Skip to main content

நள்ளிரவில் சுங்கச்சாவடியில் போராட்டம் நடத்திய சசிகலா! 

Published on 09/07/2022 | Edited on 09/07/2022

 

Sasikala struggle at the toll booth in the mid night!

 

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான வி.கே. சசிகலா திருச்சியில் இருந்து தஞ்சை நோக்கி சென்ற பொழுது துவாக்குடி சுங்கச்சாவடியில் ஸ்கேன் ஸ்டிக் கார் கண்ணாடியில் அடித்ததை தொடர்ந்து ஆதரவாளர்களுடன் நள்ளிரவில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

 

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான வி.கே. சசிகலா, நேற்று இரவு 11.45 மணிக்கு விழுப்புரத்தில் இருந்து திருச்சி வழியாக தஞ்சைக்கு சென்றுள்ளார். அப்பொழுது துவாக்குடி சுங்கச்சாவடியில் செல்லும் பொழுது 5 கார்களுடன் சென்று உள்ளார். முன்னாள் சென்ற கார் ஸ்கேன் செய்யப்பட்டு சென்றதும் பின்னால் சென்ற சசிகலாவின் கார் சென்று உள்ளது. அப்பொழுது சசிகலாவின் கார் கண்ணாடியில் சுங்கசாவடி ஸ்கேன் ஸ்டிக் தட்டி உள்ளது. இதனால் கோவம் அடைந்த சசிகலா தனது காரை சிறிது தூரம் தள்ளி நிறுத்தி உள்ளார்.

 

உடனே அவரது ஆதரவாளர்களும் சுங்கச்சாவடியில் உள்ள கட்டண நுழைவாயில்களில் ஆங்காங்கே கார்களை அடுத்தடுத்து நிறுத்தி உள்ளனர். உடனடியாக சம்பந்தப்பட்ட சுங்கச்சாவடி மேலாளர் வரவேண்டும் என சசிகலா கூறியதாகவும் மேலும் இது போல் தனக்கு மூன்று முறை இந்த துவாக்குடி சுங்கச்சாவடியில் நடந்துள்ளதாகவும் தன்னை பழிவாங்கும் நோக்கில் இதுபோல் நடத்துகிறார்கள் என்று சந்தேகம் உள்ளது என்றும் கூறியுள்ளார்.

 

Sasikala struggle at the toll booth in the mid night!

 

அதனைத் தொடர்ந்து சசிகலா ஆதரவாளர்களுடன் சுங்கச்சாவடி ஊழியர்கள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். மேலாளர் வரவில்லை என்றால் போராட்டம் தொடரும் என கூறி சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து தகவல் கிடைத்ததும் இரவு ரோந்து  பணியில் இருந்த திருவெறும்பூர் இன்ஸ்பெக்டர் சந்திரமோகன், துவாக்குடி பொறுப்பு இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சசிகலா தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், அவர்கள் பேச்சு வார்த்தையில் உடன்படாததால், சுங்கச்சாவடி மேலாளர் அமர்நாத்ரெட்டியை சம்பவ இடத்திற்கு வரவழைத்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்பொழுது அவர் மன்னிப்பு கேட்டு உள்ளார்.


மேலும் இந்த பிரச்சனை குறித்து நீங்கள் வேண்டுமானால் எழுத்துப்பூர்வமாக புகார் கொடுங்கள் நடவடிக்கை எடுக்கிறோம் என காவல்துறையினர் சசிகலா தரப்பினரிடம் கூறியுள்ளனர். அதற்கு சசிகலா தரப்பினர் புகார் கொடுப்பதாக கூறியுள்ளனர். ஆனால் சசிகலா காரை விட்டு இறங்காமல் காரில் இருந்து போராட்டத்தில் ஈடுபட்டார். 1:15 மணிக்கு பிறகு சசிகலா தரப்பின போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர். இதனால் சுமார் ஒன்றரை மணி நேரம் திருச்சியில் தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


இது பற்றி சுங்கச்சாவடி தரப்பினரிடம் கேட்ட பொழுது சசிகலா வி.ஐ.பி செல்லும் வழியில் வராமல் நார்மலாக செல்லும் பொது வழியில் வந்தார். அதனால் தான் இதுபோன்ற பிரச்சனை ஏற்பட்டதாக கூறினார்கள்.


சசிகலா ஆதரவாளரிடம் கேட்ட பொழுது சசிகலா எப்பொழுதுமே வி.ஐ.பி வழியே வந்ததில்லை. பொது வழியில் தான் செல்வார். எந்த டோல் ப்ளாசாவிலும் இதுபோல் சம்பவங்கள் நிகழவில்லை. துவாக்குடி டோல் பிளாசாவில் மட்டும்தான் இதுபோன்று நடக்கிறது. மூன்றாவது தடவை சசிகலாவுக்கு இது நிகழ்ந்துள்ளது. என்றனர். மேலும், நாளை (9.7.22) துவாக்குடி காவல் நிலையத்தில் முறைப்படி புகார் கொடுக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்