Skip to main content

பேத்தியின் கழுத்தை நெரித்துக் கொன்ற பாட்டி; மற்றொரு பச்சிளம் குழந்தை உயிர் தப்பியது

Published on 10/02/2023 | Edited on 10/02/2023

 

salem shevapet mental health woman  incident

 

சேலம் செவ்வாய்பேட்டை சோழப்பட்டி சுப்ரமணிய தெருவைச் சேர்ந்தவர் மாதேஸ்வரன். இவருடைய மனைவி சாந்தி (வயது 52). இத்தம்பதியினரின் மகள் மேகலா. திருமணமான மேகலாவுக்கு நான்கு வயதில் மது பிருத்திகா என்ற பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் மேகலா மீண்டும் கருவுற்றிருந்தார். கடந்த 50 நாட்களுக்கு முன்பு அவருக்கு இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்துள்ளது. பிரசவ ஓய்வுக்காக மேகலா, செவ்வாய்பேட்டையில் உள்ள பெற்றோர் வீட்டில் தங்கி இருந்துள்ளார். கடந்த வாரம் துணிகளை துவைத்து அவற்றை உலர்த்துவதற்காக வீட்டின் மொட்டை மாடிக்குச் சென்றுள்ளார் மேகலா.

 

துணிகளை உலர வைத்துவிட்டு மீண்டும் கீழ் தளத்துக்கு வந்தபோது வீட்டின் கதவு உள்பக்கமாக தாழிடப்பட்டு இருப்பதைக் கண்டு சந்தேகம் அடைந்த அவர் கதவுகளை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்தபோது, தனது நான்கு வயது குழந்தையான மது பிருத்திகாவை தாயார் சாந்தி கழுத்தை நெரித்துக் கொலை செய்திருப்பது தெரிய வந்தது. குழந்தையின் சடலத்தை பார்த்து மேகலா கதறித் துடித்துக் கொண்டிருந்த அதே நேரம் சாந்தி, மற்றொரு அறையில் மகளுக்கு இரண்டாவதாக பிறந்த 50 நாள்களே ஆன ஆண் குழந்தையைத் தூக்கிச் சென்று அதையும் கொலை செய்ய முயன்றுள்ளார். அதற்குள் சுதாரித்துக் கொண்ட மேகலா ஓடிச்சென்று குழந்தையை பத்திரமாக மீட்டார். சாந்தி, குழந்தையின் கழுத்தை நெரிக்க முயன்றதில் குழந்தையின் கழுத்து பகுதியில் லேசான காயம் ஏற்பட்டது. இதையடுத்து குழந்தையை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

 

இந்த சம்பவம் குறித்து செவ்வாய்பேட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். முதல்கட்ட விசாரணையில், சாந்தி சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும் அதற்காக சிகிச்சை பெற்று வருவதும் தெரிய வந்தது. இதையடுத்து சாந்தியை மீட்ட காவல்துறையினர் அவரை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருடைய மனநலம் ஓரளவு முன்னேற்றம் அடைவதைக் கண்ட போலீசார் அவரைக் கைது செய்தனர். இதையடுத்து சாந்தியை சேலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது நீதிமன்றம், அவர் முழுமையாக குணமடைந்துவிட்டார் என்ற சான்றிதழை உரிய மருத்துவரிடம் பெற்ற பிறகு ஆஜர்படுத்தும்படி உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து சாந்தியை காவல்துறையினர், சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவருக்கு காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இச்சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்