Skip to main content

மாஜி முதல்வரின் உதவியாளரிடம் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் புகார் அளிக்கலாம்; சேலம் காவல்துறையினர் அழைப்பு!

Published on 01/12/2021 | Edited on 01/12/2021

 

Salem police call compliant aide to a former chief

 

அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடி செய்த புகாரில் கைதாகி உள்ள முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் உதவியாளர் மணியிடம் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் புகார் அளிக்கலாம் என சேலம் மாவட்டக் குற்றப்பிரிவு காவல்துறையினர் அழைப்பு விடுத்துள்ளனர். 

 

சேலம் மாவட்டம், காடையாம்பட்டியைச் சேர்ந்தவர் மணி (52). இவர், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் உதவியாளராக பணியாற்றி வந்தார். அப்போது முதல்வருடன் இருந்த நெருக்கத்தைப் பயன்படுத்தி, பலரிடம் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணத்தை வசூலித்து மோசடி செய்ததாகப் புகார்கள் கிளம்பின. ஆனாலும், அப்போது அதிமுக ஆட்சி அதிகாரத்தில் இருந்ததால் பாதிக்கப்பட்டவர்கள் துணிச்சலாகப் புகார் கொடுக்க முன்வரவில்லை. இப்படி ஏமாந்தவர்களில் சொந்தக் கட்சியினரும் ஏராளமானோர் உள்ளதாகச் சொல்லப்படுகிறது.

 

இது ஒருபுறம் இருக்க, கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியைச் சேர்ந்த பி.இ., பட்டதாரி இளைஞரான தமிழ்ச்செல்வன் (29) என்பவரிடம், தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாங்கிக் கொடுப்பதாக 17 லட்சம் ரூபாய் வாங்கியிருக்கிறார் மணி. இதற்கு மணியின் நண்பர் செல்வக்குமார் என்பவரும் உடந்தையாக இருந்துள்ளார். ஆனால் சொன்னபடி வேலை வாங்கித் தராததோடு, பணத்தையும் தராமல் இழுத்தடித்து வந்துள்ளார். இதற்கிடையே மணி 4 லட்சம் ரூபாய் மட்டுமே தமிழ்ச்செல்வனிடம் கொடுத்துள்ளார். மீதப்பணத்தைக் திருப்பிக் கேட்டு பலமுறை நடையாய் நடந்தும் அவரை ஏமாற்றி வந்துள்ளார். 

 

இதுகுறித்து தமிழ்ச்செல்வன் சேலம் மாவட்டக் குற்றப்பிரிவில் புகார் அளித்தார். மணி, செல்வக்குமார் ஆகிய இருவர் மீதும் மோசடி, கூட்டுச்சதி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதற்கிடையே அவர்கள் இருவரும் முன் ஜாமீன் கேட்டு நீதிமன்றம் சென்றனர். அங்கு அவர்களுடைய மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இதையடுத்து அவர்கள் தலைமறைவாகிவிட்டனர். 


இந்நிலையில், நவ. 28ம் தேதியன்று மணி சொந்த ஊருக்கு வந்திருந்தபோது அவரை காவல்துறையினர் சுற்றி வளைத்து கைது செய்தனர். சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள மணியை விரைவில் காவலில் எடுத்து விசாரிக்க உள்ளனர்.
 

இதற்கிடையே, வேலை வாங்கிக் கொடுப்பதாக பண மோசடி செய்ததாக இதுவரை 14 பேர் மணி மீது புகார் அளித்துள்ளனர். இதையடுத்து, மணியிடம் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் உரிய ஆதாரங்களுடன் புகார் தெரிவிக்கலாம் என சேலம் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் அழைப்பு விடுத்துள்ளனர். அரசு வேலை மட்டுமின்றி கட்சிப்பதவிக்காக பணம் கொடுத்திருந்தாலும் அதுபற்றியும் புகார் தெரிவிக்கும்படி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
 

இது மட்டுமின்றி மணியின் கூட்டாளியான செல்வக்குமாரைப் பிடிக்கவும் தனிப்படையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.