publive-image

தமிழகத்தில் கீழடி, கொந்தகை, சிவகளை, கொடுமணல், ஆதிச்சநல்லூர், தாமிரபரணி ஆற்றுப்படுகை கிராமங்களில் அகழாய்வு நடத்தக் கோரி எழுத்தாளர் காமராசு, புஷ்பவனம், ஆனந்த் ராஜ் உள்ளிட்டோர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தனர்.

Advertisment

இந்த வழக்கு இன்று (10/08/2021) நீதிபதிகள் கிருபாகரன், துரைசாமி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தொல்லியல் துறை தரப்பில் டெல்லியிலிருந்து நம்பி ராஜன் மற்றும் அஜய் யாதவ் ஆகியோர் காணொளி மூலம் ஆஜராகியபோது, "அகழாய்வுத்துறையில் 41 பணியிடங்கள் புதுப்பிக்கப்பட்டிருப்பதாகவும், அவற்றில் ஏழு இடங்கள் கல்வெட்டு ஆய்வாளர் பணியிடங்கள்" எனவும் குறிப்பிட்டனர்.

Advertisment

அதற்கு நீதிபதிகள், இதுவரை படியெடுக்கப்பட்ட கல்வெட்டுகளின் விவரங்கள் குறித்து கேள்வி எழுப்பினர். இதற்கு தொல்லியல்துறை தரப்பு, "மொத்தமாக சுமார் 86,000 கல்வெட்டுகள் படியெடுக்கப்பட்டதில் 27,000 தமிழ், 25,756 சமஸ்கிருதம், 9,400 கல்வெட்டுகள் கன்னடம், 7,300 கல்வெட்டுகள் தெலுங்கு மொழிக்கானவை எனப் பதிலளித்தது.

இதையடுத்து நீதிபதிகள், "தொல்லியல் தரவுகளுடன் ஒப்பிடுகையில் தமிழ் மொழி கல்வெட்டு தொடர்பான விவரம் குறைவாகக் குறிப்பிடப்படுவது போல் உள்ளது. மொழிகளுக்கு இடையே வேறுபாடு காட்டப்படுவதை ஏற்க இயலாது. அனைத்து மொழிகளையும் மதிக்கிறோம்; ஆனால் ஒவ்வொரு மொழியின் சிறப்பும் பாதுகாக்கப்பட வேண்டியவை. தமிழ் கல்வெட்டுகளைக் கண்டறிந்து தமிழைப் பெருமைப்படுத்தியவர்கள் பிரிட்டிஷ்காரர்களே. அதிக கல்வெட்டுகளைக் கொண்ட தமிழுக்குத் தனியாக ஏன் அலுவலகம் அமைக்கவில்லை? அதிக கல்வெட்டுகளைக் கொண்ட தமிழ் மொழி திராவிட மொழியாகக் கருதப்படுகிறது.

அதிக கல்வெட்டைக் கொண்ட தமிழ், திராவிட மொழியாகக் கருதப்படுகையில் சமஸ்கிருதத்தை இந்தோ- ஆரிய மொழியாகத் தானே இருக்க வேண்டும்? தொல்லியல் துறையில் திறமையானவர்களை நியமித்து பணியிடங்களை நிரப்பினால் சிறப்பாகப் பணி நடைபெறும். மொழி வாரியாக கல்வெட்டு எண்ணிக்கை, நிபுணர்கள் எண்ணிக்கை, காலிப் பணியிட விவரங்கள் என்ன?" எனச் சரமாரியாகக் கேள்வி எழுப்பி, தொல்லியல் துறை எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர்.