
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள தேர்க்கன்குளம் பகுதியைச் சேர்ந்த 95 வயது மூதாட்டி ஒருவர், தனக்கு ரேஷன் கடையில் பயோ மெட்ரிக் சிஸ்டத்தில் கைவிரல் ரேகை பதியவில்லை என கூறி சாத்தான்குளம் தாலுகா அலுவலகத்தில் புகார் அளிக்க இன்று சென்றுள்ளார்.. அவரது கோரிக்கை குறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்த நிலையில், தாலுகா அலுவலகத்தில் இருந்து வெளியே வந்த மூதாட்டி, சாத்தான்குளம் பேருந்து நிலையம் செல்வதற்காக அவ்வழியாக சென்று கொண்டிருந்தவர்களிடம் உதவி கேட்டு கொண்டிருந்தார்.

அப்போது அந்த சாலை வழியாக வந்த சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்டீபன், வயதான மூதாட்டி கையில் கம்புடன் மஞ்சள் பையுடன் பரிதவித்து தனியாக நிற்பதை கண்டு தனது போலீஸ் வாகனத்தை நிறுத்தி அவரது அருகில் சென்று விசாரித்தார். தாலுகா அலுவலகத்துக்கு வந்த தகவலையும், இங்கிருந்து சாத்தான்குளம் பேருந்து நிலையம் போவதற்கு வாகன உதவி கேட்டு நிற்பதாக அந்த மூதாட்டி தெரிவித்தார். உடனே இன்ஸ்பெக்டர் ஸ்டீபன் தனது போலீஸ் வாகனத்தில் மனிதநேயத்துடன் மூதாட்டியை ஏற்றி சாத்தான்குளம் பேருந்து நிலையத்தில் பத்திரமாக இறக்கி விட ஓட்டுநரிடம் தெரிவித்தார். போலீஸ் வாகனத்தில் மூதாட்டி பத்திரமாக அழைத்துச் செல்லப்பட்டு பேருந்து நிலையத்தில் இறக்கி விடப்பட்டார். அங்கிருந்து அவர் தனது சொந்த கிராமமான தேர்க்கன் கிராமத்துக்கு பேருந்தில் புறப்பட்டுச் சென்றார்.

முன்னதாக அந்த மூதாட்டி, போலீஸ் வாகனத்தில் ஏறி அமர்ந்ததும் "நீங்க நல்லா இருப்பீங்கய்யா" என இன்ஸ்பெக்டர் ஸ்டீபனை வாழ்த்திச் சென்றார். போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்டீபனின் மனிதநேயமிக்க இச்செயலானது சாத்தான்குளம் பகுதி மக்கள் மத்தியில் பாராட்டையும் நன்மதிப்பையும் பெற்றுள்ளது.
செய்தியாளர் - எஸ்.மூர்த்தி