Sarathkumar speech at the party meeting in Nellai

திருநெல்வேலி தனக்குத் திருப்பு முனையாக அமையும் என்பது நாட்டாமை சரத்குமாரின் அசைக்க முடியாத திட்டம். எனவே அதனைக் குறிவைத்து தனது கட்சியின் செயல்பாடுகள் தன்னுடைய மூவ்மெண்ட்ஸ்களை வைத்துக் கொண்டிருக்கிறார் என்கிறார்கள் சரத்குமாரின் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியினர்.

அதன் காரணமாகவே நெல்லை பாராளுமன்றத்தை மையமாக வைத்து அங்கே ச.ம.க.வின் நாடாளுமன்ற பொறுப்பாளர்கள் அறிமுகக் கூட்டத்தை நடத்தியிருக்கிறார் சரத்குமார். நெல்லை பாராளுமன்றத்தில்ராதாபுரம், நாங்குநேரி, அம்பை, ஆலங்குளம் உள்ளிட்ட தொகுதிகளில் சரத்குமாரின் நாடார் சமூக மக்கள் கணிசமாக நிறைந்திருந்தாலும், பாளைமற்றும் நெல்லையிலும் அம்மக்கள் பரவலாக உள்ளனர். அதனடிப்படையிலேயே நெல்லை பாராளுமன்றம், தற்போதைய சிட்டிங் எம்.பி. உள்ளிட்டோர் உட்பட நாடார் சமூகம் சார்ந்தவர்களே.

மேலும் சரத்குமார் தென் மாவட்டத்தின் திருச்செந்தூரைப் பூர்வீகமாக கொண்டவரானாலும் நடிகரும்மறைந்த தி.மு.க. அமைச்சருமானகே.பி. கந்தசாமியின் நெருங்கிய உறவினரும் கூட. அதனால் தென் மாவட்டங்களால் அறியப்பட்டவர் 1998களில் அரசியலில் அடியெடுத்து வைத்த சரத்குமார், கே.பி. கந்தசாமி வழியில் தி.மு.க.வில் ஐக்கியமானவருக்கு திமுக தலைவர்கலைஞர், தொகுதி மறு சீரமைப்பிற்கு முன்பு தூத்துக்குடியை உள்ளடக்கிய நெல்லை பாராளுமன்றத்தொகுதியில் 1999இல்சரத்குமாரை தி.மு.க.வின் வேட்பாளராக்கினார். நடிகர் தென் மாவட்டத்துக்காரர் என்கிற பிரபல பின்புலத்தைக் கொண்ட பாப்புலரான வேட்பாளர் என்பதால் நெல்லை பாராளுமன்ற களத்தில் உஷ்ணம் தகித்தது. முன்னணிக்கு வந்துகொண்டிருந்த வேளையில் சில பல உள்ளடி காரணமாக வெற்றி வாய்ப்பை இழந்தார் சரத்குமார்.

Advertisment

Sarathkumar speech at the party meeting in Nellai

இதன் எதிரொலியாக அ.தி.மு.க.வின் ‘ஜெ’.வின் பக்கம் சரத்குமார் இணைய அவரும் 2011 சட்டமன்றத்தேர்தலில் போட்டியிட வைத்தார். அ.தி.மு.க.வின் தென்காசி சட்டமன்ற உறுப்பினரானார் சரத்குமார். காலச் சூழலில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி என்று ஆரம்பித்த சரத்குமாரின் பக்கம் கரு. நாகராஜன் இருந்தார். கட்சியின் செயல்பாடுகள் கரு. நாகராஜனையே சார்ந்திருந்தது. அதன்பின் சரத்குமாருடன் ஏற்பட்ட பிணக்கால், அவரை விட்டுப் பிரிந்த கரு. நாகராஜன் பா.ஜ.க.வில் ஐக்கியமாக, கட்சி அவரை மாநில துணைத்தலைவராக்கியது. தேசியக் கட்சிமட்டுமல்ல மத்தியில் ஆட்சி அதிகாரம் என்றசக்தியின் காரணமாக, மீண்டும் சரத், கரு. நாகராஜனின் தொடர்புகள் ஏற்பட்டுள்ளன. அவர் மூலம் பா.ஜ.க.வின் பக்கமாகதனது ஆதரவு ஸ்டண்ட் எடுத்திருக்கிறார் சரத்குமார். காரணம் தமிழகம் அறியப்பட்ட பிரபல நடிகர் போதாக்குறைக்கு தென் மாவட்டங்களில் கணிசமாக நிறைந்திருக்கும் நாடார் மக்கள் சமூகம் சார்ந்தவர் சற்று முயன்றால் பா.ஜ.க.வின் சப்போர்ட்டில் சரத்குமார் நெல்லை எம்.பி ஆகிவிடலாம் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையில் சரத்திற்கு பிராக்கெட் போட்ட பா.ஜ.க. தன்னுடைய ஆதரவை வழங்கி வருவதாகச் சொல்கிறார்கள் ச.ம.க.வினர்.

அதன் விளைவே தென்மண்டலமான நெல்லை பாராளுமன்றத்தை குறிவைத்து சரத்குமார் தன் கட்சியின் பாராளுமன்றத்தொகுதி பொறுப்பாளர்களின் அறிமுகக் கூட்டத்தினை வைத்திருக்கிறார் என்றும் ச.ம.க.வினர் சுட்டிக் காட்டுகிறார்கள். ச.ம.க.வின் கட்சி நிகழ்ச்சி என்றாலும், கட்சி நிர்வாகிகள், சரத்தின் ஆதரவாளர்கள் கலந்துகொண்ட கூட்டத்தில் தென் மாவட்டத்தின் நாடார் சமூக அமைப்புகளைச் சார்ந்தவர்கள் எனக் கூட்டம் கணிசமாகவே திரண்டிருந்தது. கட்சித் தலைவர் சரத்குமாருக்கான வரவேற்புகள் அமர்க்களப்பட்டுள்ளன. ஏணி போன்ற பெரிய ஜெயண்ட் வீலில் அட்டகாசமான மாலையை செட் செய்து விண்ணிலிருந்து பறந்து இறங்கி சரத்குமாருக்கு மாலை அணிவித்தது போன்று அமைக்கப்பட்ட ஏற்பாடுகள் திரண்டிருந்தவர்களை மிரள வைத்தது.

Advertisment

Sarathkumar speech at the party meeting in Nellai

தொடர்ந்து பாராளுமன்றத்தொகுதிகளின் தனது கட்சிப் பொறுப்பாளர்களை நியமித்து அறிவிப்பு வெளியிட்ட சரத், தன்னுடைய இலக்கு நெல்லை என்பதால் அந்தப் பாராளுமன்றத் தொகுதிப் பொறுப்பாளராக தன்னையே அறிவித்தார். பொறுப்பாளர்கள் நியமனத்தையடுத்துப் பேசிய சரத்தின் உரையில் பா.ஜ.க. ஆதரவு தூக்கலாகவே இருந்தது.

சென்னையில் ஏற்பட்ட புயல் மழையை அரசால் எதிர்கொள்ள முடியவில்லை. மழை நீர் வழிந்து செல்ல உரிய வழித் தடங்கள் இல்லை. அவைகளனைத்தும் பிளாட்கள், கட்டிடமாகிவிட்டன. இந்த கதிக்கு 56 ஆண்டுகள் ஆட்சியிலிருந்த திராவிட இயக்கங்களே காரணம். இலவசம் என்று கொடுத்து இப்படியாக்கிவிட்டார்கள். அதனைத் தவிர்த்து அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மக்களுக்குச் செய்து கொடுத்திருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது. தேர்தல் நேரத்தில பணத்தை கொடுத்து வாக்குகளை வாங்கி விடலாம் என்று நினைக்கிறார்கள். மக்களும் தற்போது ஏற்பட்ட நிலையை மறந்து வாக்களித்து வருகிறார்கள்.

இலவசங்கள் கூடாது என்பது எங்களின் கொள்கை. 2026 சட்டமன்றத்தேர்தலில் எங்களின் வேகம் தெரியும். உழைத்து வாழவேண்டும். உழைப்பில் கிடைக்கும் ரெண்டாயிரம் ரூபாயில் குடும்பம் நடத்தினால் அது உடம்பில் ஒட்டும். இலவசங்கள் உடம்பில் ஒட்டாது. தெலுங்கானாவில் இலவசங்களைக் கொடுத்ததால் அந்த அரசு தோல்வியடைந்தது. வெளிநாடுகளில் இந்தியாவுக்கு அதிக மரியாதை கிடைத்துள்ளது. இந்தியா பொருளாதார ரீதியில் வளர்ந்துவிட்டது. இதற்கு காரணம் பிரதமர் மோடி தான். ஊழலற்ற ஆட்சியை பா.ஜ.க. கொண்டு வந்துள்ளது. பெருந்தலைவர் காமராஜர் வழியில் நாங்கள் பயணித்து வருகிறோம்” என்றார் குரலை உயர்த்தி.நாட்டாமை சரத்குமாருக்கு திருநெல்வேலி திருப்பு முனையாகுமா?