Skip to main content

கூலிப்படை ரவுடி கொலை வழக்கில் மூளையாகச் செயல்பட்டவர் உள்பட 3 பேர் நீதிமன்றத்தில் சரண்! 

Published on 24/12/2021 | Edited on 24/12/2021

 

salem rowdy incident police investigation

 

சேலம் அருகே, கூலிப்படை ரவுடி கொலை வழக்கில் மூளையாகச் செயல்பட்டவர் உள்பட 3 பேர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். 

 

சேலம் நாழிக்கல்பட்டியைச் சேர்ந்த பச்சியப்பன் மகன் வைரம் என்கிற திருநாவுக்கரசு (வயது 26). பெயிண்ட் அடிக்கும் தொழிலாளி. முந்தைய அ.தி.மு.க. ஆட்சியின்போது, அக்கட்சிக்கு கூலிப்படை ரவுடியாக செயல்பட்டு வந்தார். 

 

திருமணத்திற்குப் பிறகு தனது மனைவி ரம்யாவுடன் சேலம் அருகே உள்ள அயோத்தியாப்பட்டணத்தில் திருநாவுக்கரசு குடியேறி விட்டார். இந்நிலையில், டிசம்பர் 17- ஆம் தேதியன்று தனது மாமனார் சபரி மலைக்குச் செல்ல இருந்ததால்,  அவரை வழியனுப்பி வைப்பதற்காக சொந்த ஊரான நாழிக்கல்பட்டிக்குச் சென்றிருந்தார். 

 

அதே ஊரைச் சேர்ந்த தனது பழைய கூட்டாளியான சரவணன் என்பவருடன் ஒதுக்குப்புறமான இடத்தில் நின்று பேசிக்கொண்டு இருந்தார். அப்போது,  திடீரென்று அவர்களை 15 பேர் சுற்றி வளைத்து கல்லால் தாக்கியும், சூரிக்கத்தியாலும் தாக்கினர். இதில் திருநாவுக்கரசு உயிரிழந்தார். சரவணனுக்கு சேலம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 

இதுகுறித்து மல்லூர் காவல்நிலைய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில், கடந்த 2019- ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் நடந்த விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின்போது ஏற்பட்ட மோதலில், அதே ஊரைச் சேர்ந்த கல்லூரி மாணவர் திலீப்குமார் என்பவரை திருநாவுக்கரசுவும், அவருடைய கூட்டாளிகளான சரவணன், சூர்யா என்கிற மற்றொரு சரவணன் ஆகிய மூவரும் சேர்ந்து இரும்பு கம்பியால் குத்தியும், கல்லால் தாக்கியும் கொலை செய்தனர். 

 

இந்தக் கொலைக்கு பழிதீர்க்கும் நோக்கத்தில்தான் தற்போது திருநாவுக்கரசு கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை தமிழன்பன் (வயது 35), தங்கவேல் (வயது 34), குமரேசன் (வயது 32) உள்பட 10 பேரை காவல்துறையினர் கைது செய்து, சிறைகளில் அடைத்துள்ளனர். இவர்களில், 17 வயதான இரண்டு சிறுவர்களும் உள்ளனர். 

 

இந்நிலையில், இந்தக் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த சிவா என்கிற பரமசிவம் (வயது 25), ரஞ்சித்குமார் (வயது 25), விக்னேஷ் (வயது 25) ஆகிய மூவரும் டிச. 22- ஆம் தேதி, சேலம் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். நீதிமன்ற உத்தரவின்பேரில் மூவரும் ஓமலூர் கிளைச்சிறையில் அடைக்கப்பட்டனர். 

 

திருநாவுக்கரசு கொலை வழக்கில் இதுவரை 13 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இதில் மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. அவர்களை தனிப்படை காவல்துறையினர் தேடி வருகின்றனர். 

 

மேலும், நீதிமன்றத்தில் சரணடைந்தவர்களுள் சிவா என்கிற பரமசிவம்தான் இந்த கொலையில் மூளையாக செயல்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. சரணடைந்தவர்களை காவலில் எடுத்து விசாரிக்கவும் காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர். 


 

சார்ந்த செய்திகள்

Next Story

9 ஆவது உயிரிழப்பு; வெள்ளியங்கிரியில் மீண்டும் பரபரப்பு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
 9th casualty; Again excitement in Velliangiri

வெள்ளியங்கிரி மலையில் பக்தர்கள் மட்டுமல்லாது ட்ரக்கிங் ஆர்வம் உள்ளவர்களும் மலையேறி அங்குள்ள சிவன் கோவிலில் வழிபாடு செய்வது வழக்கம். மலையேறும் பக்தர்கள் எண்ணிக்கை அங்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாது அண்டை மாநிலங்களில் இருந்தும் மலையேற்ற அனுபவத்தைப் பெறுவதற்காகவும், சிவ லிங்கத்தை தரிசனம் செய்யவும் வெள்ளியங்கிரி மலைக்குச் செல்கின்றனர். மொத்தமாக ஏழு மலைத்தொடர்கள் கொண்ட வெள்ளியங்கிரி மலையில் ஏழாவது மலையில் சிவலிங்கம் உள்ளது. அதனைத் தரிசிப்பதற்காகவே பக்தர்கள் கூட்டம் படையெடுக்கிறது. அதுவும் சிவராத்திரி உள்ளிட்ட முக்கிய சீசன் காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து மலையேறுவர்.

அண்மையில் வெள்ளியங்கிரி மலையில் ஏறிய வேலூரைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்ற இளைஞரும், சேலம் வீரபாண்டி பகுதியைச் சேர்ந்த கிரண் என்ற இளைஞரும் மலையேறும் போதே மூச்சுத்திணறி உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அதனைத் தொடர்ந்து கடந்த 25 ஆம் தேதி தெலுங்கானாவைச் சேர்ந்த சுப்பாராவ் (வயது 68). மருத்துவரான இவர் நான்காவது மலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். அதேபோல் சேலத்தைச் சேர்ந்த தியாகராஜன் என்பவர் குரங்கு பாலம் என்ற பகுதியில் மயங்கி விழுந்து இறந்து போனார். மேலும் 26 ஆம் தேதி நான்கு மணி அளவில் மலையில் ஏறிக் கொண்டிருந்த தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பாண்டியன் என்பவரும் மூச்சுத்திணறி உயிரிழந்தார். அதேபோல் வெள்ளியங்கிரி மலையில் ஏறிய ரகுராம் (வயது 50) என்பவர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.

இப்படியாக வெள்ளியங்கிரி மலையேறும் பக்தர்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு வெள்ளியங்கிரியில் மலையேறும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் வனத்துறை சார்பில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் வெள்ளியங்கிரியில் மலை ஏறிய புண்ணியகோடி என்ற 46 வயது மதிக்கத்தக்க நபர் உடல் குறைவால் உயிரிழந்துள்ளது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. வெள்ளியங்கிரியின் ஒன்றாவது மலையில் சென்று கொண்டிருந்த பொழுது புண்ணியகோடி க்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து அவர் ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில்  செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இந்த உயிரிழப்பின் மூலம் இதுவரை வெள்ளியங்கிரி மலை ஏற சென்று உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒன்பதாக அதிகரித்துள்ளது.

Next Story

பொது இடத்தில் இளம்பெண் மீது தாக்குதல்; வைரலான வீடியோ காட்சி

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Viral video footage of Incident on girl in public place at chennai

சென்னை கோயம்பேடு பகுதியில், பூந்தமல்லி மார்க்கமாக செல்லும் மேம்பாலத்தில், நேற்று (26-04-24) ஒரு இளைஞரும், ஒரு இளம்பெண்ணும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அவர்கள் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் ஒரு கட்டத்தில் முற்றியதால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர், தன்னுடைய வாகனத்தை நிறுத்தி, தன்னுடன் வந்த அந்த பெண்ணை சரமாரியாகத் தாக்கியுள்ளார். மேலும், தான் அணிந்திருந்த ஹெல்மெட்டை வைத்து அந்த பெண்ணை தாக்கியதாகக் கூறப்படுகிறது. 

இதனைப் பார்த்த அங்கிருந்த சிலர், அந்த இளைஞரை தடுத்து நிறுத்தியுள்ளனர். இந்த தாக்குதலில், அந்த இளம்பெண் சம்பவ இடத்திலேயே கீழே விழுந்து மயக்கமடைந்துள்ளார். சிறிது நேரம் கழித்து, அந்த இளைஞர், இளம்பெண்ணை மீட்டு உடனடியாக மீட்டு இருசக்கர வாகனத்தில் அமரவைத்து உடனடியாக அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். இதனை அங்கிருந்த சிலர் தங்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொது இடத்தில் இளம்பெண் ஒருவரை கையாலும், ஹெல்மெட்டாலும் கொடூரமாக தாக்கிய இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர் ஜோசப் என்பவர் ஆன்லைன் மூலம் சென்னை காவல்துறைக்கு புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக அந்த இளைஞர் யார் என்பது குறித்து இருசக்கர வாகன எண்ணை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். பொது இடத்தில் இளம்பெண் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.