
தூத்துக்குடி, சாத்தான்குளத்தில் காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்துச் சென்ற ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய இருவர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தின் அனுமதியை பெற்று சி.பி.ஐ.-க்கு மாற்றப்படும் என நேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சேலத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் சாத்தான்குளத்தைச் சேர்ந்த தந்தை, மகன் சித்திரவதை செய்யப்பட்டு, மரணம் அடைந்தது தொடர்பான வழக்கு தற்போது சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இது குறித்த அரசாணையை தமிழக உள்துறை வெளியிட்டுள்ளது.