Skip to main content

சயனைடு கலந்த தேநீர் குடித்து சலூன் தொழிலாளி குடும்பத்துடன் தற்கொலை!

Published on 10/12/2020 | Edited on 10/12/2020

 

salem saloon shop worker family incident police investigation


சேலத்தில், புற்றுநோயால் உயிரிழந்த மூத்த மகனின் பிரிவைத் தாள முடியாமல் சலூன் தொழிலாளி தனது மனைவி, இரண்டு மகன்களுடன் தேநீரில் சயனைடு கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தற்கொலைக்கான காரணம் குறித்து நெஞ்சை உருக்கும் தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன.

 

சேலம் அம்மாபேட்டை வால்காடு பகுதியைச் சேர்ந்தவர் முருகன் (38). முடி திருத்துநரான இவர், அப்பகுதியில் உள்ள ஒரு சலூன் கடையில் வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி கோகிலா (34). இவர்களுக்கு மதன்குமார் (19), வசந்தகுமார் (17), கார்த்திக் (12) ஆகிய மூன்று மகன்கள் இருந்தனர். 

 

இவர்களில் மூத்த மகன் மதன்குமார், புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தான். பல ஊர்களிலும் அவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், கடந்த மார்ச் 19- ஆம் தேதி சிகிச்சை பலனின்றி மதன்குமார் உயிரிழந்தான். 

 

மகன் இறந்த நாள் முதலே பெற்றோர் மனம் உடைந்து காணப்பட்டனர். மகனின் பிரிவுத் துயரம் தாங்க முடியாத முருகனும், அவருடைய மனைவியும் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ள தீர்மானித்தனர். 

 

இதையடுத்து டிச. 8- ஆம் தேதி, வேலைக்குச் சென்றிருந்த தனது இரண்டாவது மகன் வசந்தகுமாரை அவசரமாக வீட்டிற்கு அழைத்துள்ளனர். கடைசி மகன் கார்த்திக் அப்போது வீட்டில் இருந்தான்.

 

கோகிலா அனைவருக்கும் தேநீர் தயாரித்துக் கொடுத்துள்ளார். அந்த தேநீரை மனைவி, மகன்கள் இருவருக்கும் முதலில் கொடுத்துள்ளார் முருகன். தேநீரில் சயனடைக் கலந்து கொடுத்து இருந்ததால் குடித்த சிறிது நேரத்தில் மூவரும் மூக்கு, வாயில் ரத்தம் வெளியேறிய நிலையில் உயிரிழந்தனர். அதன்பிறகு சயனைடு கலந்த தேநீரை முருகனும் குடித்து, தற்கொலை செய்து கொண்டது காவல்துறை விசாரணையில் தெரிய வந்தது.

 

இதுகுறித்து காவல்துறை உதவி ஆணையர் ஆனந்தகுமார் தலைமையில் அம்மாபேட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தினர்.

 

முருகன் வேலை செய்து வந்த சலூன் கடையின் உரிமையாளரை நேரில் அழைத்து விசாரித்தபோது, புற்று நோயால் இறந்த மகன் மதன்குமாரின் படத்தை கையில் வைத்துக்கொண்டு முருகன் பணியிடத்திலும் பலமுறை கதறி கதறி அழுது வந்திருப்பது தெரிய வந்தது. 

 

மதன்குமார் இறக்கும்போது, முருகனின் கையைப் பிடித்துக்கொண்டு, 'அப்பா... உங்க கூட வாழணும்னு ஆசையா இருக்கு. என்னை எப்படியாவது காப்பாத்திடுங்கப்பா,'னு சொல்லிக் கொண்டிருக்கும்போதே அவன் இறந்து விட்டான் என்பதும் விசாரணையில் தெரிய வந்தது.

 

மூத்த மகனின் மறைவுக்குப் பிறகு ஒட்டுமொத்த குடும்பமும் அதிர்ச்சியில் இருந்து மீளவே இல்லை. என் மகன் திரும்பி வந்துடுவான் என்று முருகன் தன் நண்பர்களிடம் அடிக்கடி சொல்லிக்கொண்டு இருந்துள்ளார். அந்த நம்பிக்கையில், முருகன் குடும்பத்தினர் தினமும் இரவு வீட்டு கதவை திறந்து வைத்தபடியேதான் தூங்கி வந்துள்ளனர். 

 

ஒருவேளை அசந்து தூங்கிவிட்டால் மகன் வருவது தெரியாமல் போய் விடுமோ என நினைத்து, வாசலை பார்த்தபடி படுத்துத் தூங்கியுள்ளார் முருகன். மகன் வருவதை பதிவு செய்வதற்காக தலையணை அருகே செல்போனை வைத்து, வீடியோ செயலியை 'ஆன்' செய்து வைத்தபடி தூங்கச் செல்வதையும் வழக்கமாக கொண்டிருந்துள்ளார் முருகன். 

 

அவருடைய செல்போனில் ஒரு வீடியோ பதிவு மட்டும் கிட்டத்தட்ட 3 மணி நேரம் பதிவாகி இருந்தது. அதில், அடிக்கடி முருகன் தனது செல்போனை எடுத்து பார்ப்பதும் பதிவாகி இருந்தது. மகனின் பிரிவுத்துயரத்தை தாள முடியாமல்தான் முருகன் குடும்பத்தினர் தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த போர் வீரனின் நடுகல் கண்டுபிடிப்பு!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
17th century warrior headstone Kantipudi

சேலம் மாவட்டம், மாதநாயக்கன்பட்டி பெருந்தலைவர் காமராசர் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் தலைவர் தலைமை ஆசிரியர், பொறுப்பு ஆசிரியர்களாக அன்பரசி, விஜயகுமார் ஆகியோர் உள்ளனர். இப்பள்ளி மாணவர்கள் கொடுத்த தகவலின்படி ஆசிரியர்களும், மாணவர்களும் களப்பயணத்தின் போது வீரனின்  நடுகல்  ஒன்று கண்டறியப்பட்டது.

பொது ஆண்டு 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த நடுகல்லில் எழுத்துகள் எதுவும் இல்லை. கல்பூமியின் மேற்பரப்பில் 2 அடி உயரமும் 1.5  அடி அகலம் கொண்டது. இந்த நடுகல்லை சுற்றி கல்திட்டை போன்ற அமைப்பும் உள்ளது . நடுகல்லில் போர் வீரனின் சிற்பம்  உள்ளது.
வேட்டைக்கு சென்று இறந்ததற்காக எடுக்கப்பட்ட நடுகல்லாக இருக்கலாம். ஆலிடாசனம் நிலையில் வில்லில் நாணில் அம்பு எய்துவது போன்றும், இடுப்பில் குரு வாளும், காதில் பத்ர குண்டலமும்,   கழுத்தில் சரப்பளி, சவுடி, முத்தாரம் அணிகலன் அணிந்திருப்பது  போன்றும் கையில் தோள்வளை  இருப்பது போன்ற உருவமைப்பு உள்ளது.

17th century warrior headstone Kantipudi

இப்பகுதி தாருகாவனத்திற்க்கு அருகில் இருப்பதால்  இந்த வீரன் வேட்டுவ தலைவனாக இருக்கலாம். இந்த நடுகல் எல்லாம் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் வைக்கப்பட்டதாகும்.  தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் சார்பாக தொல்லியல் சார்ந்த வரலாற்று தகவல்களையும், அதனை பற்றிய விழிப்புணர்வையும் இன்றை இளைய தலைமுறை மாணவர்களுக்கு கொண்டு சேர்ப்பது தான் தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் நோக்கமாகும் என்கின்றனர் தொன்மை பாதுகாப்பு மன்ற ஆசிரியர்கள்.

Next Story

இறுதிக்கட்ட பரப்புரை; சேலத்தில் எடப்பாடி 'ரோட் ஷோ'

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
 Final campaign; Edappadi 'Road Show' in Salem

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. இதற்கிடையில், தமிழகத்தில் அரசியல் கட்சிகள் தஙளது வேட்பாளர்களை அறிவித்து தீவிரப் பிரச்சாரங்கஙளை நடத்தி வருகின்றனர்.

இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கியுள்ளது. இன்னும் ஒரு மணி நேரத்தில் தேர்தல் பரப்புரை முடிவடைய இருக்கின்ற நிலையில் பல்வேறு அரசியல் கட்சிகளும் தீவிர பரப்புரையில் இறங்கியுள்ளது. இந்நிலையில் சேலத்தில் எடப்பாடி பழனிசாமி 'ரோட் ஷோ' என்னும் வாகன பேரணியைத் தொடங்கியுள்ளார். சேலம் அஸ்தம்பட்டி ரவுண்டானாவில் தொடங்கி சேலம் டவுன் வரை இந்த ரோட் ஷோ நடைபெறுகிறது. திறந்தவெளி வாகனத்தில் கை அசைத்தபடி வேட்பாளருடன் எடப்பாடி பழனிசாமி வாகன பேரணி நடத்தி வருகிறார். அஸ்தம்பட்டி ரவுண்டானாவில் இருந்து வின்சென்ட், திருவள்ளுவர் சிலை, முதல் அக்ரகாரம், சின்ன கடைவீதி, கடைவீதி உள்ளிட்ட பகுதிகள் வழியாகச் சென்று இறுதியாகக் கோட்டை மாரியம்மன் கோவில் பகுதியில் பிரச்சாரத்தை நிறைவு செய்ய இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.