Skip to main content

நூதன முறையில் பணம் கையாடல்; மோசடியில் ஈடுபட்ட பெண் கைது

Published on 08/03/2023 | Edited on 08/03/2023

 

sankarapuram atm money incident action taken by police

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தை சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மனைவி பிரியங்கா (வயது 31). 2020 ஆம் ஆண்டு ஹிட்டாச்சி நிறுவனம் இவரை முகவராக வைத்து அந்தப் பகுதியில் ஒரு ஏடிஎம் மையத்தை நிறுவியது. மேலும், வங்கியில் இருந்து பணம் எடுத்து வந்து நிரப்பும் பொறுப்பு பிரியங்காவிற்கு வழங்கப்பட்டது. இதற்காக ஹிட்டாச்சி பேமெண்ட் சர்வீஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவன மும்பை தலைமை அலுவலகத்திலிருந்து சங்கராபுரத்தில் உள்ள ஐசிஐசிஐ வங்கி கணக்குக்கு பணம் அனுப்பப்படும். இந்த பணத்தை எடுத்து ஏடிஎம் மிஷினில் நிரப்புவதற்கு ஒரு ரகசிய குறியீடு எண் பிரியங்காவுக்கு வங்கி சார்பில் அனுப்பப்படும். அந்த எண்ணை வங்கியில் காட்டி பணத்தை எடுத்து வந்து ஏடிஎம் மிஷினில் நிரப்பும் பணியை பிரியங்கா செய்து வந்துள்ளார்.

 

இந்நிலையில் 2022 ஆம் ஆண்டு கொரோனா காலத்தில் ஏடிஎம் மிஷின் கோளாறுகளை சரி செய்வதற்கு காலதாமதம் ஆனது. அந்த காலகட்டத்தில் மும்பையில் இருந்து அனுப்பப்பட்ட சுமார் ஒரு கோடியே 15 லட்சம் ரூபாய் பணத்தை ரகசிய எண்ணைக் கொண்டு எடுத்த பிரியங்கா தனது சொந்த வங்கிக் கணக்கில் செலுத்திக் கொண்டுள்ளார். இந்த மோசடியைக் கண்டறிந்த ஹிட்டாச்சி நிறுவனத்தின் பேமெண்ட் சர்வீஸ் துணை தலைவரான ஜேம்ஸ் பிலிப் என்பவர், பிரியங்கா மீது சங்கராபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

 

அவரது புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் பாண்டியன் முத்து வழக்கு பதிவு செய்து பிரியங்காவிடம் விசாரணை நடத்தினார். அதில் பிரியங்கா ஹிட்டாச்சி நிறுவனத்தின் பணத்தை எடுத்து தனது வங்கிக் கணக்கில் செலுத்தி கொண்டது தெரியவந்தது. இதையடுத்து பிரியங்கா, அவருடன் பண மோசடிக்கு துணையாக இருந்த விஜயகுமார், சிவக்குமார், தன்ராஜ் ஆகிய நால்வர் மீதும் வழக்குப்பதிவு செய்து பிரியங்காவை கைது செய்துள்ளனர். ஏடிஎம் மிஷினில் பணம் நிரப்பும் பணி மூலம் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் பணம் கையாடல் செய்துள்ள சம்பவம் சங்கராபுரம் பகுதி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.