Skip to main content

குடிநீர் தட்டுப்பாட்டை உருவாக்கும் மணல் கொள்ளை...!

Published on 02/05/2019 | Edited on 02/05/2019

வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த சோலூர் கிராமத்தில் சுமார் 1500-க்கும் மேற்பட்ட வீடுகளில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராம மக்களுக்கு அருகிலுள்ள தேவலாபுரம் ஊராட்சிக்குட்பட்ட கம்மகிருஷ்ணம்பல்லி என்கிற குக்கிராமத்துக்கு அருகே செல்லும் பாலாற்றங்கரையில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு பூமிக்கு அடியில் பைப் லைன் மூலம் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக குடிநீர் வழங்கபட்டு வருகிறது.

 

water

 

இந்நிலையில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு இருக்கும் பகுதிக்கு அருகில், அரசின் அனுமதியின்றி மணல் திருடுவது, பாலாற்றங்கரையோரம் புறம்போக்கு நிலம், தனியார் நிலங்களை குத்தகைக்கு எடுத்து மணல் அள்ளுவது என அப்பகுதியை சேர்ந்த ஆளும்கட்சியை சேர்ந்தவர்கள் ஈடுபடுகின்றனர். 
 

இதுபற்றி அதிகாரிகளிடம் முறையிட்டும் யாரும் கண்டுக்கொள்ளவில்லை, அந்தளவுக்கு வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை, கனிமவளத்துறை, காவல்துறை எனக் கப்பம் கட்டுகிறார்கள். பல அடி ஆழத்திற்கு பள்ளம் போட்டு பகல் - இரவு பேதமில்லாமல், டிப்பர் லாரி, டிராக்டர் மற்றும் மாட்டுவண்டிகளில் உள்ளூர் மற்றும் கர்நாடகாவிற்கு மணல் கடத்தி சென்று விற்பனை செய்து வருகின்றனர்.
 

இதனால் ஆழ்துளை கிணறுகள் நீரில்லாமல் போவதால் கிராமங்கள் தண்ணீரில்லாமல் தவிக்கின்றன. இதனை இப்போதே தடுக்காவிட்டால் தற்போது கிடைக்கும் ஓரளவு குடிதண்ணீரும், இரண்டு வாரத்துக்கு ஒருமுறை தரப்படும் குடிநீரும் தரமுடியாத நிலை ஏற்படும். இதனால் மக்கள் சாலைக்கு வந்து போராடுவார்கள் என்கிறார்கள் ஆம்பூர் பகுதி சமூக ஆர்வலர்கள்.

 

water

 

வேலூர் மாவட்டத்தின் கிழக்கு பகுதியை சேர்ந்த அரக்கோணம், சோளிங்கர், ஆற்காடு, ராணிப்பேட்டை பகுதியை சேர்ந்த கிராம புற மக்கள் குடிதண்ணீர் இல்லாததால் அடிக்கடி சாலை மறியலில் ஈடுபடுகின்றனர். அந்த நிலை ஆம்பூர், வாணியம்பாடி பகுதியை சுற்றியுள்ள கிராமங்களுக்கும் வந்துவிடும் நிலையை மணல் கொள்ளையர்கள் ஏற்படுத்திவருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தண்ணீர் தட்டுப்பாடு ; தாக்குபிடிக்குமா 'சென்னை'

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Water scarcity; Attacking 'Chennai'

கோடைகால வெயிலின் தாக்கம் தீவிரமடைந்திருக்கும் நிலையில் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசும் மேற்கொண்டு வருகிறது. ஆரம்ப சுகாதார நிலையங்களில் நீர்ச்சத்து குறைபாட்டை தடுக்கும் உப்பு சர்க்கரை கரைசல் எனும் ஓ.ஆர்.எஸ் கரைசலை ஆயத்தமாக வைத்திருக்க தமிழக சுகாதாரத்துறைக்கு அரசு அறிவுறுத்தல் கொடுத்துள்ளது. 

கோடை காலங்களில் நீர்ச்சத்து குறைபாடு மற்றும் வெயிலின் தாக்கத்தை தனித்து கொள்வதற்கான ஏற்பாடுகள் ஆகியவற்றைத் தாண்டி மூன்றாவது காரணியாக பார்க்கப்படுவது குடிநீர் தட்டுப்பாடு. சில இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக காலி குடங்களுடன் பொதுமக்கள் போராட்டம் நடத்துவது போன்ற செய்திகள் தென்படுவதே இதற்கான சான்று. அதேபோல் கோடை காலங்களில் தண்ணீர் தட்டுப்பாட்டை அதிகம் கையாளும் இடமாக சென்னை உள்ளது. பல்வேறு ஏரிகளில் உள்ள நீர் இருப்பை நம்பியே சென்னையின் குடிநீர் தட்டுப்பாடு நீக்கப்பட்டு வருகிறது.

சென்னைக்கு குடிநீர் வழங்குவதில் மிக முக்கியமான ஏரி புழல் ஏரி. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 3,300 மில்லியன் கன அடி. தற்போது புழல் ஏரியில் இருக்கும் நீரின் அளவு 2,942 மில்லியன் கன அடி ஆகும். வினாடிக்கு 570 கன அடி நீர் வந்து கொண்டிருக்கும் நிலையில் புழல் ஏரியில் இருந்து வினாடிக்கு 217 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அடுத்து சென்னையின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்குவது சோழவரம் ஏரி. 1,080 மில்லியன் கன அடி மொத்த கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில் தற்போது 118 மில்லியன் கன நீர் மட்டுமே உள்ளது. தற்போது நீர்வரத்து இல்லாத நிலையில் சோழவரம் ஏரியில் இருந்து 168 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.  அடுத்தது செம்பரம்பாக்கம் ஏரி. சென்னை குடிநீர் தேவையில் முக்கிய பங்காற்றுகிறது. மொத்தம் 3,645 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட இந்த ஏரியில் தற்போது நீர் இருப்பு 2,384 மில்லியன் கன அடியாக இருக்கிறது. நீர்வரத்து இல்லாத நிலையில் வினாடிக்கு 46 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

சென்னையின் அடுத்த குடிநீர் ஆதாரம் பூண்டி ஏரி. 3,231 மில்லியன் கன அடி மொத்த கொள்ளளவு கொண்ட இந்த ஏரியில் நீர் இருப்பு 978 மில்லியன் கன அடியாக உள்ளது. இந்த ஏரிக்கும் நீர்வரத்து இல்லாத நிலையில் வினாடிக்கு 525 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக இருக்கும் வீராணம் ஏரி வறண்டு காணப்படும் நிலை இருக்கிறது. 1,475 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட இந்த ஏரியில் நீர் இருப்பு கணக்கிட முடியாத அளவிற்கு மிகவும் குறைவாக இருக்கிறது. வீராணம் ஏரியில் நீர்வரத்தும் இல்லை நீர் வெளியேற்றமும் இல்லாத சூழ்நிலை இருக்கிறது.

இப்படி மொத்தமாக சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஏரிகளின் மொத்த கொள்ளளவு 11.75 டிஎம்சி ஆக இருக்கிறது. இதில் வீராணம் ஏரி முற்றிலும் வறண்டு விட்ட நிலையில் புழல், செம்பரம்பாக்கம், பூண்டி, சோழவரம் உள்ளிட்ட ஏரிகளில் தற்பொழுது 6.88 டிஎம்சி நீர் மட்டுமே இருக்கிறது. வரும் கோடை காலத்தில் இந்த அளவு தண்ணீரே சென்னையின் குடிநீர் பிரச்சனையை தீர்க்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Next Story

குடிநீர் பற்றாக்குறை; மாணவர்களுக்காக மறியலை கைவிட்ட பெண்கள்

Published on 14/03/2023 | Edited on 14/03/2023

 

kallakurichi vadakananthal water scarcity incident cancel due to public exam 

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் வடக்கநந்தல் பேரூராட்சியில் வசிக்கும் மக்களுக்கு சில மாதங்களாக குடிதண்ணீர் பற்றாக்குறை இருந்து வந்துள்ளது. ஏற்கனவே நிலத்தடி நீர் போர்வெல் மூலம் போதுமான அளவுக்கு குடிதண்ணீர் வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது சாலைப்பணியின் காரணமாக பைப்லைன் சேதமடைந்துள்ளது. இதனால் குடிதண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வந்தனர்.

 

இது குறித்து பேரூராட்சி நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் நிர்வாகம் கண்டுகொள்ளாததால் அப்பகுதி பெண்கள் ஒன்று திரண்டு கச்சராப்பாளையம், கள்ளக்குறிச்சி, சின்னசேலம் செல்லும் சாலையில் அக்ராபாளையம் மாரியம்மன் கோவில் அருகே காலி குடங்களுடன் பெண்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த கச்சராப்பாளையம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையை ஏற்றுக்கொள்ளாத பெண்கள் மறியலை தொடர்ந்தனர். இதனால் போக்குவரத்து ஸ்தம்பித்தது.

 

இந்த நிலையில் நேற்று தமிழகம் முழுவதும் பிளஸ்டூ தேர்வு நடைபெற்ற நிலையில் அப்பகுதியில் சின்னசேலம், கள்ளக்குறிச்சி போன்ற ஊர்களில் உள்ள பள்ளிகளுக்கு மாணவ மாணவிகள் பேருந்தில் சென்று தேர்வு எழுதுவதற்கு அரசு பேருந்துகள் மூலம் புறப்பட்டு வந்தனர். அவர்கள் அனைவரும் இந்த சாலைமறியலில் சிக்கிக் கொண்டனர். தேர்வு எழுதச் சென்ற மாணவ மாணவிகள் மறியலில் ஈடுபட்ட பெண்களிடம் சென்று இன்று அரசு பொதுத்தேர்வு எங்களுக்கு அனைவருக்கும் நடக்க உள்ளது. அதை எழுத முடியாவிட்டால் எங்கள் படிப்பு, வாழ்க்கை அனைத்தும் கேள்விக்குறியாகிவிடும். எனவே, எங்கள் அனைவரையும் உங்கள் வீட்டுப் பிள்ளைகளாக எண்ணி தேர்வு எழுதச் செல்வதற்காக பேருந்து செல்ல விடுங்கள் என்று கேட்டுக் கொண்டனர்.

 

சாலைமறியலில் ஈடுபட்ட பெண்கள் பள்ளிப்பேருந்து உட்பட அனைத்து வாகனங்களும் செல்ல போக்குவரத்திற்கு வழிவிட்டு கலைந்து சென்றனர். இதைக் கண்டு மாணவ மாணவிகள் மறியலில் ஈடுபட்ட பெண்களுக்கு நன்றி தெரிவித்தனர் இதையடுத்து வடக்கநந்தல் பேரூராட்சி அலுவலர்கள் அப்பகுதி மக்களுக்கு தண்ணீர் பற்றாக்குறையை சரி செய்வதாக உறுதி அளித்தனர்.

 

இந்த சம்பவத்தால் அக்ராபாளையம் வடக்கநந்தல் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.