Skip to main content

கல்லூரி பேருந்து ஏறி மாணவர் ஒருவர் உயிரிழப்பு!

Published on 01/06/2022 | Edited on 01/06/2022

 

salem private college bus incident one student passed away

 

சேலத்தில், தனியார் கல்லூரி பேருந்து மோதி, அதே கல்லூரியின் மாணவர் பலியானார். இதையடுத்து கல்லூரி நிர்வாகத்தைக் கண்டித்து சக மாணவர்கள் மறியலில் ஈடுபட்டனர்.

 

சேலம் கோட்டை சின்னசாமி தெருவைச் சேர்ந்தவர் முகமது ரபீ. இவருடைய மகன் அப்துல் சலாம் (21). சின்னதிருப்பதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் (சிஏ) இறுதி ஆண்டு படித்து வந்தார்.

 

மே 30ம் தேதி மாலை வகுப்புகள் முடிந்ததை அடுத்து, வீட்டுக்குச் செல்வதற்காக வழக்கம்போல் கல்லூரி பேருந்தில் ஏறினார். கல்லூரி நுழைவாயில் அருகே வந்தபோது, அப்துல்சலாம் திடீரென்று பேருந்தில் இருந்து கீழே இறங்கினார். அப்போது பேருந்தின் பின்பக்க சக்கரத்தில் சிக்கி, அவர் உயிரிழந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவர்கள், செவ்வாய்க்கிழமை (மே 31) காலை கல்லூரி முன்பு தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். வெளியில் இருந்து கல்லூரிக்குள் நுழைய முயன்ற பேருந்துகளை மறித்தும் போராட்டம் நடத்தினர். இதனால் கல்லூரிக்கு வெளியே 27 பேருந்துகள் உள்ளே செல்ல முடியாமல் வழியிலேயே அணிவகுத்து நின்றன.

 

இதுகுறித்து தகவல் அறிந்த அஸ்தம்பட்டி காவல்நிலைய காவல்துறையினர், நிகழ்விடம் விரைந்தனர். அவர்கள் மாணவர்களிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மாணவர்கள், அப்துல் சலாமை இழந்து வாடும் அவருடைய பெற்றோருக்கு கல்லூரி நிர்வாகம் ஆறுதல் கூறவில்லை; கல்லூரிக்கு விடுமுறை விடவில்லை. மேலும், இறந்த மாணவரின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றனர். வட்டாட்சியர் செம்மலை, வருவாய் ஆய்வாளர் பாஸ்கரன் ஆகியோரும் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். கல்லூரி தாளாளர் ராஜேந்திரபிரசாத்தும் மாணவர்களிடம் பேசினார். மாணவரின் உடல் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது,  உதவியாக கல்லூரி சார்பில் இரண்டு ஊழியர்கள் அங்கு இருந்தனர்.

 

மாணவரின் பெற்றோரிடமும், அவருடைய சமுதாய பெரியோர்களிடமும் பேசிவிட்டேன். கல்லூரிக்கு விடுமுறை விடப்படும் என்றும் கூறினார். இதில் திருப்தி அடையாத மாணவர்கள் போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டனர். இதையடுத்து, கல்லூரி தாளாளர் நேரடியாக அரசு மருத்துவமனைக்குச் சென்று, அப்துல் சலாமின் பெற்றோரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அதன்பிறகு, அடுத்த சுற்று பேச்சுவார்த்தை நடந்தது. இதையடுத்து பகல் ஒரு மணி அளவில் மாணவர்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர். மேலும், உயிரிழப்புக்குக் காரணமான பேருந்தின் ஓட்டுநரை காவல்துறையினர் கைது செய்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாக்களிக்க சென்ற இருவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Two people who went to vote fainted and passed way

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர். தமிழ்நாட்டில் காலை 9 மணி நிலவரப்படி 24.34 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

இந்த நிலையில் வாக்களிக்க சென்ற இருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளனர். சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே செந்தாரப்பட்டி ஊராட்சி தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் வாக்களிக்கச் சென்ற சின்னபொண்ணு (77) என்ற மூதாட்டி மயங்கி விழுந்து உயிரிழந்தார். அதேபோன்று, சேலம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் சூரமங்கலம் பகுதியை சேர்ந்த பழனிசாமி(65) தனது மனைவியுடன் வாக்களிக்கச் சென்றபோது மயங்கி விழுந்து பலியானார். சேலம் மாநகரில் நடந்த இந்த துயர் சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த போர் வீரனின் நடுகல் கண்டுபிடிப்பு!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
17th century warrior headstone Kantipudi

சேலம் மாவட்டம், மாதநாயக்கன்பட்டி பெருந்தலைவர் காமராசர் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் தலைவர் தலைமை ஆசிரியர், பொறுப்பு ஆசிரியர்களாக அன்பரசி, விஜயகுமார் ஆகியோர் உள்ளனர். இப்பள்ளி மாணவர்கள் கொடுத்த தகவலின்படி ஆசிரியர்களும், மாணவர்களும் களப்பயணத்தின் போது வீரனின்  நடுகல்  ஒன்று கண்டறியப்பட்டது.

பொது ஆண்டு 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த நடுகல்லில் எழுத்துகள் எதுவும் இல்லை. கல்பூமியின் மேற்பரப்பில் 2 அடி உயரமும் 1.5  அடி அகலம் கொண்டது. இந்த நடுகல்லை சுற்றி கல்திட்டை போன்ற அமைப்பும் உள்ளது . நடுகல்லில் போர் வீரனின் சிற்பம்  உள்ளது.
வேட்டைக்கு சென்று இறந்ததற்காக எடுக்கப்பட்ட நடுகல்லாக இருக்கலாம். ஆலிடாசனம் நிலையில் வில்லில் நாணில் அம்பு எய்துவது போன்றும், இடுப்பில் குரு வாளும், காதில் பத்ர குண்டலமும்,   கழுத்தில் சரப்பளி, சவுடி, முத்தாரம் அணிகலன் அணிந்திருப்பது  போன்றும் கையில் தோள்வளை  இருப்பது போன்ற உருவமைப்பு உள்ளது.

17th century warrior headstone Kantipudi

இப்பகுதி தாருகாவனத்திற்க்கு அருகில் இருப்பதால்  இந்த வீரன் வேட்டுவ தலைவனாக இருக்கலாம். இந்த நடுகல் எல்லாம் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் வைக்கப்பட்டதாகும்.  தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் சார்பாக தொல்லியல் சார்ந்த வரலாற்று தகவல்களையும், அதனை பற்றிய விழிப்புணர்வையும் இன்றை இளைய தலைமுறை மாணவர்களுக்கு கொண்டு சேர்ப்பது தான் தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் நோக்கமாகும் என்கின்றனர் தொன்மை பாதுகாப்பு மன்ற ஆசிரியர்கள்.