Skip to main content

இழந்த அதிகாரத்தை மீட்க ஒரே நாளில் ஏழு கோயில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்த சசிகலா! 

Published on 22/03/2022 | Edited on 22/03/2022

 

Sasikala who visited seven temples in one day

 

இழந்த அதிகாரத்தை மீட்கவும்,  எதிரிகளை விரட்டி அழிக்கவும் வல்லமை மிக்க தெய்வங்களை தேடி சென்று சாமி தரிசனம் செய்வதோடு, எதிரிகளை அழிக்கும் யாகங்களையும் நடத்திவருகிறார் வி.கே.சசிகலா.

 

சொத்து குவிப்பு வழக்கில் சிறை சென்றபோது எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைத்துவிட்டுப்போன ஆட்சியும் கட்சியும், தான் வந்ததும் தன்னிடம் வந்துவிடும் என்று சிறையில் இருந்தபோதே பல்வேறு கணக்குகள் போட்டு ஆவலோடு காத்திருந்தார் சசிகலா. ஆனால், அவர் நினைத்ததற்கு நேர் எதிராக நிலைமை மாறியது. பலமுறை பல்வேறு வியூகங்கள் அமைத்து கட்சியையும் ஆட்சியையும் கைப்பற்ற எடுத்த முயற்சிகள் அனைத்துமே தோல்வியிலேயே முடிந்துள்ளது. அதற்கான வாய்ப்புகளும் தொடர்ந்து குறைந்து வருகிறது.

 

அதிமுகவை கைப்பற்ற ஜெயலலிதா மேற்கொண்டதுபோல ஆன்மீக முயற்சியே சரியானது என அவரது பிரதான ஜோதிடர்கள் கூறியதை தொடர்ந்து, கனவர் நடராஜன் நினைவிடத்திற்கு செல்வது, ராகு கேது பெயர்ச்சியில் கலந்துகொள்வது, பிரத்தியாங்கரா தேவிக்கு நிகும்பலா யாகம் செய்வது என திட்டமிட்டு சென்னையில் இருந்து மூன்று நாள் பயணமாக தஞ்சாவூர் வந்தார் சசிகலா. 

 

Sasikala who visited seven temples in one day

 

நடராஜனின் நினைவு நாளான 20ம் தேதி விளார் சாலையில் இருக்கும் நடராஜன் நினைவிடத்திற்கு வந்து உணர்ச்சி பொங்க அஞ்சலி செலுத்தினார். பசுவுக்கு பூஜைசெய்து ஏழு முறை சுற்றி பரிகாரம் தேடினார். அங்கு சசிகலா வருவதற்கு முன்பே ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ.ராஜா வந்திருந்தார்.


பயணத்திட்டபடியே 21ம் தேதி ராகு காலம் 7:30 மணிக்கு தொடங்குகிறது என்பதால் அதற்கு முன்பு ஏழு மணிக்கே தஞ்சையில் இருந்து கிளம்பி விட்ட சசிகலா. சரியாக 9 மணிக்கு ராகு காலம் முடிந்த பிறகு கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோயிலுக்கு வந்து பூஜைகள் மற்றும் ஹோமத்தில் பங்கேற்றார். அங்கிருந்து சக்கரபாணிகோயில் ,சாரங்கபாணி கோயில் என கும்பகோணம் நகரத்தை சுற்றி சுற்றி அனைத்து கோயில்களுக்கும் ஏறி இறங்கினார்.


பிறகு அங்கிருந்து புறப்பட்டு சூரியனார்கோயில், சுக்கிரன் தலமான கஞ்சனூர் கோவிலில் சாமி தரிசனம் செய்து கொண்டு ராகு-கேது பெயர்ச்சி நேரமான 3.15 மணிக்கு  திருநாகேஸ்வரம் ராகு கோவிலுக்கு வந்து மக்களோடு, மக்களாக அமர்ந்து சாமி தரிசனம் செய்தார். அங்கிருந்து அய்யாவாடி கோயிலுக்கு சென்று அங்கு நடந்த யாகத்தில் கலந்துகொண்டு மீண்டும் தஞ்சைக்கு சென்றுள்ளார். 


சசிகலா நேற்று ஒரே நாளில் திட்டமிட்டபடியே ஏழு கோயில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்திருப்பது அவரை சார்ந்தவர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'2026 தேர்தலில் நான் யாரென்று காட்டுவேன்' - சசிகலா

Published on 21/03/2024 | Edited on 21/03/2024

 

nn

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

ஆனால் சசிகலா தரப்பில் எந்தவித தேர்தல் நடவடிக்கைகளும் எடுக்கப்படாத நிலையில், புதுக்கோட்டையில் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அவரிடம் செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளை முன்வைத்தனர். அவர் பேசுகையில், ''இந்தத் தேர்தல் முடிவுக்கு பிறகு தான் அண்ணா திமுக என்ன என்பதை எல்லோரும் புரிந்து கொள்வார்கள். நிச்சயமாக அதிமுக ஒன்றாவதற்குரிய நேரம் வந்துவிட்டதாகத் தான் என்னுடைய அனுபவத்தில் நான் சொல்கிறேன். தமிழ்நாடு அரசு இப்பொழுது தேர்தல் என்ற காரணத்தைச் சொல்லி தேர்தலை பற்றி மட்டுமே பேசிக் கொண்டிருக்கிறார்கள். நேற்று கூட ஒரு துப்புரவு பெண் தொழிலாளி தூத்துக்குடியில் பட்டப்பகலில் கொலை செய்யப்பட்டிருக்க சம்பவம் நடந்துள்ளது. எதற்காக நடந்தது என்பதை நான் சொல்ல விரும்பவில்லை. ஆனால் நான் கேட்கின்ற ஒரே கேள்வி முதலமைச்சர் கையில் இருக்கின்ற காவல்துறை என்ன செய்து கொண்டிருக்கிறது? பூ கட்டிக்கிட்டு இருக்கா அல்லது இவர்களுடைய பிரச்சாரத்திற்கு துணையாக பின்னாடி போய்க் கொண்டிருக்கிறதா? என முதலமைச்சர் தான் சொல்ல வேண்டும்.

ஆவின் பாலில் புழு, பூச்சி இருக்கிறது என்று சொல்கிறார்கள். இது முதல் முறையல்ல தொடர்ந்து திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து இது நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் உடனே ஒரு அறிக்கை கொடுக்கிறார்கள். இந்த பாலை யாரும் உபயோகிக்க வேண்டாம். இதற்கா அரசாங்கம் இருக்கிறது. இதற்காகவா பால்வளத்துறை இருக்கிறது. அதற்கு ஒரு மந்திரி வேறு. எப்படி நிர்வாகம் நடத்துகிறீர்கள். அப்படி என்றால் உங்கள் நிர்வாகத்தில் குறை இருக்கிறது. அது பாலில் தெரியுது. இதே ஜெயலலிதா இருந்தபோதெல்லாம் இது நடந்ததா? இது மாதிரி ஒரு குறை நடந்திருக்குமா? இல்லையே. ஏனென்றால் அவர்களுடைய கவனம் எல்லா இடத்திலும் இருந்தது.

இப்போது வரைக்கும் முதலமைச்சர் நினைப்பு, எப்படியாவது இந்த தேர்தலில் பொய் சொல்லி ஜெயிக்கணும் என்பதுதான். இது நாடாளுமன்றத் தேர்தல். 2026 சட்டமன்ற தேர்தல் தான் எங்களுக்கும் திமுகவிற்கான நேரடி தேர்தல். அந்த தேர்தலில் நான் யார் என்று காட்டுவேன். திமுக என்ன ஆகும் என்பதையும் நான் கணித்து வைத்திருக்கிறேன்'' என்றார்.

Next Story

சசிகலாவை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் நடிகர் ரஜினிகாந்த்!

Published on 24/02/2024 | Edited on 24/02/2024
Actor Rajinikanth met and congratulated Sasikala

சென்னை போயஸ் கார்டனில் உள்ள மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா வசித்த வேதா நிலைய இல்லத்துக்கு எதிரே வி.கே. சசிகலா புதியதாக வீடு ஒன்றைக் கட்டியுள்ளார். ஜெயலலிதா இல்லம் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த வீட்டிற்கு கடந்த மாதம் கிரகப் பிரவேசம் நடைபெற்றது. முன்னதாக நடிகர் ரஜினிகாந்திற்கு கிரகப் பிரவேசத்தில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ரஜினிகாந்திற்கு கிரகப் பிரவேசத்தில் கலந்த கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் ரஜினிகாந்த் சசிகலாவின் வீட்டுக்கு நேரில் இன்று (24.02.2024) வருகை தந்தார். இதனையடுத்து சசிகலாவுடன் சிறிது நேரம் சந்தித்துப் பேசி தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து அங்கிருந்து கிளம்பிய ரஜினிகாந்த்தை வீட்டின் வாசல் வரை வந்து சசிகலா வழியனுப்பி வைத்தார். அப்போது ரஜினிகாந்த் கையெடுத்துக் கும்பிட்டார்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், “இந்த வீடு கோயில் போல உள்ளது. இந்த வீடு சசிலாவுக்கு பெயர், புகழ், சந்தோஷம், நிம்மதி தர வேண்டும் என இறைவனை வேண்டிக் கொள்கிறேன்” என்றார். மேலும், ‘ஜெயலலிதாவின் ஆளுமை மிக்க இடத்தை தமிழகத்தில் யார் பூர்த்தி செய்வார் என நினைக்கிறீர்கள்’ என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், “அரசியல் பற்றி பேச விரும்பவில்லை” எனத் தெரிவித்தார்.