சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் தண்டனை அனுபவித்து வரும் சசிகலா, இம்மாதம் 27 ஆம் தேதி விடுதலையாக வாய்ப்புள்ளதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்றத்தால் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா, கடந்த 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், சசிகலாவுக்கு எதிராக வருமான வரித்துறை கடந்த 2008-ம் ஆண்டு தாக்கல் செய்த வழக்கு, நீதிபதிகள் துரைசாமி மற்றும் தமிழ்ச்செல்வி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, சசிகலா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் தண்டனை அனுபவித்து வரும் சசிகலா, இம்மாதம் 27 ஆம் தேதி விடுதலையாக வாய்ப்புள்ளதால், அவரிடம் விளக்கங்கள் பெற்று பதில் மனுத்தாக்கல் செய்ய அவகாசம் வழங்கவேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார்.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கின் விசாரணையை பிப்ரவரி 4 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர். கடந்த 1994 - 95 ஆம் ஆண்டில், சசிகலா தாக்கல் செய்த வருமானவரிக் கணக்கில் 4 லட்ச ரூபாயைக் குறைத்துக் காட்டியதாக மதிப்பீட்டு அதிகாரி உத்தரவு பிறப்பித்திருந்தார். இந்த உத்தரவை வருமான வரித்துறை மேல்முறையீட்டு தீர்ப்பாயம் ரத்து செய்ததை எதிர்த்து, வருமான வரித்துறை ஆணையர் கடந்த 2008-ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல்செய்த வழக்குதான் விசாரணைக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.