Skip to main content

சேலம் எஸ்ஐ 6 லட்சம் 'லபக்'; விரக்தியில் வாலிபர் போலீசார் முன்பு விஷம் குடிப்பு!

Published on 07/10/2020 | Edited on 07/10/2020


சேலத்தை அடுத்த அல்லிக்குட்டையைச் சேர்ந்தவர் சதீஷ் (35). கடந்த சில ஆண்டுக்கு முன்பு, வீராணம் காவல் நிலையத்தில் போலீஸ் நண்பர்கள் குழுவில் பணியாற்றி வந்தார்.

 

 

salem youth incident hospital police si

அப்போது சதீஷூக்கும், அந்த காவல் நிலையத்தில் போலீஸ் எஸ்ஐ ஆக பணியாற்றி வந்த சத்தியமூர்த்தி என்பவருக்கும் நெருக்கமான நட்பு ஏற்பட்டது. இந்த நட்பின் அடிப்படையில் சதீஷிடம் இருந்து அவசர தேவைகள் இருப்பதாகக் கூறி எஸ்ஐ பணம் வாங்கி உள்ளார். சில தவணைகளாக இந்தப் பணம் கொடுக்கப்பட்டுள்ளது. மொத்தம் 6 லட்சம் ரூபாய் வரை சதீஷ் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

 

இதற்கிடையே, ஒரு விபத்தில் சிக்கிய எஸ்ஐ சத்தியமூர்த்தி, தீவிர சிகிச்சைக்குப் பிறகு குணமடைந்தார். பின்னர் அவர் வீராணம் காவல் நிலையத்தில் இருந்து சேலம் கிச்சிப்பாளையம் காவல் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.

 

அவரை சந்தித்த சதீஷ், தான் கொடுத்த 6 லட்சம் ரூபாயை திருப்பிக் கொடுக்குமாறு கேட்டுள்ளார். அதற்கு எஸ்ஐ, நான் பணமே வாங்காதபோது உனக்கு எதற்கு தர வேண்டும்? எனக்கேட்டுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த சதீஷ், பலமுறை அவரிடம் பணத்தைத் திருப்பிக் கேட்டு அணுகியுள்ளார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

 

இதுகுறித்து சதீஷ், சேலம் காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அதன் மீது விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை (அக். 6) காலை 07.00 மணியளவில் கிச்சிப்பாளையம் காவல் நிலையத்திற்கு வந்த சதீஷ், எஸ்ஐ சத்தியமூர்த்தியை பார்க்க முயற்சித்துள்ளார். அப்போது பணியில் இருந்த காவலர்கள், வருகைப்பதிவேடு பணிகள் நடப்பதால் பிறகு வாருங்கள் எனக்கூறியுள்ளனர்.

 

பின்னர் காவல் நிலையத்திற்கு வெளியே சதீஷ் காத்திருந்தார். எஸ்ஐ சத்தியமூர்த்தி, காவலர்கள் சிலரும் அங்கு வந்தனர். அப்போது சதீஷ், என் பணத்தை தராமல் ஏமாத்திட்டீங்க. நான் சாகப்போகிறேன் என்று சொல்லியபடியே, தான் மறைத்து வைத்திருந்த விஷ பாட்டிலை எடுத்து குடித்தார். அதிர்ச்சி அடைந்த காவலர்கள் அவரை மீட்டு, உடனடியாக சேலம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 

காவல் நிலையம் அருகே போலீசார் முன்பே வாலிபர் விஷம் குடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார். 

Next Story

“ரூ.4 கோடிக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை” - நயினார் நாகேந்திரன்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
I have nothing to do with Rs. 4 crore Nayanar Nagendran

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்த பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்கு பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்த பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய 3 மூவரும் கொடுத்து அனுப்பியதாக தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் நேற்று முன்தினம் (23.04.2024) தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர்.

அப்போது நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன் காவல்துறையில் அளித்த வாக்குமூலத்தில், “தனக்கும் கைப்பற்றப்பட்ட பணத்திற்கும் எவ்வித சம்பந்தம் இல்லை. நயினார் நாகேந்திரன் உதவியாளர் மணிகண்டன் 3 நபர்கள் பணம் கொண்டு வருகிறார்கள். எனவே இவர்களின் பாதுகாப்பிற்காக இருவரை அனுப்ப கேட்டுக்கொண்டதால் தான் தன்னிடம் வேலை பார்க்கும் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் என இருவரை அனுப்பி வைத்தேன். சென்னையில் 4 ஹோட்டல்களை வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறேன். அதில் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் இருவரும் பணியாற்றி வருகின்றனர்” என தெரிவித்துள்ளார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நயினார் நாகேந்திரன், மணிகண்டனுக்கு காவல் துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது.

இந்நிலையில் சென்னை தியாகராயர் நகரில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “இந்த விவகாரத்தில் முழுக்க முழுக்க என்னை டார்கெட் செய்கின்றனர். இது ஒரு அரசியல் சூழ்ச்சி ஆகும். ரூ.4 கோடியை எங்கேயோ பிடித்துவிட்டு என் பெயரையும் சேர்த்து பயன்படுத்துகின்றனர். தமிழகத்தில் சுமார் 200 கோடிக்கும் மேல் பணம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் ரூ. 4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது குறித்து விசாரிக்கின்றனர். கைப்பற்றப்பட்ட இந்த பணத்திற்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை. தாம்பரம் காவல் நிலையத்தில் மே 2 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக உள்ளேன்” எனத் தெரிவித்தார்.