Skip to main content

மண்ணை திருடிய அமைச்சரின் பினாமிகள்....

Published on 06/03/2020 | Edited on 06/03/2020

புறம்போக்கு நிலத்தை போலியாக பட்டா பெற்றதோடு அதில் இருந்த மண்ணை ஆயிரக்கணக்கான லோடுகளில் வருடக்கணக்கில் அள்ளியுள்ளனர். ஆளுங்கட்சியான இருவரும் அ.தி.மு.க.வை சேர்ந்தவர்கள் என்பதோடு அமைச்சர் கருப்பண்ணனுக்கு நெருக்கமானவர்கள். இதைக் கண்டுபிடித்து மண் திருடியது உண்மை என்றும் இதற்காக குறைந்தபட்ச அபராதம் மட்டும் ரூபாய் எட்டுக் கோடி கட்ட வேண்டும் என ஈரோடு கோட்டாட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
 

ஈரோடு மாவட்டம் சென்னிமலை பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் மாவட்ட எஸ்.பி.அலுவலகத்திற்கு வந்து மாவட்ட எஸ்.பி.யிடம் மனு கொடுத்தனர். பிறகு அவர்கள் கூறும்போது, "ஈரோடு மாவட்டம் பெருந்துறை தாலுக்காவிற்குட்பட்ட வடமுகம், வெள்ளோடு, கொம்மகோயில் பகுதியைச் சேர்ந்த சேனாபதி மற்றும் சுப்பிரமணியன் இருவரும் கூட்டாக சேர்ந்து கருமாண்டி, செல்லிபாளையம் கிராமத்தில் ஆதிதிராவிடருக்கு அரசால் வழங்கிய நிபந்தனை பட்டா நிலத்தை அதற்கான அரசு ஆவணங்களை மறைத்தும், போலியாக ஏற்படுத்தியும் அரசிற்கு தெரியாமல் கிரயம் பெற்றுள்ளனர். 

sand erode district with out permission

மேலும் முறையற்ற வகையில் அரசிற்கு தெரியாமல் அதிக அளவில் நிலத்தில் உள்ள கிராவல் மண்ணை வெட்டி எடுத்து விற்பனை செய்துள்ளனர். இதனால் அந்தப் பகுதியைச் சுற்றிலும் சுற்றுச்சூழல் மாசடைவதோடு பல அறிய வகை மரம், செடி, பறவை மற்றும் விலங்கினங்களும் அழிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி பெருந்துறை தாலுக்கா சென்னிமலை, கொங்கம்பாளையம் கிராமத்திலும் முறையற்ற வகையில் அரசை ஏமாற்றி கிராவல் மண்ணை வெட்டி எடுத்து விற்பனை செய்துள்ளனர். 


இதனை உறுதிப்படுத்தும் வகையில் ஏற்கனவே இருவர் மீது 7 கோடியே 99 லட்சத்து 73 ஆயிரத்து 100 ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டது. நிபந்தனை பட்டா நிலத்தை அரசினை ஏமாற்றி போலியாக கிரயம் செய்தது தொடர்பாகவும், அரசின் அனுமதி பெறாமல் கிராவல் மண் வெட்டி எடுத்தது தொடர்பாகவும் இவர்கள் இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் ஒரு வருடமாகியும் காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதன் பின்னணியில் அமைச்சர் கருப்பண்ணன் இருக்கிறார்" என்றனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

முறைநீர் கூட்டமைப்பு அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள் கைது

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Farmers who besieged the water association office were arrested

விவசாயிகள் கூட்டமைப்பு அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற விவசாயிகள் கைது செய்யப்பட்ட சம்பவம் ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு பஸ் நிலையம் அருகே கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பின் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்த அலுவலகத்தை சேர்ந்த நிர்வாகிகள், நீர்வளத்துறையின் தவறான நீர் நிர்வாகத்திற்கு துணையாக இருந்தும், கீழ்பவானி கால்வாயில் ஐந்தாவது நனைப்பிற்கு தண்ணீர் இல்லாமல் போக காரணமாக இருந்தும், நீர் பாசனத்திற்கு நம்பகத் தன்மையை இழக்க செய்து போலியாக செயல்படும் கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பை சேர்ந்த நிர்வாகிகளிடம் கீழ்பவானி பாசன உரிமை பெற்ற விவசாயிகள் முறையிடுவதாக அறிவித்திருந்தனர்.

இதையடுத்து கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பினர் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் எனவே இதை தடுத்து நிறுத்த வேண்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். இதனால் கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பு அலுவலகத்திற்கு முறையிட வந்திருந்த விவசாயிகள் 14 பேரை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் கைது செய்து மண்டபத்தில் அடைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

ஈரோடுக்கு வந்து சேர்ந்த தபால் ஓட்டுகள்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
postal vote arriving at Erode

ஈரோடு லோக்சபா தொகுதிக்கு பிற மாவட்டங்களில் பதிவான, 2,258 தபால் ஓட்டு வந்தடைந்தது.

கடந்த பொதுத் தேர்தல்களில் பிற மாவட்டங்களில் வசிப்போர், தேர்தல் பணி செய்வோர், ராணுவத்தினர் போன்றோர் தாங்கள் வசிக்கும் லோக் சபா தொகுதிக்கான ஓட்டை, தபால் ஓட்டாக பெற்று, தபாலில் அனுப்பி வைப்பார்கள். இம்முறை தங்களின் ஓட்டுக்களை, பணி செய்யும் இடத்திலேயே தபால் ஓட்டாக பதிவு செய்தனர். கடந்த, 19ல் ஓட்டுப்பதிவு முடிந்ததும், பிற மாவட்டத்துக்கான பெட்டிகள் திருச்சிக்கு சென்று, அங்கு தொகுதி வாரியாக தபால் ஓட்டுக்களை பிரித்தனர். இரண்டு நாட்களுக்கு முன், அந்தந்த லோக்சபா தொகுதி வாரியாக அனுப்பி வைத்தனர்.

இதுபற்றி ஈரோடு மாவட்ட தேர்தல் பிரிவினர் கூறியதாவது, 'ஈரோடு மாவட்டத்தில், 85 வயதுக்கு மேற்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் போன்றோரிடம், 2,866 தபால் ஓட்டை பதிவு செய்துள்ளோம். இத்துடன் மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபட்டோரிடம், 4,268 ஓட்டு, விருதுநகர் மாவட்டத்தில் பதிவான 6 ஓட்டு, ராணுவத்தில் இருந்து பதிவான, 8 ஓட்டு என, 7,148 தபால் ஓட்டுகள் சேகரிக்கப்பட்டன. அதேசமயம் பிற லோக்சபா தொகுதிக்காக பதிவான ஓட்டு, திருச்சிக்கு கொண்டு செல்லப்பட்டு, லோக்சபா தொகுதி வாரியாக பிரித்து, அந்தந்த தொகுதிக்கு அனுப்பப் பட்டது. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் பெறப்பட்ட, 2,908 ஓட்டு, பிற லோக்சபா தொகுதிக்காகவும், 2 ஓட்டு விளவங்கோடு சட்டசபை தொகுதிக்காகவும் பெட்டியில் வைத்து திருச்சியில் ஒப்படைத்தோம்.

பிற மாவட்டங்களில் பதிவாகி, ஈரோடு லோக்சபா தொகுதிக்காக, 2,258 தபால் ஓட்டுகள் தனி பெட்டியில் ஈரோடு வந்தடைந்தது. தற்போதைய நிலையில், 7,000 தபால் ஓட்டு வரை, ஈரோடு லோக்சபா தொகுதிக்காக பதிவாகி உள்ளன. தவிர ராணுவத்தில் பணி செய்யும், 'சேவை வாக்காளர்கள்', 182 பேருக்கு தபால் ஓட்டு அனுப்பி வைத்துள்ளோம்' என்றார்.