Skip to main content

தமிழக முதல்வரை பதவி நீக்கம் செய்து, காவல்துறைக்கு தனி அமைச்சரை நியமிக்க வேண்டும்: ஆளுநருக்கு பால் முகவர்கள் சங்கம் கடிதம்

Published on 01/07/2020 | Edited on 01/07/2020

 

edappadi palanisamy - ponnusamy

 

"தமிழக முதல்வரை பதவி நீக்கம் செய்து, முதல்வர் வசம் உள்ள காவல்துறைக்கு தனி அமைச்சரை நியமிக்க வேண்டும்" எனத் தமிழக ஆளுநருக்கு பால் முகவர்கள் சங்கம் கடிதம் எழுதியுள்ளதாக தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் நிறுவனர் மாநில தலைவர் சு.ஆ.பொன்னுசாமி தெரிவித்துள்ளார்.

 

அந்தக் கடிதத்தில், 

 

உயர்திரு தமிழக ஆளுநர் அவர்களுக்கு வணக்கம்.

 

சாத்தான்குளத்தில் அலைபேசி கடை நடத்தி வந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் காவல்துறையினரின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலுக்கு உள்ளாகி இறந்து போன நிலையில் அச்சம்பவத்தில் தொடர்புடைய காவலர்கள் நீதித்துறை நடுவரையே மிரட்டுகின்ற வகையில் ஒருமையில் பேசியிருப்பது காவல்துறை மக்களின் நண்பன் என்கிற கூற்றை மறுபரிசீலனை செய்யும் நேரம் இது என உணர்த்தியுள்ளது.

 

மேலும் 159 ஆண்டுகால இந்திய காவல்துறை வரலாற்றில் இது வரை இல்லாத வகையில் தற்போது சாத்தான்குளம் காவல்நிலையம் வருவாய்த்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டிருப்பதும், சம்பந்தப்பட்ட காவலர்களும், உயரதிகாரிகளும் நீதித்துறையையே மிரட்டிப் பார்த்த நிகழ்வுகளும் ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய ஆபத்தை விளைவிக்கக் கூடிய செயலாகவும், காவல்துறையை சீர் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருப்பதையும் உணர்த்துகிறது.

 

காக்கிச்சட்டையும், தொப்பியும் அணிந்து, கையில் லத்தியைப் பிடித்து விட்டால் வானளாவிய அதிகாரம் படைத்தவர்களாக ஒரு சில காவலர்கள் எண்ணிக் கொண்டு தங்களை சர்வ வல்லமை படைத்த சர்வாதிகாரிகளாக காட்டி நடந்து கொள்வதற்குக் காரணம் ஆட்சியாளர்கள் தான் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இருக்க முடியாது.

 

ஏனெனில் ஆட்சியாளர்கள் செய்கின்ற ஊழல்களை, முறைகேடுகளை மறைக்கவும், தங்களின் தவறுகளுக்கு உடந்தையாகவும் செயல்படுகின்ற வகையில் காவல்துறையை ஏவல்துறையாக மாற்றி வைத்திருப்பதைத் தொடரும் காவல்துறை அத்துமீறல்கள் இவ்வுலகிற்கு சாட்சியாக வெளிச்சம் போட்டுக் காட்டிக் கொண்டிருக்கிறது.

 

மேலும் உயிர் காக்கும் மருத்துவத்துறை, அரசின் பல்வேறு அத்தியாவசிய துறைகளைச் சார்ந்தவர்களின் நலன் காக்க பல்வேறு நலச்சங்கங்கள் இருக்கையில் மக்களைக் காக்கும் காவல் பணியில் ஈடுபட்டு வரும் கடைநிலை காவலர்கள் தொடங்கி உயரதிகாரிகள் வரை தங்களின் குறைகளை, மனக்குமுறல்களைக் கொட்டித் தீர்ப்பதற்கோ, அல்லது தங்களின் குறைகளைக் களைவதற்கோ எந்த ஒரு அமைப்பும் இல்லாமல் இருப்பதும், சங்கம் அமைக்க அனுமதி மறுப்பதும், காலிப் பணியிடங்களை நிரப்பாமல் டாஸ்மாக் கடைகளுக்கும், அங்கே சாராயம் விற்பனை செய்வோருக்கும், சாராயம் குடிக்க வருவோருக்கும் பாதுகாப்பளிக்கின்ற தேவையற்ற பணிகளில் எல்லாம் அவர்களைப் பயன்படுத்துவதும் அவர்களின் மன அழுத்தத்தை அதிகப்படுத்தும் காரணிகளாக அமைந்துள்ளது.

 

ஏற்கனவே காவல்துறையினர் அத்துமீறி செயல்பட்ட மற்றொரு வழக்கில் காவல்துறையை சீர் செய்ய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டு ஆண்டுகள் பல கடந்தும் அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்காமல் வழக்கம் போல் அந்த உத்தரவையும் கல்லைக் கட்டி கடலில் வீசியது போன்று அப்படியே கிடப்பில் போட்டிருக்கிறது தமிழக அரசு.

 

அதுமட்டுமின்றி உள்துறை, பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை மற்றும் காவல்துறை போன்ற பல்வேறு துறைகளை முதல்வர் தன்னகத்தே வைத்துக் கொள்வது அந்தத் துறை சார்ந்த அதிகாரிகளை தலையாட்டி பொம்மைகளாக்கி தங்களுக்குச் சாதகமாகச் செயல்பட வைக்கும் செயலாகும்.

 

http://onelink.to/nknapp

 

அதனால் காவல்துறையை தன்னகத்தே வைத்திருக்கும் தமிழக முதல்வரே சாத்தான்குளம் விவகாரத்திற்கு முழு பொறுப்பாகும் என்பதால் தமிழக முதல்வரை பதவி நீக்கம் செய்து அவருக்கு பதிலாக வேறு ஒருவரை முதல்வராக நியமிப்பதோடு, முதல்வர் வசம் உள்ள காவல்துறையைப் பிரித்து அப்பொறுப்பிற்கு தனி அமைச்சரையும் நியமித்து உத்தரவிட வேண்டும்.

 

அத்துடன் தமிழக காவல்துறையை சீர் செய்திடவும், காவல்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்பிடவும், கடைநிலை காவலர்கள் தொடங்கி உயரதிகாரிகள் வரை பணியில் இருப்போரின் மன அழுத்தத்தை போக்கிட போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கவும் தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனத் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்கள்; ரோபோக்களைக் கொண்டு சோதனை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 seized at home; Testing with robots

மேற்கு வங்கத்தில் வீடு ஒன்றிலிருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் தற்போது அந்தப் பகுதியில் ரோபோக்களைக் கொண்டு ஆயுதங்களை பறிமுதல் செய்ய பாதுகாப்புப் படையினர் அதிகப்படியாக குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் 18-வது மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் சந்தோஷ்காளி விவகாரம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேற்கு வங்கத்தில் சந்தோஷ்காளி பகுதியில் ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக சிபிஐ போலீசாருக்கு தகவல் வந்தது. தேர்தல் வன்முறையில் பயன்படுத்துவதற்காக ஆயுதங்கள் குவிக்கப்பட்டுள்ளதாக சந்தேகம் எழுந்த நிலையில் சிபிஐ  போலீசார் சந்தோஷ்காளி பகுதியில் சோதனை நடத்த முடிவு செய்தனர்.

அதனைத் தொடர்ந்து வீடு ஒன்றில் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் மேலும் அங்கு அதிகப்படியான ஆயுதங்கள் இருக்க வாய்ப்பு இருப்பதாக சிபிஐக்கு சந்தேகம் எழுந்தது. மனிதர்களால் ஆய்வு செய்தால் குண்டு வெடிப்பு உள்ளிட்ட அசம்பாவிதங்கள் நடைபெறலாம் என்ற யூகத்தின் அடிப்படையில் தேசிய பாதுகாப்புப் படையினர் வரவழைக்கப்பட்டனர். தேசிய பாதுகாப்புப் படையின் சார்பாக ரோபோ கருவிகள் மூலமாக வெடிகுண்டு மற்றும் ஆயுதங்கள் அங்கிருந்து பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் அதிகப்படியாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் மட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே அங்கு திரிணாமுல் காங்கிரஸ் முன்னாள் நிர்வாகி ஷாஜகான் என்பவர் சந்தோஷ்காளி பகுதியில் ஆதரவாளர்களைத் திரட்டி ஆயுதங்களை வைத்து வன்முறையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story

தங்கைக்கு டி.வி, மோதிரம் வழங்க விரும்பிய அண்ணன்; கடைசியில் நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
incident happened on Brother wanted to give TV, ring to younger sister

உத்திரபிரதேச மாநிலம் பாரபங்கி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திர பிரகாஷ் மிஸ்ரா (35). இவரது மனைவி சாபி. மிஸ்ராவுக்கு திருமணமாகாத தங்கை ஒருவர் இருந்தார்.

இந்த நிலையில், மிஸ்ராவின் தங்கைக்கு வருகிற 26ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. தன் தங்கையின் திருமணத்திற்காக தங்க மோதிரம், டி.வி உள்ளிட்ட பொருட்களை வழங்க மிஸ்ரா விருப்பப்பட்டார். இந்த முடிவை மிஸ்ரா தனது மனைவி சாபியிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அதற்கு சாபி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால், இவர்கள் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

இதில் ஆத்திரமடைந்த சாபி, தனது கணவரை பழிவாங்க வேண்டும் என்பதற்காக தனது சகோதர்களை அழைத்ததாகக் கூறப்படுகிறது. அதன் பேரில், அங்கு வந்த அவர்கள், இது குறித்து மிஸ்ராவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால், அந்தப் பேச்சுவார்த்தை ஒரு கட்டத்தில் தகராறில் முடிந்துள்ளது. இதில், சாமியின் சகோதரர்கள், மிஸ்ராவை கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் மிஸ்ரா படுகாயமடைந்ததால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் மிஸ்ராவை கொலை செய்த மனைவி சாபி உள்ளிட்ட 5 பேரை கைது செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.