Skip to main content

பாதங்களைக் கழுவி மாலைகள் அணிவித்தால் போதுமா? ஈரோட்டில் தூய்மைப் பணியாளருக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்!

Published on 16/05/2020 | Edited on 16/05/2020

 

incident


அந்தக் காட்சியைப் பார்த்தவர்கள் பதறினர். ஈரோடு மாவட்டம் பவானி அருகே நெருஞ்சிப்பேட்டை பேரூராட்சியில் 3- ஆவது வார்டு ஆதி திராவிடர் காலனியில் வசித்த பாலன், 13 ஆண்டுகளாக தினக்கூலி அடிப்படையில் தூய்மைப் பணியாளராகப் பணியாற்றி வந்தார்.
 


மே 7 ஆம் தேதி காலையில், பவானி - மேட்டூர் சாலையில் நெருஞ்சிப்பேட்டை அங்காளம்மன் கோயில் தெருவில் குப்பை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். சக தொழிலாளர்கள் மருத்துவ அவசரத்திற்காக வேறு வழியில்லாமல் பேரூராட்சியின் அந்தக் குப்பை வண்டியில் ஏற்றிக்கொண்டு அம்மாபேட்டை அரசு ஆரம்பச் சுகாதார நிலையத்துக்குக் கொண்டு சென்றுள்ளனர். அங்கே நிறுத்தப்பட்டிருந்த 108 ஆம்புலன்ஸ் வாகனத்தில் இருந்த பணியாளர்கள் பாலனை பரிசோதித்தபோது, அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என்பது தெரிந்தது. அதிர்ச்சியடைந்த சக தொழிலாளர்கள் பேரூராட்சி அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்தனர்.

இறந்த பாலன் உடலை அவரது வீட்டுக்குக் கொண்டு செல்ல கேட்டனர் 108 ஆம்புலன்ஸில், இறந்தவர் உடலை கொண்டு செல்ல மாட்டோம் என மறுத்து விட்டனர். வெளியூரிலிருந்து அமரர் ஊர்தியை உடனே வரவழைக்க முடியவில்லை. பேரூராட்சி அதிகாரிகளும் எந்த ஏற்பாட்டையும் செய்யவில்லை.
 

 


வேறு வழியே இல்லாமல் குப்பை சேகரிக்கும் வாகனத்தில் பாலனின் உடலை ஏற்றி நெரிஞ்சிப் பேட்டையில் உள்ள அவரது வீட்டுக்குக் கொண்டு சென்றனர். அன்று மாலை பாலன் உடல் தகனம் செய்யப்பட்டது. பாலனுக்கு தங்கமணி என்ற மனைவியும், 13 வயது தீனா, பத்து வயது சுஜீத் என்ற இரண்டு மகன்களும், மாரியம்மாள் என்ற அவரது வயதான தாயாரும் உள்ளார்கள். பாலனின் வருமானத்தை நம்பியே வாழ்ந்து வந்த அவரது குடும்பம் இப்போது நிலை குலைந்து போயுள்ளது.

இதுபற்றி ஈரோடு மாவட்ட உள்ளாட்சித் துறை பணியாளர் சங்க (ஏ.ஜ.டி.யு.சி.) தலைவர் சின்னசாமி கூறுகையில், "ஊரடங்கு காலத்தில் உயிரைப் பணயம் வைத்து பணியில் ஈடுபட்டிருந்த துப்புரவு பணியாளர் பாலன் அவர்கள் பணியின் போதே இறந்து விட்டார். எனவே தமிழக அரசு அவரது குடும்பத்திற்கு கரோனா காப்பீடு திட்டத்தில் அறிவிக்கப்பட்டபடி ஐம்பது லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்க வேண்டும். அவரது மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டும்'' என்றார்.
 

http://onelink.to/nknapp


பாதங்களைக் கழுவி மாலைகள் அணிவித்து கௌரவப்படுத்துகிறோம் எனப் புகைப்படங்களில் போஸ் கொடுத்தால் மட்டும் போதாது. இறந்தவர் உடலை அதே குப்பை வண்டியில் கொண்டு வந்த கொடுமை ஏன் ஏற்பட்டது? எனக் கண்ணீருடன் கேள்வி கேட்கிறார்கள் சக தொழிலாளர்கள்.


 

 

சார்ந்த செய்திகள்