Samiyar Satyanarayanan arrested chennai police

இளம் பெண்ணுக்கு சுமார் ஐந்து ஆண்டுகளாக பாலியல் தொந்தரவு அளித்து வந்த சாமியார் போக்சோ சட்டத்தின் கீழ் மனைவியுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

Advertisment

சென்னையைச் சேர்ந்த சாமியார் சத்திய நாராயணன், கொளத்தூரில் சிறிய அளவில் தியான பீடம் அமைத்து, தியானம், ஆன்மீக சொற்பொழிவை நடத்தி வந்துள்ளார். நாளடைவில் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்க, தியான பீட இடத்தையும் அவர் விரிவுப்படுத்தினார். அப்பகுதியில் பிரபல சாமியாராக விளங்கிய சத்திய நாராயணன், தற்போது ஒரு பெண் அளித்த புகாரில் போக்சோ வழக்கில் சிக்கியுள்ளார்.

Advertisment

தான் 11- ஆம் வகுப்பு படிக்கும்போது பாட்டியுடன் சாமியார் சத்திய நாராயணனின் தியான பீடத்திற்கு சென்றதாகவும், அச்சமயம் சாமியார் பாலியல் தொந்தரவு அளித்ததாகவும் 22 வயது நிரம்பிய அந்த பெண் சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.

தியான பீடத்தில் மயக்க நிலையில் இருந்து எழுந்த என்னிடம் கெட்ட ஆவியை வெளியேற்றியதாக சாமியார் கூறினார் என்று அந்த பெண் தெரிவித்துள்ளார். திருமணமான பின்னர் எதேச்சையாக சாமியார் சத்திய நாராயணனைச் சந்தித்த தருணத்தில், தன்னை ஆபாசமாக படமெடுத்து வைத்துள்ளதாகவும், அவரது விருப்பத்துக்கு இணங்கவில்லையெனில், கணவரிடம் காட்டி விடுவதாக மிரட்டி, பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், அந்த பெண் புகாரில் கூறியுள்ளார். இதனால் தான் கர்ப்பமடைந்ததாகவும், அந்த பெண் கூறியுள்ளார்.

தற்போது மீண்டும் மிரட்டி பாலியல் தொல்லைக் கொடுப்பதாக, காவல் ஆணையரிடம் அந்த பெண் புகார் அளித்ததையடுத்து, விசாரணையில் இறங்கியது காவல்துறை. அதன் அடிப்படையில் சாமியார் சத்திய நாராயணனையும், உடந்தையாக இருந்ததாக, அவரது மனைவியையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

பாலியல் வன்கொடுமை, மிரட்டல், போக்சோ உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதையடுத்து, அவர்கள் இருவரும் புழல் சிறையில் தனித்தனி பிரிவில் அடைக்கப்பட்டுள்ளனர்.