Skip to main content

சேலத்தில் இளம்பெண் கழுத்து அறுத்து கொலை! கணவனுக்கு வலைவீச்சு!!

Published on 11/11/2019 | Edited on 11/11/2019

சேலத்தில் குடும்பம் நடத்த வர மறுத்த இளம்பெண்ணை கழுத்து அறுத்து கொலை செய்த கணவனை தனிப்படை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.


சேலம் அருகே உள்ள அல்லிக்குட்டை கங்காபுதூரைச் சேர்ந்த ராமலிங்கம் மகள் மோகனேஸ்வரி (21). இவருக்கும், அல்லிக்குட்டை அருகே உள்ள மன்னார்பாளையத்தைச் சேர்ந்த கோபி (26) என்பவருக்கும், கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. கோபி, கட்டட வேலைக்குச் சென்று வருகிறார். வெவ்வேறு சாதியைச் சேர்ந்த இருவரும் காதலித்துத் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு மூன்று வயதில் சிபு என்ற ஆண் குழந்தை உள்ளது.


பெற்றோர் எதிர்ப்பை மீறி ஓடிப்போய் திருமணம் செய்து கொண்ட மோகனேஸ்வரி, கோவையில் குப்பையாபாளையத்தில் கணவருடன் வசித்து வந்தார். கோபிக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்தது. இதனால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. 

salem women incident husband escape police investigation

 

இந்நிலையில், கணவருடன் கோபித்துக்கொண்டு கடந்த இரு மாதங்களுக்கு முன் மோகனேஸ்வரி சேலத்தில் உள்ள அவருடைய பெற்றோர் வீட்டுக்குக் குழந்தையைத் தூக்கிக்கொண்டு வந்துவிட்டார். பின்னர் அவர், சேலம் ராஜகணபதி கோயில் அருகே உள்ள ஏஆர்ஆர்எஸ் சில்க்ஸ் ஜவுளி கடையில் வேலைக்குச் சென்று வந்தார். 


இதற்கிடையே கோபி, பலமுறை நேரிலும், செல்போன் மூலமும் மோகனேஸ்வரியை குடும்பம் நடத்த வருமாறு அழைத்துள்ளார். ஆனால் அதற்கு மோகனேஸ்வரி ஒத்து க்கொள்ளவில்லை. 


இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை (நவ. 10) இரவு 9 மணியளவில், மோகனேஸ்வரி வேலை முடிந்து வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார். வீட்டை நோக்கி அவர் தார் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது புதர் மறைவில் மறைந்து இருந்த கோபி, திடீரென்று அவரை வழிமறித்து, தகராறு செய்தார். இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் முற்றியது. 


ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற கோபி, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மோகனேஸ்வரியை கழுத்து அறுத்துக் கொலை செய்தார். ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்த அவர் துடிதுடித்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். அதையடுத்து சடலத்தை அங்கேயே போட்டுவிட்டு கோபி தப்பி ஓடிவிட்டார். 


இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் மோகனேஸ்வரியின் தந்தை ராமலிங்கத்திடம் தகவல் அளித்தனர். அவர், இதுகுறித்து வீராணம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், காவல் ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் காவலர்கள் சடலத்தை மீட்டு, உடற்கூறு ஆய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

 


கடந்த சனிக்கிழமை (நவ. 9) கோவையில் தான் வேலை செய்து வரும் இடத்தில் இருந்து சம்பளத்தை வாங்கிக்கொண்டு, எப்படியும் மனைவியை சமாதானம் செய்து கோவைக்கு அழைத்து வந்து விடுவேன் என்று நண்பர்களிடம் கூறிவிட்டு சேலம் வந்திருப்பது தெரிய வந்துள்ளது. சம்பவத்தன்று இரவு அவர் மது குடித்துள்ளார். அதன்பிறகே மனைவியை வழிமறித்து சமதானம் பேசியிருப்பதும், அப்போதும் மோகனேஸ்வரி முரண்டு பிடித்ததால் ஆத்திரத்தில் அவர் கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது. கோபியை தனிப்படை காவல்துறையினர் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் வீராணம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.




 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாக்களிக்க சென்ற இருவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Two people who went to vote fainted and passed way

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர். தமிழ்நாட்டில் காலை 9 மணி நிலவரப்படி 24.34 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

இந்த நிலையில் வாக்களிக்க சென்ற இருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளனர். சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே செந்தாரப்பட்டி ஊராட்சி தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் வாக்களிக்கச் சென்ற சின்னபொண்ணு (77) என்ற மூதாட்டி மயங்கி விழுந்து உயிரிழந்தார். அதேபோன்று, சேலம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் சூரமங்கலம் பகுதியை சேர்ந்த பழனிசாமி(65) தனது மனைவியுடன் வாக்களிக்கச் சென்றபோது மயங்கி விழுந்து பலியானார். சேலம் மாநகரில் நடந்த இந்த துயர் சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.