுவதற்காக 100 சைக்கிள்கள் இருந்திருக்காது. நாங்கள் கேட்கிறோம்.

 

sathur admk mla

 

 

100 சைக்கிள்களை வாடகைக்கு எடுப்பதற்கு,  அந்த கிராமத்தில் அத்தனை பேர் இருந்தார்களா? இந்தப் பேச்சைக் கேட்டு அந்த கிராமமே சிரிக்கிறது. பத்து விரல்களிலும் தங்க மோதிரம் அணிந்திருந்தாராம் அவருடைய அப்பா. கட்டை விரல்களிலுமா மோதிரம் போட்டிருந்தார்? அட, பொய் சொல்வதையும் பொருத்தமாக சொல்ல வேண்டாமா? அமைச்சர்,  தனக்கு கொலை மிரட்டல் விடுத்தார் என்று கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில், பத்திரிகையாளர்களையும் வைத்துக்கொண்டு பேசி, பரபரப்புக்காக ‘ஸ்டண்ட்’ அடித்திருக்கிறார்.” என்றனர். சூட்சமமான சேவை தேவை என்பதாலேயே! “உழைத்து முன்னுக்கு வந்ததாக சொல்கிறார் ராஜவர்மன். அப்படியென்ன உழைப்போ? எந்த நேரத்தில் என்ன பேசுவோமென்பதை,  ராஜேந்திரபாலாஜியே அறிந்திருக்க மாட்டார். அவரது இயல்பே அதுதான்!

 

ஜெயலலிதா இருந்தபோதே, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில் 4 தொகுதிகளை (அருப்புக்கோட்டை, திருச்சுழி, விருதுநகர், ராஜபாளையம்) திமுக வென்றது. அதிமுகவில் இப்போது, வெளிப்படையாகவே மோதிக்கொள்கிறார்கள். இந்த நிலையில், மாவட்ட பொறுப்பாளர் ராஜேந்திரபாலாஜி எத்தனை ஆலோசனைக் கூட்டம் நடத்தினாலும், ‘ஏழிலும் வெல்வோம்’ என்று மார் தட்டினாலும், எதுவும் பிரயோஜனப்படாது” என்று விருதுநகர் மாவட்ட மாவட்ட நிலவரத்தைச் சொன்னார் அதிமுக சீனியர் ஒருவர்.

 

மேலும் அவர், “ராஜவர்மன் படு விவரமான ஆள் என்பது இந்த மாவட்டத்துக்கே தெரியும். ஆரம்பத்தில், விருதுநகர் மா.செ.வாக இருந்த சுந்தரபாண்டியனிடம் டிரைவராக இருந்தார். அவரிடமிருந்த மா.செ. பொறுப்பு, விநாயகமூர்த்தியிடம் போனதும், அங்குபோய் ஒட்டிக்கொண்டார். அடுத்து, சிவசாமி மா.செ. ஆனார். அவர், இவரைத் தன் பக்கத்திலேயே வரவிடவில்லை. அப்போது, கட்சியை விட்டும் நீக்கப்பட்டார். அடுத்து,  ஆர்.பி. உதயகுமார் விருதுநகர் மாவட்ட பொறுப்பாளர் ஆனவுடன், அவரிடம் போய் ஐக்கியமானார். பிறகு, ராஜேந்திரபாலாஜி மா.செ. மற்றும் அமைச்சரானதும், கடந்த 9 வருடங்களாக வஜ்ரம் போல் ஸ்ட்ராங்காக ஒட்டிக்கொண்டிருந்தார். அவரிடமிருந்த மா.செ. பொறுப்பு பறிக்கப்பட்டதும், ‘விருதுநகர் மாவட்டத்தில் அதிமுக பலவீனமாக இருக்கிறது. என் பின்னால்தான் கட்சி நிர்வாகிகள் இருக்கிறார்கள்.’ என்று அணி சேர்த்தார்.

 

sathur admk mla

 

சுந்தரபாண்டியனிலிருந்து ராஜேந்திரபாலாஜி வரை, ராஜவர்மனை எதற்காக பக்கத்தில் வைத்துக்கொண்டனர்? அரசு ஒப்பந்தப் பணிகளில் இருந்து மணல் குவாரிகள் வரை, சகலத்திலும் ‘டீல்’ பேசி முடிப்பதில் ‘கில்லி’ என்பதால்தான். திரைமறைவான காரியங்களில், அவரது ஆலோசனையும், வழிகாட்டலும் மிகத் தேவையாக இருந்திருக்கிறது. ‘சூட்சமம்’ நிறைந்த இந்த சேவையே, அரசியலில் ‘உழைப்பு’ என்று போற்றப்படுகிறது. அட, போங்கப்பா!” என்று சலித்துக்கொண்டார்.

‘உழைத்து வாழ வேண்டும்; பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே!’ என எம்.ஜி.ஆர். பாடியதெல்லாம், சினிமாவுக்கு மட்டுமே சரிப்பட்டு வரும்! அரசியலுக்கு அல்லவே அல்ல!

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு அதிகமாக உழைக்க வேண்டும்” - இ.பி.எஸ்.

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
alliance Party Candidates Need To Work More EPS

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது. வேட்புமனுக்களை திருப்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில் தே.மு.தி.க. சார்பில் விருதுநகரில் போட்டியிடும் விஜய பிரபாகரனை ஆதரித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சிவகாசியில் இன்று (28.03.2024) பிரச்சார்ம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் தமிழக மக்களுக்கு இறைவனால் கொடுக்கப்பட்ட கொடை. ஒரு மனிதன் பிறக்கின்றான், வாழ்கின்றான், இறக்கிறான். இந்த இடைப்பட்ட காலத்தில் நாட்டு மக்களுக்கு என்ன செய்கிறானோ அந்த தலைவர்கள் தான் மக்கள் மனதில் வாழ்வார்கள். அவ்வாறு எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

நம் தலைவர்களுக்கு அரசியல் வாரிசுகள் கிடையாது. எனவே தமிழ்நாட்டைச் சேர்ந்த நாம் தான் பிள்ளைகள். தங்கள் வாழ்நாள் முழுவதும் தம் பிள்ளைகள் வாழ்நாள் முழுவதும் செழிப்பாகவும், வளமாகவும் வாழ வேண்டும் என கருதி இரவு பகல் பாராமல் உழைத்து மறைந்த தலைவர்கள் உருவாக்கிய இயக்கம் அ.தி.மு.க. இது மக்களுக்காகவே துவக்கப்பட்ட இயக்கம். யார் யாரோ இந்த இயக்கத்தை அழிக்க முற்பட்டார்கள். யார் எல்லாம் இந்த இயக்கத்தை அழிக்க முற்பட்டார்களோ, அவர்கள் எல்லாம் அடையாளம் காணாமல் போய்விட்டார்கள்.

இந்த தேர்தல் முக்கியமான தேர்தல். நாடாளுமன்ற தேர்தலை பொறுத்த வரையில் கூட்டணி கட்சிகள் எல்லாம் ஒன்றாக இணைந்து இரவு பகல் பாராமல் வாக்கு சேகரித்து லட்சக்கானகான வாக்குகள் வித்தியாசத்தில் வேட்பாளரை வெற்றி பெற செய்ய வேண்டும். கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு அதிகமாக உழைக்க வேண்டும். அ.தி.மு.க. என்று சொன்னாலே அனைவரையும் மதிக்க கூடிய கட்சி. அதிலும் குறிப்பாக கூட்டணியை நேசிக்க கூடிய கட்சி. அ.தி.மு.க. வேட்பாளரை விட கூட்டணி கட்சி வேட்பாளருக்கு அதிக நேரம் செலவழித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும்” எனத் தெரிவித்தார். 

Next Story

“எடப்பாடி செய்த சதியை முறியடிக்கத் தயாராக இருக்கிறேன்” - ஓ.பி.எஸ்.ஸின் பிரத்யேக பேட்டி

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
ready to defeat tready to defeat the conspiracy of EPS says Exclusive interview with OPShe conspiracy of EPS says Exclusive interview with OPS

தேனி பாராளுமன்றத் தொகுதியில் பி.ஜே.பி. கூட்டணி சார்பில் அ.ம.மு.க. வேட்பாளராக டி.டி.வி. தினகரன் போட்டியிடுவதால் ஓ.பி.எஸ்.ஸின் முழு ஆதரவும் டிடிவிக்கு இருக்கிறது. அதோடு டிடிவியும் நான் போட்டி போடுகிறேன் என்று தெரிந்து தான் இத்தொகுதியை ஓ.பி.எஸ்.ஸும் அவரது மகன் ஓ.பி.ஆர்.ரும் எனக்காக விட்டுக் கொடுத்தும் இருக்கிறார்கள் என்று கூறியிருக்கிறார். அந்த அளவுக்கு ஓபிஎஸ்ஸும் டி.டி.வி.யும் தேர்தல் களத்தில் நெருக்கமாக இருந்து வருகிறார்கள்.

இந்த நிலையில் தான் வேட்புமனு தாக்கலின் இறுதி நாளான நேற்று 27 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய டிடிவி தினகரன் மதியத்துக்கு மேல் தேனி ஆட்சியர் அலுவலகத்திற்கு வருவதாக இருந்தது. இந்த விஷயம் ஓபிஎஸ்-க்கு தெரியவே, மதியம் ஒன்னேகால் மணிக்கு எல்லாம் தேனி ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தவர் அலுவலக வளாகத்தில் உள்ள மரத்தடியில் நின்று கொண்டு டிடிவியை வரவேற்க காத்துக் கிடந்தார். அவருடன் ஆதரவாளர்களான செல்லமுத்து மற்றும் சையதுகான் ஆகியோர் இருந்தனர்.

ad
ஓபிஎஸ் உடன் நமது நிருபர்

அப்போது நாம் முன்னாள் முதல்வரான ஓபிஎஸ்ஸிடம் சென்று நம்மை நக்கீரன் நிருபர் என்று அறிமுகப்படுத்திய உடனே ஆசிரியர் நல்லா இருக்காரா? என்று கேட்டார். அதைத் தொடர்ந்து நாமும் ஆசிரியர் நலமாக இருக்கிறார் என்று கூறியவாறே தொகுதியின் தேர்தல் பணி எந்த அளவுக்கு இருக்கிறது என்று கேட்டபோது, “நான் போட்டி போடும் அந்த தொகுதியில் பிரதமர் மோடி தான் போட்டிப் போடுவதாக இருந்ததால் அங்குள்ள கட்சியினர் தொகுதியை ஒரு கட்டுக்கோப்பாக பிரதமருக்காக தயார் செய்தும் வைத்திருந்தனர். ஆனால் பிரதமர் இங்கே போட்டி போடவில்லை என்பதால் என்னையத்தான் நிற்க சொன்னார். அதன்பேரில் தான் போட்டி போடுகிறேன்” என்றவரிடம் அத்தொகுதியில் முக்குலத்தோர் சமூக ஓட்டுக்கள் அதிகமாக இருக்கிறதா என்று கேட்டபோது, அத்தொகுதியில் மொத்தம் பதினாறு லட்சம் ஓட்டுகள் இருக்கிறது. இதில் சிறுபான்மை சமூக ஓட்டுகள் இரண்டு லட்சம் இருப்பதாக தெரிகிறது. அதுபோல் முக்குலத்தோர் சமூக ஓட்டுகள் ஆறு லட்சத்திற்கு மேல் இருப்பதாக தெரிகிறது. மீதி மற்ற சமூக மக்கள் இருக்கிறார்கள் என்றவரிடம், உங்களுடைய வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது என்று கேட்டதற்கு என்னுடைய வெற்றி உறுதி இறைவன் இருக்கிறார்” என்றார்.

உங்களை பெயரிலேயே ஐந்து சுயேச்சைகள் வேட்புமனு தாக்கல் செய்து இருக்கிறார்கள். அது பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டதற்கு, “நான் வெற்றி பெறக் கூடாது என்பதற்காகவே எடப்பாடி செய்த சதி. அதையும் முறியடிக்க தயாராக இருக்கிறேன்” என்றார். தொடர்ந்து தேனி மாவட்டத்தில் உள்ள அ.தி.மு.க.வினர் கூட டிடிவிக்கு மறைமுகமாக சப்போர்ட் பண்ண இருப்பதாக ஒரு பேச்சு அடிபடுகிறதே என்று கேட்டதற்கு சிரித்துக் கொண்டே “அதுவும் நடக்கலாம் நான் சொன்னது போல் தமிழகம் முழுவதுமே அ.தி.மு.க. படுதோல்வி அடையும்” என்று சொல்லிக் கொண்டு இருந்தார்.

ready to defeat the conspiracy of EPS says Exclusive interview with OPS

அப்போது தேர்தல் பிரச்சார வாகனத்தில் ஆட்சியர் அலுவலகத்திற்குள் இரண்டேகால் மணிக்கு டிடிவி வந்தார். அவரை ஓபிஎஸ் சால்வை அணிவித்து வரவேற்றார். அதன்பின் ஓ.பி.எஸ். தனது ஆதரவாளர்களுடன் மீண்டும் மரத்தடியிலேயே நின்றார். அப்போது பயனாளிகளுக்காக போடப்பட்டிருந்த இரும்பு சேரில் ஓ.பி.எஸ் உடன் வந்த இருவரும் உட்கார்ந்து இருந்தனர். அதைத் தொடர்ந்து டிடிவி தினகரன் தனது வேட்புமனுவை தேர்தல் அதிகாரியான ஆட்சியரிடம் தாக்கல் செய்துவிட்டு வந்தார். வந்தவர் பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டியும் கொடுத்தார். அதுவரை ஓபிஎஸ் டிடிவியுடனே நின்றுவிட்டு டிடிவியை பிரச்சார வேனில் திரும்ப வழியனுப்பி விட்டுத்தான் திரும்பினார்.