Skip to main content

முடிதிருத்தும் தொழிலாளர்கள் நிவாரண உதவித்தொகை பெற அழைப்பு!

Published on 22/05/2020 | Edited on 22/05/2020

 

rupee


முடிதிருத்தும் தொழிலில் ஈடுபட்டுள்ள, நலவாரியத்தில் பதிவு பெறாத தொழிலாளர்கள் தமிழக அரசின் கரோனா நிவாரண உதவித்தொகை பெற சம்பந்தப்பட்ட மண்டல அலுவலகங்களில் விண்ணப்பிக்கலாம் என சேலம் மாநகராட்சி ஆணையர் சதீஸ் தெரிவித்துள்ளார்.
 


கரோனா தொற்று அபாயத்தால் தமிழகத்தில் மார்ச் 24 ஆம் தேதி மாலை முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. தற்போது ஊரடங்கு உத்தரவு ஓரளவு தளர்த்தப்பட்டு உள்ளது என்றாலும், மே 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.


நோய்த்தொற்று அபாயம் அதிகளவில் உள்ளதால் முடி திருத்தும் தொழில்களுக்கு மட்டும் இன்னும் முழுமையாக விலக்கு அளிக்கப்படவில்லை. முதல்கட்டமாக, ஊரகப்பகுதிகளில் மட்டும் சலூன் கடைகளைத் திறக்க அனுமதிக்கப்பட்டு உள்ளது.


தடை உத்தரவு காரணமாக வேலைவாய்ப்பு மற்றும் வருவாய் இழந்து வாடும் அனைத்து அமைப்புசாரா தொழிலாளர்களுக்கும் தமிழக அரசு நிவாரண உதவித்தொகை வழங்கி வருகிறது.


அதன்படி, சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு கரோனா நிவாரண நிதியாக 28.83 லட்சம் ஒதுக்கப்பட்டு உள்ளது. தேசிய நகர்ப்புற வாழ்வாதாரத் திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு அடையாள அட்டை பெற்றுள்ள சாலையோர வியாபாரிகளில், இதுவரை 2,148 வியாபாரிகளிடம் வங்கிக் கணக்கு விவரம், அடையாள அட்டை, ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்கள் பெறப்பட்டு, அவர்களின் வங்கிக் கணக்கிற்கு 1,000 ரூபாய் வீதம் நேரடியாக 21.48 லட்சம் செலுத்தப்பட்டு உள்ளது.
 


இந்நிலையில், முடி திருத்துவோர் நல வாரியத்தில் உறுப்பினர்களாக உள்ள தொழிலாளர்களுக்கு, அந்தந்த மாவட்ட நிர்வாகத்தின் மூலம் இரண்டு தவணைகளாக 1,000 ரூபாய் வீதம் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. 


மேலும், முடி திருத்துவோர் நலவாரியத்தில் பதிவு பெறாத தொழிலாளர்களுக்கும், இதர அமைப்புசாரா தொழிலாளர்களுக்கும் வழங்கப்பட்டதைப் போல நிவாரணத் தொகை வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. 


அதன்படி, மாநகரப் பகுதியில் உள்ள முடி திருத்தும் தொழிலில் ஈடுபடும் பதிவு பெறாத தொழிலாளர்கள் நிவாரண உதவித்தொகை பெற சம்பந்தப்பட்டவர்களின் முடி திருத்தும் கடைகள் அமைந்துள்ள இடத்திற்கு உட்பட்ட மண்டல அலுவலர்களிடம் உரிய ஆவணங்களுடன் மனுவாகச் சமர்ப்பிக்கலாம். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அம்மனுக்களை ஆய்வு செய்து, தகுதியான மனுக்களை மாவட்ட ஆட்சியருக்குப் பரிந்துரை செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டு உள்ளது.


ஆகவே, சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட 4 மண்டலங்களில் உள்ள முடிதிருத்தும் கடைகளில் பணிபுரியும், இதுவரை நலவாரியத்தில் பதிவு செய்யாத தொழிலாளர்கள், தாங்கள் பணிபுரியும் கடைகள் அமைந்துள்ள மண்டல அலுவலகங்களுக்கு நேரடியாகச் சென்று விண்ணப்பத்தை வழங்கலாம். அனைத்து வேலை நாள்களிலும் விண்ணப்பிக்கலாம்.
 

http://onelink.to/nknapp


விண்ணப்பத்துடன் வங்கிக் கணக்கு புத்தகத்தின் முன்பக்க நகல், ஆதார் அட்டை நகல், முடி திருத்துவோர் நல சங்கத்தின் உறுப்பினருக்கான அடையாள அட்டை நகல், கடைசியாக சந்தா தொகை செலுத்தியதற்கான ரசீது நகல் ஆகிய ஆவணங்களையும் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும். 

 


உரிய ஆவணங்களுடன் விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்ற பின்னர், மாநகராட்சி அலுவலர்கள் தலத்தணிக்கை செய்து, தகுதியான விண்ணப்பங்கள் மாவட்ட ஆட்சியருக்குப் பரிந்துரை செய்வர். அதன்மூலம், இதுவரை பதிவு பெறாத முடிதிருத்தும் தொழிலாளர்களுக்கு உரிய நிவாரணத் தொகை கிடைக்க வழிவகை செய்யப்படும் என மாநகராட்சி ஆணையர் சதீஸ் தெரிவித்துள்ளார்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

'இனியாவது ரிப்பன் வெட்டுங்கள் ஏனென்றால் ஆட்சி சீக்கிரம் போகப் போகிறது'-எடப்பாடி பழனிசாமி பேச்சு

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
nn

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.

அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பரப்புரைகள் தீவிரமாக நடைபெற்று  வருகிறது. இந்நிலையில் சேலத்தில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்ட அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், ''பிரம்மாண்டமான கட்டிடத்தை கட்டி கொடுத்திருக்கிறோம். கட்டி 3 வருடம் ஆகிறது. 1200 கோடியில் கட்டிக் கொடுத்திருக்கிறோம். ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடை பூங்கா என பல கட்டிடங்களை கட்டி வைத்திருக்கிறோம். ஆனால் ஒற்றைச் செங்கலை தூக்கிக்கொண்டு ஊர் ஊராக போகிறீர்களே உதயநிதி ஸ்டாலின் பல லட்சம் செங்கலில் கட்டி இருக்கிறோம் ஏன் அதை திறக்க மாட்டேன் என்கிறீர்கள்.

அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட கட்டிடம் என்று இன்றுவரை ரிப்பன் வெட்டுவதற்கு உங்களால் முடியவில்லை. மூன்று வருடம் ஆகிறது. இனியாவது ரிப்பன் வெட்டுங்கள் ஏனென்றால் ஆட்சி சீக்கிரம் போகப் போகிறது. என்ன கொடுமை பாருங்கள் நிறைவேற திட்டத்தை செங்கல்லை தூக்கிக்கொண்டு விளம்பரம் செய்கிறார்கள். ஆனால் கட்டிமுடித்த திட்டத்தை திறக்க முடியாத ஒரே அரசு திமுக அரசு. இந்த திட்டம் கொண்டுவரக் கூடாது என்று பார்க்கிறார்கள்.

இது ஆசியாவிலேயே மிகப்பெரிய திட்டம். கால்நடை பூங்கா திட்டம் முழுக்க முழுக்க விவசாயிகளுக்காக கொண்டுவரப்பட்ட திட்டம். அமெரிக்கா செல்லும் பொழுது அங்கு ஒரு பால் பண்ணைக்கு சென்றேன். அங்கு ஒரு பசு ஒரு நாளைக்கு 65 லிட்டர் பால் கறக்கிறது. அந்த பசு போல நம்முடைய மாநில சீதோசன நிலைக்குத் தக்கவாறு கலப்பின பசுக்களை உருவாக்கி விவசாயிகள் கொடுக்க வேண்டும். 40 லிட்டர் பாலை ஒரு நாளைக்கு கறந்து அவர்கள் வருமான பெருக வேண்டும் என்பதற்காக இந்த அற்புதமான திட்டத்தை கொண்டு வந்தேன். அதில் கோழி வளர்ப்பு, ஆடு வளர்ப்பு, மீன் வளர்ப்பு ஆராய்ச்சி நிலையம் உள்ளது . அதன் மூலமாக கண்டுபிடிக்கப்பட்டு கிடைக்கும் கால்நடைகளை விவசாயிகளுக்கு கொடுத்து இந்த திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதுதான் இந்த திட்டத்தின் குறிக்கோள். இன்று நாம் ஒரு ஆடு வளர்த்தால் 20 கிலோ தான் கிடைக்கும். ஆனால் கலப்பின ஆடு வளர்த்தால் 40 கிலோ கிடைக்கும். இந்த திட்டத்தை முடக்கி வைத்த அரசாங்கம் திமுக அரசாங்கம். கால்நடை பூங்கா வந்திருந்தால் இந்தப் பகுதி பெரிய வளர்ச்சி அடைந்திருக்கும். உலக அளவில் நம்முடைய சேலம் கெங்கவல்லி சட்டமன்ற தொகுதி பிரசித்தி பெற்றிருக்கும்'' என்றார்.

Next Story

குடிநீரில் கலந்த கழிவுநீர்; 50க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சேர்ப்பு

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
sewage mixed with drinking water; More than 50 people were hospitalized

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே குடிநீர் குழாய் உடைந்து கழிவுநீர் கலந்த நிலையில் கழிவுநீர் கலந்த நீரை குடித்த 50க்கும் மேற்பட்டோர் வாந்தி, மயக்கம் என உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியைச் சேர்ந்த முத்தம்பட்டி, ஏத்தாப்பூர், பெத்தநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் குடிநீரில் கழிவுநீர் கலந்துள்ளதாக தெரிகிறது. இதில் 50க்கும் மேற்பட்டோர் வாந்தி, மயக்கம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குடிநீர் குழாயில் ஏற்பட்ட திடீர் உடைப்பு காரணமாக அதில் கழிவுநீர் கலந்ததும் அந்த நீரை பயன்படுத்தியதால் பலருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதும் தெரியவந்துள்ளது. இது குறித்து அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.