Skip to main content

சிறப்பாக நடந்த சமயபுரம் கும்பாபிஷேகம் - அலட்சியம் காட்டிய அரசு அதிகாரிகள்!

Published on 06/07/2022 | Edited on 06/07/2022

 

Samayapuram Temple went well amid criticism!

 

தமிழ்நாட்டில் உள்ள பிரபலமான கோயில்களில் ஒன்று திருச்சி சமயபுரம் கோயில். பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், மாநிலங்களிலிருந்தும் ஏராளமான மக்கள் இந்தக் கோயிலில் வழிபாடு நடத்துவர். இந்த சமயபுரம் மாரியம்மன் கோயிலில் 108 அடி உயரத்தில் 7 நிலைகளுடன் கூடிய ராஜகோபுரம் புதிதாக கட்டப்பட்டுள்ளது. இந்த ராஜகோபுரம் நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் அருகே உள்ள நன்செய் இடையாரை சேர்ந்த இரட்டை சகோதரர்களான பொன்னர் சங்கர் மூலமாக திருப்பணி செய்யப்பட்டு கட்டி முடிக்கப்பட்டது. இந்தக் கோபுரத்திற்கு இன்று கும்பாபிஷேக விழா நடந்தது. 

 

இந்தக் கும்பாபிஷேக விழாவிற்கு பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். காலை 6.55-ல் இருந்து 7.15 வரை சமயபுரம் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா நடந்தது. இந்த விழாவில் அமைச்சர் கே.என். நேரு கலந்து கொண்டார். இதில் கலந்துகொண்ட பக்தர்கள், இன்னும் சில விஷயங்களை சிறப்பாக செயல்படுத்தியிருக்கலாம் என்று தெரிவித்தனர். மேலும், கும்பாபிஷேக விழாவில் சில குளறுபடிகளும் நடந்தன. 

 

Samayapuram Temple went well amid criticism!

 

இந்த ராஜகோபுரம் திருப்பணி மேற்கொண்ட முக்கிய பங்குதாரர்களான பொன்னர், சங்கர் என்பவர்களுக்கும், சமயபுரம் கோயில் இணை ஆணையரான கல்யாணிக்கும் ஏற்கனவே கருத்து முரண்பாடுகள் இருந்ததால் இரு தரப்பினருக்கும் ஒத்துப் போகாத நிலை இருந்து வந்துள்ளது. பொன்னர் மற்றும் சங்கர் மீது கடந்த அதிமுக ஆட்சியில் மணல் முறைகேடுகளில் ஈடுபட்டதாகவும், இவர்கள் முன்னாள் அமைச்சர் தங்கமணியின் பினாமிகள் எனவும் குற்றச்சாட்டுக்குள்ளானவர்கள். 

 

ஆனால், தற்போது பொன்னர், சங்கர் மற்றும் கோயில் இணை ஆணையர் கல்யாணிக்கும் பழைய பகைகள் குறைந்து சுமுகமான நிலை உருவானதால் மூவரும் இணைந்து இந்த கும்பாபிஷேகத்தை வழிநடத்தினர். கும்பாபிஷேக விழாவை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்ப சேட்டிலைட் சேனல்களுக்கு கோபுரத்தின் மேலே செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. அதேசமயம், திருச்சியில் உள்ள ஒரு உள்ளூர் தொலைக்காட்சிக்கு மட்டும் கோபுரத்தின் மேல் செல்ல அனுமதி வழங்கப்பட்டதும் விமர்சனத்துக்குள்ளானது. இதன் பின்னணி குறித்து விசாரித்ததில் உள்ளூர் தொலைக்காட்சியின் உரிமையாளர், கோவில் இணைய ஆணையர் கல்யாணிக்கு மிகவும் வேண்டப்பட்டவர் என்பதால் அவருக்கு மட்டும் அனுமதி வழங்கி மற்ற தொலைக்காட்சிகளை கோபுரத்தின் மேல் செல்ல அனுமதிக்காமல் தவிர்த்து உள்ளார் எனக் கூறப்படுகிறது. 

 

tt

 

இது ஒரு புறம் இருக்க, காவல்துறையும் சரியான பாதுகாப்பு கொடுக்காததால் மக்கள் அவதியுற்றனர் என கும்பாபிஷேக விழாவுக்கு வந்த பக்தர்கள் தெரிவித்தனர்.  அதற்கேற்றார்போல், அதிகாலை 3.30 மணி அளவில் அனைத்து கதவுகளும் பூட்டப்படும் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், நேரம் கடந்தும் கதவுகள் திறக்கப்பட்டிருந்தன. அதேபோல், அமைச்சர் வருகையின் போது போதிய பாதுகாப்பு வசதிகள் செய்யப்படாததால் கோயிலுக்குள் கூட்டம் அதிகமாகியது. இதனை காவல்துறையினர் மிகுந்த சிரமப்பட்டு கட்டுப்படுத்தினர். 


பொதுவாக கோயிலுக்குள் நடைபெறும் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்ள முக்கியஸ்தர்களுக்கு கோயில் நிர்வாகம் அனுமதி சீட்டு வழங்கப்படும். ஆனால், இன்று சமயபுரம் கோயிலில் சீமான் நடராஜன், வ.உ.சி கண்ணன், ஈஸ்வரன் ஆகிய மூன்று பேர் அந்த அனுமதி சீட்டுகளை வழங்கி உள்ளனர். இதனால், கோயில் பணியாளர்களுக்கு கூட உரிய அனுமதிச்சீட்டு வழங்கப்படவில்லை எனும் குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், சமயபுரம் கோயிலின் முழு அதிகாரமும் இந்த மூன்று பேர் கையில் உள்ளது என்று அவர்கள் தெரிவித்தனர். இதுதொடர்பான விளக்கத்தைப் பெற கோயில் இணை ஆணையர் கல்யாணியைத் தொடர்புகொண்டபோது அவர் அழைப்பை ஏற்கவில்லை. அவர் தரப்பு விளக்கம் தரப்பட்டால் அதுவும் வெளியிடப்படும். 
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

துரை வைகோவிற்கு ஆதரவு திரட்டிய அமைச்சர் அன்பில் மகேஷ்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Minister Anbil Mahesh gathered support for Durai Vaiko

திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில், வருசை ராவுத்தர், சுன்னத் பள்ளிவாசல் அறங்காவலர் அப்துல் சலாம், பள்ளிவாசல் நிர்வாகிகள், திருவெறும்பூர் ஓ.எப்.டி. சிறை மீண்ட அன்னை வேளாங்கண்ணி ஆலய பங்குத் தந்தை  சகாயராஜ் அடிகளார், திருச்சி மலைக்கோட்டை தருமபுரம் ஆதீனம், மௌனமடம் முனைவர் ஸ்ரீமத் மெளன  திருஞான சம்பந்த தம்பிரான் சுவாமிகள், மெத்தடிஸ்ட் தமிழ் திருச்சபை போதகர் பால்ராஜ் மற்றும் ஆலய நிர்வாகிகள், திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பனையகுறிச்சியில் அமைந்துள்ள திருக்குடும்ப ஆலயம் அருளானந்தம் அடிகளார் ஆகியோரை சந்தித்து இந்தியா கூட்டணியின் மதிமுக வேட்பாளர் துரை வைகோ ஆதரவு கோரினார்.

சென்ற இடமெல்லாம் துரை. வைகோவுக்கு அனைவரும் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது முக்கிய நிர்வாகிகள், பொதுமக்களிடம் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மக்களின் பிரச்சனைகளுக்காக, உரிமைகளுக்காக குரல் கொடுக்க துரை வைகோவுக்கு ஆதரவு தாருங்கள் என்று கூறி வாக்கு சேகரித்தார்.

இந்நிகழ்வில் மாநகர திமுக செயலாளர் மதிவாணன், பகுதி செயலாளர்கள்  ராஜ் முகம்மது,  மோகன், மணிவேல், திருவெறும்பூர் ஒன்றிய செயலாளர்கள் கங்காதரன், கே.எஸ்.எம். கருணாநிதி, ஒன்றிய கவுன்சிலர் மகாதேவன், ம.தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் வெல்லமண்டி சோமு, மணவை தமிழ்மாணிக்கம் ம.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் ரொஹையா, சட்டமன்ற உறுப்பினர் பூமிநாதன், ம.தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் மண்டல குழு தலைவர் ஜெயா நிர்மலா, மாமன்ற உறுப்பினர்  பொற்கொடி  ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதையடுத்து இன்று காலையில் திருச்சி கேர் கல்லூரியில் தொழிலதிபர் கே.என். ராமஜெயம் நினைவு நாளை ஒட்டி அவரது சிலைக்கு துரை. வைகோ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா, திமுக மூத்த முன்னோடி திருச்சி செல்வேந்திரன் ஆகியோரை சந்தித்து ஆதரவு கோரினார். பின்னர் மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகளைச் சந்தித்து ஆதரவு திரட்டினார். இந்திய யூனியன் முஸ்லீம் லீக் நிர்வாகிகளைச் சந்திக்கும் துரை வைகோ மாலையில் மனிதநேய மக்கள் கட்சி நடத்தும் இப்தார் நோன்பு திறப்பு விழாவில் கலந்து கொள்கிறார்.

Next Story

“மக்களுக்காக குரல் கொடுப்பேன்” - தி.மு.க. வேட்பாளர் அருண் நேரு உறுதி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
DMK candidate Arun Nehru promised to speak on behalf of the people

பெரம்பலூரை அடுத்த எளம்பலூர் ஊராட்சியில் பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக  வேட்பாளர் அருண் நேரு பெரம்பலூர் ஒன்றியத்தில் எளம்பலூர் கிராமத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். திமுக வேட்பாளர் அருண் நேருவை ஆதரித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் பொதுமக்கள் மத்தியில் ஆதரவு திரட்டினார்.

அப்போது வேட்பாளர் அருண் நேரு பேசியதாவது;- பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதியில் கடந்த கால எம்.பி.க்கள் பல பேரை பார்த்திருப்பீர்கள். நிச்சயமாக நான் வெற்றி பெற்று அவர்களுக்கு வித்தியாசமாக பெரம்பலூர் பகுதியில் உள்ள அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்து கொடுப்பேன். மேலும் காவிரி  பெரம்பலூர் பகுதி குடிநீர் இன்னும் முழுமை அடையாமல் உள்ளது. நான் வெற்றி பெற்றவுடன் பெரம்பலூர் பகுதியில் உள்ள அனைத்து ஊர்களுக்கும் காவிரி குடிநீர் கிடைக்க ஆவண செய்வேன். இந்தப் பகுதியில் சின்ன வெங்காயம் மற்றும் முத்துச்சோளம் ஆகிய பயிர்களை விவசாயம் செய்து உரிய விலை மற்றும் வெங்காயம் பதப்படுத்தும் கிடங்கு இல்லாமல் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதனை உடனே சரி செய்ய ஆவண செய்வேன் என்றார்.

பிரச்சாரத்தின் போது தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர், பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் ஜெகதீசன், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன், கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், பெரம்பலூர் மாவட்ட துணைச் செயலாளர் டி.சி. பாஸ்கர், மாநில செயற்குழு உறுப்பினர் வக்கீல் ராஜேந்திரன், மதிமுக மாவட்டச் செயலாளர் ஜெயசீலன், பெரம்பலூர் திமுக ஒன்றிய செயலாளர் ராஜ்குமார், செயற்குழு உறுப்பினர்கள் ஜெகதீஸ்வரன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் டி.ஆர். சிவசங்கர், ஓவியர் முகுந்தன், முன்னாள் பெரம்பலூர் சேர்மன் ராஜாராம், வேப்பந்தட்டை ஒன்றிய சேர்மன் ராமலிங்கம், துணை சேர்மன் ரெங்கராஜ், எளம்பலூர் ஊராட்சி மன்றத் தலைவர் சித்ராதேவி குமார், காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் வாக்கு சேகரிப்பின் போது உடன் சென்றனர்.

பெரம்பலூர் வட்டம் எளம்பலூர், செங்குணம், அருமடல் கவுல் பாளையம், நெடுவாசல் எறைய சமுத்திரம், கல்பாடி, சிறுவாச்சூர் ஆகிய ஊர்களில் தொடர்ந்து பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் அருண் நேரு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.