தமிழகத்தில் 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. அரசியல் கட்சிகளும் கூட்டணி, தொகுதிப் பங்கீடு, வேட்பாளர் நேர்காணல், வேட்புமனுத் தாக்கல் என அனைத்தையும் முடித்து தேர்தலுக்கான இறுதிக்கட்டப் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. வாக்குப்பதிவு நாளுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் பிரச்சாரக் களம் சூடுபிடித்துள்ளது.
இந்நிலையில் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்றுவந்த சசிகலா தமிழகத்தில் பல்வேறு கோவில்களுக்குச் சென்றுவரும் நிலையில், தற்பொழுது காஞ்சிபுரம் சங்கரமடத்தில் சங்கராச்சாரியார் விஜயேந்திரரை சந்தித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. காஞ்சிபுரம் சங்கரமடத்தில் உள்ள விஜயேந்திரரை அவரது அறையில் சந்தித்து ஒரு மணி நேரத்திற்கு மேலாகப் பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.