Skip to main content

தூய்மைப் பணியாளர்களின் கால்களைக் கழுவி, மலர்தூவி பாதபூஜை செய்து நிவாரண உதவிகள் வழங்கிய தம்பதி!

Published on 13/05/2020 | Edited on 13/05/2020

 

sanitary workers one couple provide some vegtables and grocery products


கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே சி.கொத்தங்குடி ஊராட்சியில் முத்தையா நகர் உள்ளது. இந்த நகரில் செம்மையான முறையில் உயிரைப் பொருட்படுத்தாமல் கிருமிநாசினி தெளித்து அப்பகுதி மக்களைப் பாதுகாத்து வரும் தூய்மைப் பணியாளர்களின் தன்னலமற்ற பணிகளை மதிக்கும் வகையில் அவர்களுக்குச் சொந்த செலவில் நிவாரணம் வழங்க அப்பகுதியில் வசிக்கும் செல்வம்- நாகராணி தம்பதியினர் முடிவு செய்தனர்.


அதனைத் தொடர்ந்து தம்பதியினர், நகரில் தூய்மைப் பணிகளில் ஈடுபட்டிருந்தப் பணியாளர்களை வீட்டுக்கு அழைத்து வீட்டின் வாசலில் அனைவரையும் வரிசையாக நிற்க வைத்து, அனைத்து தூய்மைப் பணியாளர்களின் கால்களைக் கழுவி, மலர் தூவி, கழுத்துக்கு மாலை அணிவித்து பாதபூஜை செய்து சால்வை போர்த்தி கௌரவித்தனர்.
 

 

sanitary workers one couple provide some vegtables and grocery products


மேலும் இந்தச் சூழலில் வீட்டை விட்டு வெளியே துணிச்சலாக வந்து பொதுமக்களைக் காக்கும் பணிகளைச் செய்யும் உங்களின் பணிகள் பாராட்டுக்குரியது என்று வாழ்த்தி அரிசி, காய்கறி ,மளிகை உள்ளிட்ட அத்தியாவாசியப் பொருட்களை அவர்களுக்கு வழங்கினர். இது அப்பகுதியில் உள்ள மக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. பலரும் இதுபோல் செய்யவேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்கியது. மேலும் தம்பதியினர் தூய்மைப் பணியாளர்களின் சேவையை மதிக்கவேண்டும் என்று அனைவரிடத்திலும் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள். இது சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதனையறிந்த பலர் செல்வம்- நாகராணி தம்பதியினரை தொலைபேசி மற்றும் நேரில் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்து வருகிறார்கள்.

அதேபோல் ஊராட்சியில் உள்ள சரஸ்தி அம்மாள் நகரில், சரஸ்வதி அம்மாள் நகர் குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் நகரில் தூய்மைப் பணிகளை மேற்கொள்ளும் தூய்மைப் பணியாளர்களுக்கு அரிசி, மளிகை என ஒரு மாதத்திற்கு வேண்டிய அத்தியவாசியப் பொருட்கள் வழங்கபட்டது. மேலும் நகரில் வசிக்கும் செவிலியர்களுக்கு உயர் ரக முகக் கவசம், கிருமி நாசினி வழங்கி அவர்களின் பணிகள் கௌரவிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சங்கத்தின் தலைவர் வெங்கடேசன், செயலாளர் ஹரிகுமார், பொருளாளர் கோபி உள்ளிட்ட சங்க உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கள்ள மது விற்பதை காட்டிக் கொடுத்தவருக்கு மிரட்டலா?-100க்கு அழைத்து புலம்பிய புகார்தாரர்

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Complainant who called 100 to threaten the person who betrayed him for selling fake liquor?

கடலூரில் கள்ளத்தனமாக மதுவிற்ற சம்பவம் தொடர்பாக புகார் அளித்தவருக்கு கொலை மிரட்டல் விடப்பட்டதாக நபர் ஒருவர் பேசும் ஆடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ளது ராமாபுரம் பகுதி. இந்த பகுதியில் கள்ளத்தனமாக மது விற்பனை நடைபெற்று வருவதாக ஜேசுதாஸ் என்பவர் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் புகார் கொடுத்தவரின் செல்போன் நம்பரை காவல்துறையினரே கள்ளமது விற்ற நபருக்கு தந்து விட்டதாக அந்த நபர் மீண்டும் அவசர அழைப்பு எண்ணான 100 க்கு தொடர்பு கொண்டு புலம்பியுள்ளார்.

இது தொடர்பான ஆடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் பேசும் புகாரளித்த ஜேசுதாஸ் என்பவர் ''சார் கள்ளச்சாராயம் விற்கிறார்கள் என்று சொல்லிவிட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு கனெக்சன் கொடுங்க என கம்ப்ளைன்ட் கொடுத்தேன். ஆனால் அவர்கள் என்னான்னா என்னுடைய நம்பரை எடுத்து இவன்தான் புகார் கொடுக்கிறான் என கள்ளச்சாராயம் விற்றவர்களிடம் என் நம்பரை போட்டு கொடுத்துள்ளார்கள். அவர்கள் போலீசுக்கு நீதாண்டா போன் பண்ணுனே எனக்கூறி, உன்ன வெட்டாம விடமாட்டேன் என மிரட்டுகிறார்கள். நான் தோப்பில் வந்து ஒளிந்து கொண்டிருக்கிறேன். தண்ணீர் கூட குடிக்க முடியவில்லை'' என பேசும் அந்த ஆடியோ வைரலாகி வருகிறது.

Next Story

நீர் மோர் பந்தல் திறப்பதில் கோஷ்டி பூசல்;  மாறி மாறி புகாரளிக்கும் அதிமுக!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Group fight in opening of Neer Mor Pandal; AIADMK reports alternately

அண்மையில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்ட எடப்பாடி பழனிசாமி, கோடைகாலம் என்பதால் வெப்பத்தை தணிப்பதற்காக நீர் மோர் பந்தல் அமைக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். அதன்படி அதிமுகவினர் பல இடங்களிலும் நீர் மோர் பந்தல்களை அமைத்து வருகின்றனர். இந்நிலையில் கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பதில் இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட மோதல் போக்கு  காரணமாக மாறி மாறி புகார் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் திருப்பாதிரிபுலியூர், மஞ்சக்குப்பம் மற்றும் முதுநகர் பகுதிகளில் அதிமுக மாநில எம்ஜிஆர் இளைஞரணி துணைச் செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் அவருடைய ஆதரவாளர்கள் நீர் மோர் பந்தல் திறக்க ஏற்பாடு செய்துள்ளனர். இந்நிலையில் முன்னாள் தொழில்துறை அமைச்சரும், அதிமுக மாவட்ட செயலாளருமான எம்.சி.சம்பத், அனுமதியின்றி நீர்மோர் பந்தல் அமைக்க அனுமதி தந்தால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என காவல்துறையில் வாய்மொழி புகார் அளித்ததாகவும், அதிமுக சார்பில் மாவட்டச் செயலாளர்கள் யாரை பரிந்துரை செய்கிறார்களோ அவர்கள் தான் நீர் மோர் பந்தலை திறக்க வேண்டும் எனவும் கூறப்பட்டது.

இந்நிலையில் அனுமதியின்றி நீர் மோர் பந்தல் அமைப்பதற்காக செய்யப்பட்ட அனைத்து ஏற்பாடுகளையும் காவல்துறையினர் அப்புறப்படுத்தினர். அதேநேரம் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதிகோரி அதிமுக மாநில எம்ஜிஆர் அணி இளைஞரணி செயலாளர் கார்த்திகேயன் அவருடைய ஆதரவாளர்களுடன் கடலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார். நீர் மோர் பந்தல் அமைக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எங்களை அறிவுறுத்தி உள்ளார். அதன்படி நாங்கள் அதை செய்து வருகிறோம் என அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மனு கொடுக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே அதிமுக மாவட்ட அவைத்தலைவர் குமார் தலைமையில் கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட பல பகுதிகளில் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில், அதிமுகவின் மாவட்டச் செயலாளர் எம்.சி.சம்பத் யாரை அனுமதிக்கிறாரோ அவர்களுக்கு மட்டும்தான் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி அளிக்க வேண்டும். இல்லை என்றால் சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளனர்.

இப்படி கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பு தொடர்பாக அதிமுகவினர் இரு கோஷ்டியாக மாறி மாறி மனு அளித்துள்ளது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.