Skip to main content

பல நாட்களாக ஒரே மாஸ்க்... பிலிப்பைன்ஸ்சில் தவிக்கும் இந்திய மாணவர்கள் கண்ணீர்

Published on 21/03/2020 | Edited on 21/03/2020

உலகையே ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் கண்ணுக்குத் தெரியாத கரோனாவால் மக்களிடம் நாளுக்கு நாள் அச்சம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. ஆனாலும் மக்கள் நடமாட்டத்தைக் குறைப்பது ஒன்றே வைரஸ் பரவலைத் தடுக்க முடியும் என்பதை இத்தாலி சம்பவங்களுக்குப் பிறகு உலக நாடுகள் உணர்ந்துள்ளது.

 

 The same mask for many days ... Indian students in the Philippines tears


வேகமாக வைரஸ் பரவி வருவதைப் பார்த்து வெளிநாடுகளில் படிக்கு தங்கள் மகன், மகள்களை உடனே வீட்டுக்கு வாங்க என்று பெற்றோர்கள் அழைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதேபோல வேலைக்காக வெளிநாடு சென்றவர்களையும் பல நாடுகள் திருப்பி அனுப்பிக் கொண்டிருந்தது. ஆனால் கடந்த 3 நாட்களாக வெளிநாட்டில் இருந்து யாரும் வர முடியாத அளவில் தடைகள் விதிப்பட்டுள்ளதால் ஆயிரக்கணக்கானவர்கள் விமான நிலையங்களில் தவித்து வருகின்றனர்.

நீட் தேர்வால் பாதிக்கப்பட்டு பிலிப்பைன்ஸ் நாட்டில் மருத்துவம் படிக்கச் சென்ற இந்திய மாணவர்கள் 400 க்கும் மேற்பட்டவர்கள் சொந்த ஊருகளுக்குத் திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். மாஸ்க்குகள் கூட கிடைக்காமல் பயன்படுத்திய மாஸ்க்குகளையே மீண்டும் மீண்டும் பயன்படுத்தி வரும் அவல நிலை ஏற்பட்டுள்ளதாக கூறுகின்றனர். பிலிப்பைன்ஸ்சில் தவிக்கும் மாணவர்களில் புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பகுதியைச் சேர்ந்த மாணவர் மோனீஸ்கரனைத் தொடர்பு கொண்டு அங்குள்ள சூழ்நிலைகள் குறித்து கேட்டோம்..

பிலிப்பைன்ஸில் வேகமாக வைரஸ் பரவி வருகிறது. அதனால் நாங்கள் சொந்த ஊருக்குப் போகலாம் என்று கிளம்பியுள்ளோம். 17, 18, 19 ஆகிய தேதிகளில் செல்லலாம் என்று சொன்னதால் விமான டிக்கெட் முன்பதிவு செய்துவிட்டு விமானநிலையத்திற்குச் சென்றால் இந்தியாவிற்கு செல்ல இந்திய நாடு அனுமதி கொடுக்கவில்லை என்று 3 நாட்களும் நிறுத்திவிட்டார்கள். அதன் பிறகும் நாங்கள் இந்தியா திரும்ப அனுமதிக்கவில்லை. அதனால் வாடகை வீடு, விடுதிகளில் தங்கி இருக்கிறோம். விடுதியில் இருப்பவர்களுக்கு ஓரளவு உணவு கிடைக்கிறது. ஆனால் வாடகை வீடுகளில் தங்கி இருப்பவர்களுக்கு உணவு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வீதிகள் வெறிச்சோடிக் கிடக்கிறது.

மாஸ்க்குகள் கிடைக்கவில்லை. பல நாட்களாக பயன்படுத்திய மாஸ்க்குகளையே வெயிலில் காயவைத்து மீண்டும் மீண்டும் பயன்படுத்தி வருகிறோம். வேறு வழியில்லை. 17 ந் தேதி விமானநிலையம் சென்று காத்திருந்த போது இந்தியத் தூதரகம் உணவு வழங்கியது. அதன் பிறகு இந்தியா உங்களை அழைத்துக் கொண்டால் உடனே அனுப்புவதாகக் கூறினார்கள். அதேநேரத்தில் சிங்கப்பூர் சென்றால் அங்கிருந்து இந்தியா போகலாம் என்ற வதந்தியும் பரவியுள்ளதால் அதற்காகவும் முயன்று முடியாமல் அறைகளில் முடங்கிக் கிடக்கிறோம்.

எங்களைப் பல கட்ட சோதனைகளுக்குப் பிறகு தான் விமானத்தில் அனுமதிப்பார்கள். அதன் பிறகு இந்திய விமானநிலையத்திலும் சோதிப்பார்கள். வைரஸ் இல்லை என்ற பிறகே வீட்டுக்கோ முகாமிற்கோ அனுப்புவார்கள். அதனால் எங்களைச் சோதனைகள் செய்து உடனே இந்தியாவுக்கு அழைத்துச் செல்ல வேண்டும். இந்திய மாணவர்களைக் காப்பாற்ற மத்திய, மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

அதேபோல எங்கள் குழந்தைகளைக் காப்பாற்றுங்கள் சொந்த ஊருக்கு அழைத்து வாருங்கள் என்று உறவினர்களும் கோரிக்கை வைத்துள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்; இந்தியா வெளியிட்ட அறிக்கை!

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
India is of the opinion that peace should return to the Israel-Iran issue

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே நடைபெற்று வரும் போர் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் 240 பேரை ஹமாஸ் அமைப்பினர் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் சென்றனர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இஸ்ரேல் அதிதீவிரமான தாக்குதலை தற்போது வரை நடத்தி வருகிறது. ஹமாஸ் அமைப்பை மையமாகக் கொண்டு காசா மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 30 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டபோது, பிணைக் கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டிருந்த இஸ்ரேலியர்கள் சிலர் விடுவிக்கப்பட்டனர். மீதமுள்ள பிணைக் கைதிகளில் 31 பேர் உயிரிழந்துள்ளதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்திருந்தது.

இந்தப் போரில் அதிகளவில் பெண்களும், குழந்தைகளுமே உயிரிழந்துள்ளதாக ஐ.நா கவலை தெரிவித்துள்ளது. இதுவரை 30,000க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளதாகவும், 60,000க்கும் மேற்பட்டோர்  படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், போர் நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

இதனிடையே, சிரியா தலைநகர் டமாஸ்கஸ் நகரில் உள்ள ஈரானின் தூதரகம் மீது இஸ்ரேல் படைகள் கடந்த வாரம் அதிரடி தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில், புரட்சிப்படை மூத்த தளபதி உள்பட 13 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து, ஹமாஸ் அமைப்புக்கு ஆயுதம் வழங்கி வருவதாகக் கூறப்படும் ஈரான், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த தயாராகி வருவதாக அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்த நிலையில் இஸ்ரேல் மீது ஈரான் வான்வெளி தாக்குதலை தொடங்கியுள்ளது. 200 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் ராக்கெட்டுகளை ஏவி வான்வெளி தாக்குதலை நடத்தியிருக்கிறது. ஏற்கனவே இஸ்ரேலிய சரக்கு கப்பலை ஈரான் சிறைபிடித்திருந்த நிலையில் தற்போது ஈரான் வான்வெளி தாக்குதலை தொடங்கியுள்ளது. ஆனால் ஈரான் தாக்குதலால் இஸ்ரேலியர்கள் யாரும் உயிரிழக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிரியா, லெபனான் எல்லை பகுதியில் வசிக்கும் இஸ்ரேல் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் நிலவி வருகிறது.

இந்த நிலையில் ஈரான் தாக்குதலுக்கு எதிராக இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா களமிறங்கியுள்ளது.  ஈரானின் ட்ரோன்களை இடைமறித்து அழித்து வருவதாக அமெரிக்க பாதுகாப்புதுறை தெரிவித்துள்ளது. இதனிடையே ஈரான் தாக்குதலை தொடர்ந்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் வெளியுறவுத்துறை பாதுகாப்பு அதிகாரிகளுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டார்.

இது குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இஸ்ரேல், ஈரான் மோதல் விவகாரத்தில் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். இரு நாடுகளிலும் உள்ள இந்தியர்களுடன் தூதரகங்கள் நெருங்கிய தொடர்பில் உள்ளன. இஸ்ரேல், ஈரான் இடையே மோதல் ஏற்பட்டது குறித்து இந்தியா கவலை கொண்டுள்ளது. உடனடியாக மோதலை நிறுத்தி, வன்முறையை கைவிட்டு அமைதிக்குத் திரும்ப வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Next Story

“இந்தியா உலகின் 3ஆவது பெரிய பொருளாதாரமாக மாறும்” - ஜெ.பி.நட்டா பேச்சு!

Published on 07/04/2024 | Edited on 07/04/2024
India will become the 3rd largest economy in the world JP Natta speech

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரபரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், அரியலூர் மாவட்டம் கொல்லாபுரத்தில் சிதம்பரம் மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் கார்த்தியாயினிக்கு ஆதரவாக பாஜக சார்பில் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா கலந்துகொண்டார். அப்போது அவர் பேசுகையில், “பிரதமர் மோடியின் ஆற்றல்மிக்க தலைமையின் கீழ் நாடு, வளர்ச்சியில் நீண்ட பாய்ச்சலைப் பெற்றுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டில் இந்தியா உலகின் 11வது பொருளாதார சக்தியாக இருந்தது. ஆனால் கோவிட் தொற்றுநோய் மற்றும் உக்ரைன் போருக்குப் பிறகும், பிரதமர் மோடியின் ஆற்றல்மிக்க தலைமையின் கீழ், 200 ஆண்டுகள் நம்மை ஆண்ட பிரிட்டனை இந்தியா தோற்கடித்துள்ளது. இப்போது இந்தியா உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக உள்ளது. 2024 இல், பிரதமர் மூன்றாவது முறையாக பிரதமராகும் போது, இந்தியா உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறும்.

இந்தியா கூட்டணியின் தலைவர்கள் ஜாமீனில் இருக்கிறார்கள். ஒரு சிலர் சிறையில் இருக்கிறார்கள். ராகுல் காந்தி, சோனியா காந்தி, ப. சிதம்பரம் ஆகியோர் ஜாமீனில் இருக்கிறார்கள். அரவிந்த் கெஜ்ரிவால் சத்யேந்தர் ஜெயின், மணிஷ் சிசோடியா ஆகியோர் சிறையில் உள்ளனர். திமுக ஆட்சியில் தமிழகத்தின் வளர்ச்சி கேள்விக்குறியாக உள்ளது. தமிழர்களின் கலாச்சார பண்பாடுகளை ஒழிக்க திமுக முயற்சி செய்து வருகிறது. நாடாளுமன்றத்தில் செங்கோல் வைக்கப்பட்ட விவகாரத்திலும் தமிழர்களின் பண்பாட்டை காங்கிரஸ் மற்றும் திமுக எதிர்த்தது. தமிழர்களின் பண்பாடு, சனாதனத்தை பாஜகதான் காத்து வருகிறது. தமிழ் இலக்கியம், மொழி மற்றும் கலாச்சாரத்திற்கு பாஜக உறுதியாக துணை நிற்கிறது” எனத் தெரிவித்தார்.

அதே சமயம் திருச்சியில் ஜே.பி.நட்டா இன்று ரோடு ஷோ செல்வதற்கு காவல்துறை மற்றும் தேர்தல் ஆணையம் அனுமதி மறுக்கப்பட்டது. இதனையடுத்து ஜெ.பி.நட்டாவின் வாகன பேரணிக்கு அனுமதி அனுமதி கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பாஜக சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு அவசர வழக்காக இன்னும் சற்று நேரத்தில் விசாரிக்கப்பட உள்ளது எனத் தகவல் வெளியாகியுள்ளது.