Skip to main content

ரவுடியை தீர்த்துக்கட்ட 10 லட்சம் ரூபாய் கூலி! 15 பேர் திடீர் சரண்; திடுக்கிடும் தகவல்கள்!!

Published on 25/12/2020 | Edited on 25/12/2020

 

salem rowdy incident police investigation


சேலம் பிரபல ரவுடி செல்லத்துரையை தீர்த்துக்கட்ட வேலூரைச் சேர்ந்த பிரபல ரவுடி வசூர் ராஜாவுக்கு 10 லட்சம் ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த வழக்கில் திடீரென்று 15 பேர் இரு வேறு நீதிமன்றங்களில் சரணடைந்துள்ளனர். கொலையில், 20- க்கும் மேற்பட்டோருக்கு தொடர்பு இருக்கலாம் என்ற திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

 

சேலம் கிச்சிப்பாளையத்தைச் சேர்ந்தவர் பிரபல ரவுடி செல்லத்துரை (38). நேற்று முன்தினம் (டிச. 22) இரவு, காரில் வந்த ஒரு மர்ம கும்பல், அவரை சுற்றி வளைத்து அரிவாளால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்தது. இச்சம்பவம் தொடர்பாக கிச்சிப்பாளையத்தைச் சேர்ந்த அதிமுக வார்டு செயலாளர் பழனிசாமி, பிரபல ரவுடி சூரி, தண்டி ஜெயகுமார், சதீஷ், ஆகியோர் கைது செய்யப்பட்டனர். 

 

இந்த கொலைக்கு உள்ளூரைச் சேர்ந்த ஜான் என்கிற சாணக்கியன் என்பவர்தான் மூளையாக செயல்பட்டது தெரிய வந்தது. அவர் உள்பட 7 பேர் கரூர் நீதிமன்றத்திலும், ஜானின் தம்பி சாரதி தலைமையில் 8 பேர் நாமக்கல் நீதிமன்றத்திலும் புதன்கிழமை (டிச. 23) சரணடைந்தனர். இதையடுத்து அவர்கள் நீதிமன்ற உத்தரவின்பேரில் சிறையில் அடைக்கப்பட்டனர். 

 

இதற்கிடையே, ரவுடி சூரியின் மகன்களுக்கும் இந்த கொலையில் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கும் காவல்துறை, அவர்களை மொத்தமாக கைது செய்யவும் நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆரம்பத்தில் இந்த கொலையை 13 பேர் கொண்ட கும்பல் செய்திருப்பதாக தகவல்கள் வெளியானது. தற்போது 15 பேர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர். நான்கு பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். மேலும், 10 பேருக்கு தொடர்பு இருக்கலாம் எனத் தெரிய வந்துள்ளது. 

 

காவல்துறை விசாரணையில் மேலும் பல பரபரப்புத் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுபற்றி காவல்துறை தரப்பில் நாம் விசாரித்தோம். கொலையுண்ட ரவுடி செல்லத்துரைக்கு உள்ளூரிலேயே எதிரிகள் அதிகம். எதிர் முகாமைச் சேர்ந்த ரவுடிகள் எப்போது தருணம் கிடைத்தாலும் அவரை போட்டுத்தள்ளி விடும் நோக்கில் நீண்ட காலமாகவே வேறு பார்த்து வந்துள்ளனர். இதற்காகவே எதிரிக்கு எதிரி நண்பன் என்ற ரீதியில் செல்லத்துரைக்கு எதிர் கோஷ்டியான சூரி, ஜான் உள்பட மேலும் சில ரவுடிகளும் ஒரே அணியில் திரண்டு நின்று செல்லத்துரைக்கு நாள் குறித்துள்ளனர்.

 

செல்லத்துரைக்கு வலது கரமாக இருந்த ஜான் என்கிற சாணக்கியன், டிக்டாக் செயலியில் அறிமுகமான ஒரு பெண்ணுடன் நட்பு ஏற்பட்டு நெருங்கிப் பழகி வந்தார். அவரை கழற்றி விட்டுவிட்டு வேறு ஒரு பெண்ணை ஜான் திருமணம் செய்ய முயன்றபோது, அதற்கு செல்லத்துரை எதிர்ப்பு தெரிவித்தார். மேலும், டிக்டாக் பெண்ணை ஜான் மீது புகார் கொடுக்குமாறும் தூண்டியுள்ளார். இதனால்தான் அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டு, செல்லத்துரையை ஜான் பிரிந்து சென்றுள்ளார்.


அதன்பிறகே செல்லத்துரைக்கு எதிர் கோஷ்டியான சூரியுடன் ஜான் இணைந்து கொண்டிருக்கிறார். அவரை தீரத்துக்கட்ட வேலூரைச் சேர்ந்த ரவுடி வசூர் ராஜாவிடம் ஜான் தரப்பு முதல்கட்டமாக 10 லட்சம் ரூபாய் டீல் பேசியுள்ளனர். பணம் கைம்மாறியதை அடுத்து வசூர் ராஜா, செல்லத்துரையை செல்போன் மூலம் மிரட்டி இருக்கிறார். ஆனால் அந்த மிரட்டலை செல்லத்துரை சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை.  

 

அதன் பிறகே வசூர் ராஜா அனுப்பி வைத்த குண்டர்கள், உள்ளூர் ரவுடிகளுடன் சேர்ந்து கொண்டு செல்லத்துரையை சரமாரியாக வெட்டி சாய்த்துள்ளனர். இதையடுத்து வசூர் ராஜா மற்றும் அவருடைய கூட்டாளிகளை பிடிக்கவும் காவல்துறை தனிப்படை விரைந்துள்ளனர். 

 

ரவுடி வசூர் ராஜா மீது ஏற்கனவே 6 கொலை, 7 கொலை முயற்சி வழக்குகள் உள்பட மொத்தம் 47 வழக்குகள் உள்ளன. செல்லத்துரை கொலை, அவருக்கு 48வது வழக்காகும். பெரும்பாலும் சென்னை, பெங்களூரு, கொச்சி ஏரியாக்களில் சுற்றித்திரியும் வசூர் ராஜா, தன்னுடைய குண்டர்கள் மூலமே தமிழ்நாட்டில் ஆள் கடத்தல், கொலை, மிரட்டி பணம் பறித்தல் உள்ளிட்ட வேலைகளைச் செய்து வந்துள்ளார். அவ்வளவாக நேரில் களத்தில் இறங்காத வசூர் ராஜா, பெங்களூருவில் பதுங்கி இருக்கலாம் என ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அவரைத்தேடியும் காவல்துறையில் ஒரு குழுவினர் பெங்களூரு விரைந்துள்ளனர்.

 

செல்லத்துரை கொலை வழக்கில் மேலும் பல திடுக்கிடும் மர்மங்கள் வெளி வரும் எனத் தெரிகிறது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாக்களிக்க சென்ற இருவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Two people who went to vote fainted and passed way

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர். தமிழ்நாட்டில் காலை 9 மணி நிலவரப்படி 24.34 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

இந்த நிலையில் வாக்களிக்க சென்ற இருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளனர். சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே செந்தாரப்பட்டி ஊராட்சி தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் வாக்களிக்கச் சென்ற சின்னபொண்ணு (77) என்ற மூதாட்டி மயங்கி விழுந்து உயிரிழந்தார். அதேபோன்று, சேலம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் சூரமங்கலம் பகுதியை சேர்ந்த பழனிசாமி(65) தனது மனைவியுடன் வாக்களிக்கச் சென்றபோது மயங்கி விழுந்து பலியானார். சேலம் மாநகரில் நடந்த இந்த துயர் சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

காவு வாங்கிய குளம்; கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்திய சிறுவர்களின் உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 The pool of water; The lost their live of the boys left the village in mourning

கடலூரில் குளத்தில் இறங்கி குளிக்க முயன்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது நந்தீஸ்வர மங்கலம். இந்தக் கிராமத்தில் வசித்து வந்த ராமமூர்த்தி என்பவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். திலீப் ராஜ்(16), தினேஷ்(14) ஆகிய இரு மகன்களும் வெளியூரில் விடுதியில் தங்கி படித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.

சிறுவர்கள் திலீப் ராஜ் மற்றும் தினேஷ் ஆகியோர் வீட்டுக்கு அருகே உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளனர். அப்பொழுது ஆழமான பகுதிக்கு இருவரும் குளிக்கச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் நீரில் மூழ்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குளத்துக்கு குளிக்கச் சென்ற சிறுவர்கள் காணாமல் போனதால் பதறியடித்த பெற்றோர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு குளத்தில் இறங்கி தேட ஆரம்பித்தனர். பின்னர், வெகு நேரத்திற்கு பின் இருவரின் உடலையும் கைப்பற்றிய மீட்புப்படையினர் உடல்களை கரைக்கு கொண்டு வந்தனர். சிறுவர்களின் உடல்களை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். உயிரிழந்த சிறுவர்கள் இருவரின் உடலும் காட்டுமன்னார் கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விடுதியில் தங்கிப் படித்து வந்த சிறுவர்கள் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த நிலையில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.