பரப்பன அக்ரஹார சிறையில் இருந்து தன்னுடைய நான்காண்டு சிறை வாசத்தை முடித்து, வீடு திரும்பிய சசிகலா, எந்த சுக, துக்க நிகழ்ச்சிகளிலும் பங்கேற்காமல் இருந்தார். அரசியலிலும் ஒரு நல்ல முன்னேற்றத்தை எதிர்நோக்கி, புதிய அதிமுகவை வழிநடத்த வேண்டும் என்ற திட்டத்தோடு வந்தவர்,தற்போதைய அரசியல் சூழ்நிலையைப் பார்த்து அரசியலில் இருந்து ஒதுங்குவதாக கூறி, அரசியல் துறவறத்தை மேற்கொண்டார்.

Advertisment

இந்நிலையில், அதிக மன உளைச்சலில் இருந்த அவர், முதல்முறையாக தஞ்சையில் உள்ள தன்னுடைய கணவர் நடராஜனின் தம்பி பழனிவேல் பேரக்குழந்தைகளின் காதுகுத்து விழாவில் கலந்துகொண்டார். 3 நாள் பயணமாக புறப்பட்ட அவர், நேற்று (18.03.2021) காதுகுத்து விழாவில் கலந்துகொண்டு,இன்று, திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதரை தரிசிக்க வந்துள்ளார். மீண்டும் அவர் நாளை தஞ்சைக்குச் சென்று தங்கியிருந்துவிட்டு, பின்னர் மன்னார்குடிக்குச் செல்ல உள்ளார்.

Advertisment

மறைந்த முதல்வர் ஜெயலலிதா தனக்கு எப்போதெல்லாம் மன அமைதி தேவைப்படுகிறதோ, உடனே அவர் தேர்வு செய்யும் இடம் ஸ்ரீரங்கம்தான். எனவே, தன்னுடைய தோழியான ஜெயலலிதாவின் பாணியில், தன்னுடைய மன அமைதிக்காக ஸ்ரீரங்கம் ரங்கநாதரை மனமுருகி வேண்டி தரிசனத்தில் பங்கேற்றார். இவரோடு மருத்துவர் வெங்கடேசன் மற்றும் அவருடைய நண்பர் ரமணி, மனைவி மற்றும் அகஸ்தியர் கோவில் ஆஸ்தான அய்யர் தேவாதி உள்ளிட்டோர் உடன் வந்திருந்தனர்.