Skip to main content

சாத்தான்குளம் இரட்டைப்படுகொலை: “வழக்கை திருவனந்தபுரத்திற்கு மாத்துங்க..” உச்ச நீதிமன்றத்தை நாடிய எஸ்.ஐ.ரகுகணேஷ்.!!!

Published on 25/02/2021 | Edited on 25/02/2021

 

Sathanukulam incident; SI Raguganesh petition supreme court to change the case from madurai to thiruvananthapuram

 

“மதுரையில் நடைபெறும் வழக்கினை திருவனந்தபுரத்திற்கு மாற்ற உத்தரவிட வேண்டும்” என சாத்தான்குளம் தந்தை - மகன் இரட்டைப் படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையிலிருக்கும் எஸ்.ஐ.ரகுகணேஷ் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

 

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தைச் சேர்ந்த வணிகர்களான தந்தை, மகன் இருவரும் வழக்கிற்காக கோவில்பட்டி கிளைச்சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், கோவில்பட்டி கிளைச் சிறைச்சாலை கண்காணிப்பிலிருந்து மருத்துவமனையில் தந்தை, மகன் இருவரும் சந்தேகத்திற்கிடமான முறையில் இறந்தனர். விவகாரம் பெரிதாகிவிடக் கூடாது என்பதற்காக ‘இருவரின் மரணமும் இயற்கையான மரணமே’ என அப்போதைய மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளரும், தமிழ்நாடு முதலமைச்சரும் போட்டிப் போட்டுக்கொண்டு பேட்டியளித்தனர். இவ்வேளையில், ‘இருவரின் உடலிலும் காயங்கள் இருந்தன’ என கோவில்பட்டி கிளைச்சிறை மருத்துவர் எழுதிய மருத்துவக் குறிப்பை வெளியிட்டது நக்கீரன் !!! அதன்பின் தந்தை, மகன் சித்ரவதைக் கொலை வழக்கினை சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக்கிளை சூமோட்டோவாக எடுத்த நிலையில், வழக்கினை விசாரிக்க தானாக முன்வந்தது சி.பி.சி.ஐ.டி. அதன் பின் சி.பி.ஐ.யிடம் வழக்கு மாற, கடந்த 25-09-2020 அன்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் குற்றப்பத்திரிக்கையைத் தாக்கல் செய்தது சி.பி.ஐ. தரப்பு.

 

மதுரை மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்ற சி.பி.ஐ. சிறப்பு வழக்கு மன்றத்தில் நீதிபதி வடிவேலு முன்பு வழக்கு விசாரணை தொடங்கப்பட்ட நிலையில், கடந்த 18ம் தேதி குற்றவாளியென கைது செய்யப்பட்டிருக்கும் ஆய்வாளர் ஸ்ரீதரோ, “எனக்கு வழக்கறிஞர் வேண்டாம். நானே வழக்காடிக் கொள்கின்றேன்” என மனு ஒன்றை அளித்து, பின்பு “இப்போதைக்கு சேர்க்க வேண்டாம். பிறகு சேர்த்துக்கொள்ளலாம்” என நீதிபதியிடம் தெரிவித்தார். வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணை வருகின்ற மார்ச் 1ம் தேதியன்று நடைபெறும் என தேதியினை அறிவித்தார் நீதிபதி.
 

Sathanukulam incident; SI Raguganesh petition supreme court to change the case from madurai to thiruvananthapuram

 

இந்நிலையில், “பப்ளிசிட்டிக்காக தந்தை, மகன் லாக் அப் கொலை வழக்கில் நாங்கள் குற்றவாளியாக கைது செய்யப்பட்டுள்ளோம். குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இன்னும் குற்ற வரைவு துவங்கவில்லை. இதே வேளையில், மதுரை சிறையில் இருக்கும் கைதிகளால் நாங்கள் எந்நேரமும் தாக்குதலுக்கு உள்ளாகலாம். ஆதலால், சி.பி.ஐ. நடத்தும் இந்த வழக்கினை மதுரையிலிருந்து திருவனந்தபுரத்திற்கு மாற்ற வேண்டும்” என உச்ச நீதிமன்றத்தில் வழக்கினை தாக்கல் செய்துள்ளார், சாத்தான்குளம் தந்தை மகன் இரட்டைப் படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையிலிருக்கும் எஸ்.ஐ.ரகுகணேஷ்.

 

இது இப்படியிருக்க, வழக்கினை விரைந்து முடிக்க கொலையுண்ட ஜெயராஜின் மனைவி செல்வராணி தாக்கல் செய்த மனு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் நீதியரசர் முரளிசங்கர் முன்பு விசாரணைக்கு வந்த நிலையில், “இதற்கான பதிலை வருகின்ற மார்ச் 9ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும்” என சி.பி.ஐ.-க்கு உத்தரவிட்டார்.

 

படங்கள்: விவேக்

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு; இன்ஸ்பெக்டர் ஜாமீன் மனு தள்ளுபடி

Published on 01/02/2024 | Edited on 01/02/2024
Satankulam father, son case; Inspector dismisses bail plea

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் பகுதியில் கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா காலத்தில் நேரம் கடந்து கடையைத் திறந்து வைத்ததாக விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரும் காவல் நிலையத்தில், காவல்துறையினரால் கடுமையாகத் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கினை சிபிஐ விசாரித்து வருகிறது.

இந்த வழக்கில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ், தலைமைக் காவலர்கள் முருகன், சாமிதுரை, காவலர்கள் முத்துராஜா, செல்லத்துரை மற்றும் தாமஸ் பிரான்சிஸ் உள்ளிட்ட 9 பேரை சிபிஐ போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு மதுரை மாவட்ட முதன்மை அமர்வு முதலாவது நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தந்தை, மகன் தாக்கப்பட்டு உயிரிழந்த வழக்கில் பணி இடைநீக்கம் செய்யப்பட்ட காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் ஜாமின் கோரி 5 வது முறையாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்நிலையில் இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சிபிஐ தரப்பு வழக்கறிஞர், “சாட்சிகளில் ஒருவரான மாஜிஸ்திரேட் பாரதிதாசனிடம் 28 நாட்கள் குறுக்கு விசாரணை நடத்தப்பட்டுள்ளதால், வழக்கின் விசாரணை தாமதமாகிறது” என வாதிட்டார். இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, “மாஜிஸ்திரேட் பாரதிதாசனிடம் 28 நாட்கள் குறுக்கு விசாரணை நடத்தினால், அவர் தன்னுடைய பணிகளை செய்வாரா அல்லது தினசரி நீதிமன்றம் வந்து சாட்சியம் அளிப்பாரா?” என சரமாரியாக கேள்வி எழுப்பினார். இதனையடுத்து காவல் ஆய்வாளர் ஸ்ரீதரின் ஜாமின் மனுவை 5 வது முறையாக தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். ஏற்கெனவே காவல் ஆய்வாளர் ஸ்ரீதரின் ஜாமீன் மனு 4 முறை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

Next Story

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு; எஸ்.ஐ. ஜாமீன் மனு தள்ளுபடி

Published on 08/09/2023 | Edited on 08/09/2023

 

Satankulam father son case SI Bail petition dismissed

 

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் போலீஸ் எஸ்.ஐ.யின் ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

 

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் பகுதியில் கடந்த 2020 ஆம் ஆண்டு கரோனா காலத்தில் நேரம் கடந்து கடையைத் திறந்து வைத்ததாக விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரும் காவல் நிலையத்தில், காவல்துறையினரால் கடுமையாகத் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கினை சிபிஐ விசாரித்து வருகிறது.

 

இந்த வழக்கில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ், தலைமைக் காவலர்கள் முருகன், சாமிதுரை, காவலர்கள் முத்துராஜா, செல்லத்துரை மற்றும் தாமஸ் பிரான்சிஸ் உள்ளிட்ட 9 பேரை சிபிஐ போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு மதுரை மாவட்ட முதன்மை அமர்வு முதலாவது நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

 

இந்நிலையில் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் எஸ்.ஐ. ரகு கணேஷ் ஜாமீன் வழங்கக் கோரி 5வது முறையாகச் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜாமீன் வழங்கினால் சாட்சியங்களைக் கலைக்க வாய்ப்பு உள்ளதாகவும், வழக்கு விசாரணை இறுதிக் கட்டத்தில் இருப்பதால் ஜாமீன் வழங்கக் கூடாது என சிபிஐ வாதத்தை முன் வைத்தது. மறைந்த ஜெயராஜின் மனைவி ஜெயராணி தரப்பிலும் எஸ்.ஐ. ரகு கணேஷுக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்ததால், நீதிபதிகள் ஜாமீன் மனுவை 5வது முறையாகத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.