Skip to main content

கேரள கவர்னரிடம் மனு கொடுத்து வேண்டிய தமிழக விவசாயிகள்

Published on 26/08/2019 | Edited on 26/08/2019

 

உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக  பணியாற்றி ஓய்வு பெற்ற பிறகு கேரள மாநில அரசுக்கு கவர்னராக நியமிக்கப்பட்டவர் சதாசிவம்.  இவரது சொந்த ஊர் ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள காடப்பநல்லூர் கிராமம். அவ்வப்போது ஈரோடு பகுதிகளில் நடக்கும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள சொந்த ஊர் வருவது வழக்கம்.  அது போல் ஈரோட்டில் செயல்பட்டு வரும் பிரபலமான கல்வி நிறுவனமான வேளாளர் கல்வி அறக்கட்டளையின் பொன் விழா நிகழ்ச்சியில் பங்கேற்க சொந்த ஊர் வந்திருந்தார் கவர்னர் சதாசிவம். 

 

s

 

இன்று கல்லூரியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள வந்த அவரிடம்  கீழ் பவானி பாசன விவசாயிகள்(எல்பிபீ) சங்க தலைவர் நல்லசாமி தலைமையில் விவசாயிகள்  மனு கொடுத்தார்கள்.  

 

அவர்கள் அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- "கேரளா மாநிலம் அதிக  மழை பொழிவு கொண்ட மாநிலமாகவும், நமது தமிழகம் மழை மறைவு மாநிலமாகவும் இருக்கிறது.  தமிழ்நாட்டில் நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தியாகும் பாண்டியாறு மேற்கு நோக்கி ஓடி புன்னம்புழா என அது பெயர் பெற்று, கேரளாவின் சாளியாற்றில் அந்த நதி கலந்து கள்ளிக்கோட்டைக்கு அருகில் எந்த பயன்பாடும் இல்லாமல் வீணாக அரபிக்கடலில் போய் கலக்கிறது. 

 

தமிழக-கேரளா எல்லையில் தடுப்பணை கட்டி அதை கிழக்கு நோக்கி திருப்பினால் தமிழகத்திற்கு ஒவ்வொரு வருடமும் 14 டிஎம்சி தண்ணீர் கிடைக்கும்.    இந்த நீரால்  கோவை, திருப்பூர் மாவட்டங்களின்  குடிநீர் திட்டங்களுக்கு தண்ணீர் எந்த தட்டுப்பாடும் இல்லாமல் கிடைக்கும், அதேபோல் அத்திக்கடவு-அவிநாசி திட்டத்திற்கு உரிமையுள்ள  நீர் திட்டமாக இது மாறும். பாண்டியாறு-மோயாறு இணைப்பு திட்டம் மூலம் பவானிசாகர் அணையிலிருந்து 124 மைல் நீளம் கொண்ட கீழ் பவானி தலைமை கால்வாய் வழியாக கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அத்திப்பாளையம் அணை தேக்கத்திற்கு இந்த தண்ணீரை கொண்டு செல்ல முடியும். எங்கும் நில எடுப்பு இருக்காது. சுற்றுப்புறச்சூழலையும் பாதிக்காது.

 

பாண்டியாறு-மோயாறு இணைப்பு திட்டம் பவானி பாசனங்களின் நீர் பற்றாக்குறையை முழுமையாக நிரப்பும், குடிநீர் திட்டங்களுக்கும், காவிரி டெல்டா பாசனங்களுக்கும் கூடுதலான நீர் வளம் சேர்க்கும்.அது மட்டுமல்ல  வீராணம் ஏரிக்கு சென்று சென்னைக்கு குடிநீராகவும் செல்லும்.

 

கேரளாவிற்கு மின்சாரம், தமிழகத்திற்கு தண்ணீர் என்ற அடிப்படையில் மத்திய அரசின் நிதியை கொண்டு இந்த திட்டம் நிறைவேற்றப்பட வேண்டும். இந்த இரு வடிநில இணைப்பு திட்டம் இந்தியாவின்  இறையாண்மைக்கும், ஒருமைப்பாட்டிற்கும் வலு சேர்க்கும். மத்திய அரசு அறிவித்திருக்கும் கோதாவரி-காவிரி இணைப்பு திட்டத்திற்கு ஒரு முன்னோடி வழிகாட்டுதல் திட்டமாக இந்த திட்டம் நிறைவேற்றப்பட வேண்டும் என்பது தமிழக மக்கள் மற்றும் விவசாயிகளின் நீண்ட கால எதிர்பார்ப்பாக உள்ளது. ஆகவே தமிழரான கேரள கவர்னர் இதற்கு முன் முயற்ச்சி எடுக்க வேண்டும்" என கூறியிருக்கிறார்கள்.
 

சார்ந்த செய்திகள்

Next Story

'குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை எடுக்கப்படும்' - அமைச்சர் முத்துசாமி

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
nn

ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணையில் தண்ணீர் வேகமாகக் குறைந்து வருகிறது. இருப்பினும் மாவட்டத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று வீட்டு வசதி துறை அமைச்சர் எஸ்.முத்துசாமி கூறியுள்ளார்.

அவர் ஈரோடு காந்திஜி சாலையில் திமுக சார்பில் நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, 'பவானி சாகர் அணையில் மட்டுமல்லாமல் நீலகிரி மாவட்டத்தில் உள்ள மின் உற்பத்தி அணைகளிலும் தண்ணீர் மிக குறைவாக உள்ளது. எங்களுக்கு கீழ் பவானி பாசனப்பகுதியில் உள்ள புஞ்சை பயிர்களுக்கு ஐந்தாவது நினைப்பிற்கு தண்ணீர் விட வேண்டும் என்பது ஆசைதான். ஆனால் நீர் இருப்பு அணையில் இல்லை. தமிழக முதலமைச்சர் 22 மாவட்டங்களுக்கு குடி தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க ரூபாய் 150 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். ஈரோடு மாவட்டத்திலும் எந்தக் குடிதண்ணீர் பிரச்சனையும் ஏற்படாமல் இருக்க முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுப்பார். ஈரோடு மாவட்டத்தில் நடப்பாண்டு அதிக உஷ்ணம் நிலவுகிறது. சாலை விரிவாக்கத்திற்காக பல இடங்களில் மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. அவ்விடங்களில் மரக்கன்றுகள் நட நடவடிக்கை எடுக்கப்படும். நீலகிரி மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள சிசிடிவி கேமராக்கள் 26 நிமிடங்கள் பழுது அடைந்தது குறித்து திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது'' என்றார்.

ஈரோடு மாநகர மாவட்டச் செயலாளர் சுப்பிரமணியம் பகுதிச் செயலாளர் அக்னி சந்துரு மூன்றாம் மண்டல தலைவர் சசிகுமார் உட்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Next Story

நீலகிரியைத் தொடர்ந்து ஈரோடு; தேர்தல் அதிகாரியிடம் திமுக மனு

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
nn

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து வாக்கு பெட்டிகள் அனைத்தும் ஸ்ட்ராங் ரூம் எனப்படும் ஐந்து அடுக்கு பாதுகாப்பு அறைக்குள் வைக்கப்பட்டுள்ளன.

இத்தகைய சூழலில் நேற்று முன்தினம் நீலகிரியில் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் திடீரென செயலிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அதீத வெப்பம் காரணமாக கேமராக்கள் செயலிழந்திருக்கலாம் என மாவட்ட ஆட்சியர்  விளக்கம் அளித்திருந்தார். இந்நிலையில் ஈரோட்டில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூமில் நள்ளிரவில் சிசிடிவி கேமரா பழுதானதால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஈரோடு மக்களவைத் தொகுதியின் வாக்கு எண்ணும் மையம் சித்தோடு ஐ.ஆர்.டி.டி. அரசு பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ளது. அதில் ஈரோடு மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூம் அறையின் சிசிடிவி கேமரா நேற்று (28.04.2024) இரவு 11.30 மணியளவில் பழுதாகியுள்ளன. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தேர்தல் அதிகாரிகள் மற்றும் தொழில்நுட்ப நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அதன் பின்னர் இன்று (29.04.2024) அதிகாலை 3.30 மணியளவில் வேறு கேமராக்கள் பொறுத்தப்பட்டன. ஈரோடு மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் பிரகாஷும், அதிமுக சார்பில் ஆற்றல் அசோக் குமாரும், பாஜக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் விஜயகுமாரும், நாம் தமிழர் கட்சி சார்பாக கார்மேகனும் போட்டியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த இரு சம்பவங்களும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் வாக்கு இயந்திரங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் எனத் திமுக சார்பில் மனு கொடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹுவை நேரில் சந்தித்த திமுக எம்.பி, என்.ஆர்.இளங்கோ இதற்கான மனுவை அளித்துள்ளார். அதில் 'வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளில் சிசிடிவி முறையாக இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வாக்கு இயந்திரங்கள் உள்ள அறையை சுற்றி 500 மீட்டர் சுற்றளவில் ட்ரோன் பறக்க தடை விதிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.