Skip to main content

இளம் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்! மாமனார் உட்பட மூவர் மீது வன்கொடுமை வழக்கு!     

Published on 25/06/2022 | Edited on 25/06/2022

 

salem police registered case on Father in Law and husband of woman

 

வாழப்பாடி அருகே, மகன் ஊரில் இல்லாத நேரத்தில் மருமகளை தனிமையில் இருக்க அழைத்த மாமனார் உள்ளிட்ட மூன்று பேர் மீது பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.

 

சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே உள்ள வேப்பிலைப்பட்டியைச் சேர்ந்தவர் வெங்கடேஸ்வரன். லாரி ஓட்டுநர். இவருடைய மனைவி பிரவீணா (வயது 24, பெயர் மாற்றப்பட்டுள்ளது). வெங்கடேஸ்வரன் வேலை நிமித்தமாக அடிக்கடி வெளியூர் சென்று விடுவார். வடமாநிலங்களுக்கு லாரியை ஓட்டிச்சென்றால், திரும்பி வர 10 நாள்களுக்கு மேல் ஆகும். கணவருடைய தந்தை பச்சமுத்து, தாயார், தனலட்சுமி ஆகியோரும் இவர்களுடன் ஒரே வீட்டில் வசிக்கின்றனர். 


மகன் ஊரில் இல்லாத நேரங்களில் மருமகளிடம் மாமனார் பச்சமுத்து சில நேரம் தவறாக நடக்க முயன்றுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், கடந்த ஜூன் 20ம் தேதி, வீட்டில் தனியாக இருந்த பிரவீணாவிடம் அவருடைய மாமனார் மீண்டும் தவறாக நடக்க முயன்றார். தந்தை ஸ்தானத்தில் இருந்து கொண்டு, தன்னிடம் தவறாக நடந்து கொள்ளலாமா? என பிரவீணா, மாமனாரை திட்டியுள்ளார். கோபம் அடைந்த பச்சமுத்து, தனது ஆசைக்கு இணங்காததால் உடனடியாக வீட்டை விட்டு வெளியே போ என விரட்டியுள்ளார். மேலும், மருமகளை தாக்கியுள்ளார். 


வெளியூரில் இருந்து வீடு திரும்பிய தன் கணவரிடம், வீட்டில் தனக்கு ஏற்பட்ட கொடுமைகளைச் சொல்லி பிரவீணா அழுது புலம்பியுள்ளார். ஆனால் கணவரும், மாமியாரும் பச்சமுத்துவை கண்டிக்காமல் இருந்ததோடு, அவரின் நடத்தையை விமர்சனம் செய்துள்ளனர். இதனால் விரக்தி அடைந்த பிரவீணா, மாமனார் தன்னிடம் தவறாக நடக்க முயன்ற சம்பவத்தை, தன்னுடைய தந்தைக்கு செல்போனில் தொடர்பு கொண்டு கூறினார். அவரும் நேரில் வந்து விசாரித்தபோது, அவரையும் பச்சமுத்து ஆபாசமாக திட்டி அனுப்பியுள்ளார். 


இதையடுத்து பிரவீணா, வாழப்பாடி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். காவல்துறை விசாரணையில், மருமகளை தனிமையில் இருக்க அழைத்த மாமனார் பச்சமுத்து மற்றும் குற்றத்திற்கு உடந்தையாக இருந்ததாக அவருடைய மனைவி தனலட்சுமி, மகன் வெங்கடேஸ்வரன் ஆகிய மூன்று பேர் மீதும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை வழக்குப் பதிவு செய்தனர்.


தலைமறைவாக உள்ள மூவரையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர். இச்சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாக்களிக்க சென்ற இருவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Two people who went to vote fainted and passed way

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர். தமிழ்நாட்டில் காலை 9 மணி நிலவரப்படி 24.34 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

இந்த நிலையில் வாக்களிக்க சென்ற இருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளனர். சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே செந்தாரப்பட்டி ஊராட்சி தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் வாக்களிக்கச் சென்ற சின்னபொண்ணு (77) என்ற மூதாட்டி மயங்கி விழுந்து உயிரிழந்தார். அதேபோன்று, சேலம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் சூரமங்கலம் பகுதியை சேர்ந்த பழனிசாமி(65) தனது மனைவியுடன் வாக்களிக்கச் சென்றபோது மயங்கி விழுந்து பலியானார். சேலம் மாநகரில் நடந்த இந்த துயர் சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.