Skip to main content

"நட்பும் நன்றியும் மறவோம்!" - உறவுகளிடம் பகிர்ந்துகொண்ட சசிகலா!

Published on 18/03/2021 | Edited on 18/03/2021

 

Sasikala shared her thought with her family


சிறையிலிருந்து விடுதலையாகி சென்னை திரும்பிய சசிகலா, தீவிர அரசியலில் குதிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அரசியலில் இருந்து விலகியிருப்பதாக அறிவித்த சசிகலா, தி.நகரிலேயே தங்கியிருந்தார். இந்த நிலையில், தஞ்சைக்கு திடீர் எனக் கிளம்பிச் சென்றுள்ளார் சசிகலா. 

 

அவருடைய திடீர் பயணம் குறித்து சசிகலா குடும்ப வட்டாரங்களில் விசாரித்த போது, “மூன்று நாள் இங்கு தங்கியிருப்பது போல அவரது ப்ரோக்ராம் திட்டமிடப்பட்டுள்ளது. அவரது கணவர் நடராஜனின் மூன்றாம் ஆண்டு நினைவுநாள் 20-ந் தேதி அனுஷ்டிக்கப்படுகிறது. அதில், கலந்து கொள்வதற்காகவும், நடராஜனின் சகோதரர் பழனிவேலின் பேரக் குழந்தைகளுக்கு நடக்கும் காதணி விழாவில் பங்கேற்பதற்காகவும் வந்திருக்கிறார்.

 

குலதெய்வம் கோவிலில் நடந்த காதணி நிகழ்வில் கலந்து கொண்ட சசிகலா, தங்களின் முன்னோர்களை வழிபட்டார். மிகவும் சோக வயப்பட்டவராக காணப்பட்டார் சசிகலா. உறவுகள் பலரும் வந்திருந்தனர். சசிகலாவிடம், நடராஜன் இருந்தபோது குடும்ப உறவுகள் எல்லாம் எந்தளவுக்கு ஒற்றுமையாக இருந்தது என்பதைச் சொல்லி பலரும் கண்கலங்கினார்கள். மூன்று நாள் தங்கியிருந்துவிட்டு பிறகு சென்னைக்குத் திரும்புவார்” என்றனர்.

 

Sasikala shared her thought with her family

 

குலதெய்வம் கோயிலில் நடந்த நிகழ்விற்கு வந்திருந்த சசிகலா, அங்குள்ள சாமி பீடத்தில் எழுதியிருந்த, ‘ நட்பும் நன்றியும் மறவோம்’ என்கிற வாசகத்தையே ரொம்ப நேரம் பார்த்துக் கொண்டிருந்தார். அதைக் கவனித்த அவரது உறவினர்கள், “மாமா நடராஜன்தான் இதனை எழுதச் சொன்னார். குல தெய்வம் கோவிலுக்கு வருகிற நமது குடும்பத்தினர் இந்த வாசகங்களை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே இதனை எழுதச் சொன்னார்” என்று சசிகலாவிடம் தெரிவித்திருக்கிறார். 

 

அப்போது, “எவ்வளவு அர்த்தம் பொதிந்த வார்த்தைகள் இது. நம் குடும்பத்திற்கு மட்டுமல்ல; அரசியலுக்கும் பொருந்துவதாக இருக்கிறது” என்று சொல்லியிருக்கிறார் சசிகலா! அவர் நம்பியிருந்த குடும்ப உறவுகளும், அரசியல் உறவுகளும் நன்றி மறந்தவர்களாக இருக்கிறார்கள் என்பதை உணர்த்துவதற்காக சசிகலா அப்படிச் சொன்னதாக அவரது குடும்பத்திற்கு நெருக்கமானவர்கள் கூறுகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'2026 தேர்தலில் நான் யாரென்று காட்டுவேன்' - சசிகலா

Published on 21/03/2024 | Edited on 21/03/2024

 

nn

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

ஆனால் சசிகலா தரப்பில் எந்தவித தேர்தல் நடவடிக்கைகளும் எடுக்கப்படாத நிலையில், புதுக்கோட்டையில் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அவரிடம் செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளை முன்வைத்தனர். அவர் பேசுகையில், ''இந்தத் தேர்தல் முடிவுக்கு பிறகு தான் அண்ணா திமுக என்ன என்பதை எல்லோரும் புரிந்து கொள்வார்கள். நிச்சயமாக அதிமுக ஒன்றாவதற்குரிய நேரம் வந்துவிட்டதாகத் தான் என்னுடைய அனுபவத்தில் நான் சொல்கிறேன். தமிழ்நாடு அரசு இப்பொழுது தேர்தல் என்ற காரணத்தைச் சொல்லி தேர்தலை பற்றி மட்டுமே பேசிக் கொண்டிருக்கிறார்கள். நேற்று கூட ஒரு துப்புரவு பெண் தொழிலாளி தூத்துக்குடியில் பட்டப்பகலில் கொலை செய்யப்பட்டிருக்க சம்பவம் நடந்துள்ளது. எதற்காக நடந்தது என்பதை நான் சொல்ல விரும்பவில்லை. ஆனால் நான் கேட்கின்ற ஒரே கேள்வி முதலமைச்சர் கையில் இருக்கின்ற காவல்துறை என்ன செய்து கொண்டிருக்கிறது? பூ கட்டிக்கிட்டு இருக்கா அல்லது இவர்களுடைய பிரச்சாரத்திற்கு துணையாக பின்னாடி போய்க் கொண்டிருக்கிறதா? என முதலமைச்சர் தான் சொல்ல வேண்டும்.

ஆவின் பாலில் புழு, பூச்சி இருக்கிறது என்று சொல்கிறார்கள். இது முதல் முறையல்ல தொடர்ந்து திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து இது நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் உடனே ஒரு அறிக்கை கொடுக்கிறார்கள். இந்த பாலை யாரும் உபயோகிக்க வேண்டாம். இதற்கா அரசாங்கம் இருக்கிறது. இதற்காகவா பால்வளத்துறை இருக்கிறது. அதற்கு ஒரு மந்திரி வேறு. எப்படி நிர்வாகம் நடத்துகிறீர்கள். அப்படி என்றால் உங்கள் நிர்வாகத்தில் குறை இருக்கிறது. அது பாலில் தெரியுது. இதே ஜெயலலிதா இருந்தபோதெல்லாம் இது நடந்ததா? இது மாதிரி ஒரு குறை நடந்திருக்குமா? இல்லையே. ஏனென்றால் அவர்களுடைய கவனம் எல்லா இடத்திலும் இருந்தது.

இப்போது வரைக்கும் முதலமைச்சர் நினைப்பு, எப்படியாவது இந்த தேர்தலில் பொய் சொல்லி ஜெயிக்கணும் என்பதுதான். இது நாடாளுமன்றத் தேர்தல். 2026 சட்டமன்ற தேர்தல் தான் எங்களுக்கும் திமுகவிற்கான நேரடி தேர்தல். அந்த தேர்தலில் நான் யார் என்று காட்டுவேன். திமுக என்ன ஆகும் என்பதையும் நான் கணித்து வைத்திருக்கிறேன்'' என்றார்.

Next Story

சசிகலாவை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் நடிகர் ரஜினிகாந்த்!

Published on 24/02/2024 | Edited on 24/02/2024
Actor Rajinikanth met and congratulated Sasikala

சென்னை போயஸ் கார்டனில் உள்ள மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா வசித்த வேதா நிலைய இல்லத்துக்கு எதிரே வி.கே. சசிகலா புதியதாக வீடு ஒன்றைக் கட்டியுள்ளார். ஜெயலலிதா இல்லம் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த வீட்டிற்கு கடந்த மாதம் கிரகப் பிரவேசம் நடைபெற்றது. முன்னதாக நடிகர் ரஜினிகாந்திற்கு கிரகப் பிரவேசத்தில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ரஜினிகாந்திற்கு கிரகப் பிரவேசத்தில் கலந்த கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் ரஜினிகாந்த் சசிகலாவின் வீட்டுக்கு நேரில் இன்று (24.02.2024) வருகை தந்தார். இதனையடுத்து சசிகலாவுடன் சிறிது நேரம் சந்தித்துப் பேசி தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து அங்கிருந்து கிளம்பிய ரஜினிகாந்த்தை வீட்டின் வாசல் வரை வந்து சசிகலா வழியனுப்பி வைத்தார். அப்போது ரஜினிகாந்த் கையெடுத்துக் கும்பிட்டார்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், “இந்த வீடு கோயில் போல உள்ளது. இந்த வீடு சசிலாவுக்கு பெயர், புகழ், சந்தோஷம், நிம்மதி தர வேண்டும் என இறைவனை வேண்டிக் கொள்கிறேன்” என்றார். மேலும், ‘ஜெயலலிதாவின் ஆளுமை மிக்க இடத்தை தமிழகத்தில் யார் பூர்த்தி செய்வார் என நினைக்கிறீர்கள்’ என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், “அரசியல் பற்றி பேச விரும்பவில்லை” எனத் தெரிவித்தார்.